Friday, December 21, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 179 நரக வர்ணனை - 1

பரீக்ஷித் கேட்டான்
மஹரிஷியே! நரகங்களைப் பற்றிக் கூறப்போவதாய்ச் சொன்னீர்கள். அவை இவ்வுலகிலேயே ஏதாவது தனிப்பட்ட இடமா? மூவுலகிற்கும் அப்பாற்பட்டவையா? அல்லது இடைப்பட்டவையா?

ஸ்ரீ சுகர் பதில் சொல்ல த் துவங்கினார்.

பாண்டுகுல விளக்கே! நரகங்கள் மூவுலகங்களுக்குள்தான் இருக்கின்றன. தென் திசையில் பூமிக்கடியில் தண்ணீருக்கு மேல் உள்ளன. இந்த தென் திசையில் அக்னிஷ்வார்த்தர்கள் முதலான பித்ருகணங்கள் வசிக்கிறார்கள்.

சூரிய பகவானின் மகனான யமதர்மராஜன் இந்த நரகத்தில்தான் தன் சேவகர்களோடு வசிக்கிறார். பகவானின் கட்டளைப்படி ஜீவன் இறந்தபின்பு யமதூதர்களைக் கொண்டு நரகத்திற்கு அழைத்துவந்து அந்த ஜீவராசிகளின் தீய செயலுக்கேற்ப பாவத்தின் பயனான நரக தண்டனை அளிக்கிறார்.

நரகங்கள் மொத்தம் இருபத்தெட்டு. 
அவை

தாமிஸ்ரம்
பிறரின், செல்வம், குழந்தைகள், பெண்களை அபகரிப்பவன் இந்த நரகத்தில் தள்ளப்படுவான். அவனுக்கு நீரும் தராமல் தடியால்‌அடித்து பயமுறுத்துவார்கள்.

அந்ததாமிஸ்ரம்

பிறரை ஏமாற்றி அவனுடைய மனைவியை அனுபவிப்பவ்னுக்கு இந்த நரகம் கிட்டும். அங்கு அவனுக்குப் பலவிதமான துன்பங்கள் நேரும்.

ரௌரவம்

தன்னையும், தன் குடும்பத்தையும் காக்க, பிறரைத் துன்புறுத்துபவன் இந்த நரகத்தில் வீழ்வான்.

ஒருவன் எந்த ஜீவனை எவ்விதமாகத் துன்புறுத்துகிறானோ, அந்த ஜீவன் ரௌரவத்தில் (ருரு என்னும் பாம்பைக்காட்டிலும்  கொடிய ஜீவனாக) அதே விதமாக அவனைத் துன்புறுத்தக் காத்திருக்கிறது.

மஹாரௌரவம்
இதுவும் ரௌரவம் போன்றது. இதில் பச்சை மாமிசம் உண்ணும் ருருக்கள் அவனைக் கடித்துக் குதறும்.

கும்பீபாகம்

இரக்கமின்றிப் பறவைகளையும் விலங்குகளையும் வதைப்பவனுக்கு இந்த நரகம் உண்டு. இங்கு அவனைக் கொதிக்கும் எண்ணெயில் போட்டு வறுப்பார்கள்.

காலஸூத்ரம்

எவன் பெற்றோரையும், வேதத்தையும் பகைக்கிறானோ அவன் இந்நரகத்திற்கு வருவான். இது அடிப்பாகத்தில் தாமிரத்தால் ஆனது. கொதிக்கும் நடுப்பாகம் கொண்டது. எல்லாப் பக்கமும் சூடு பொசுக்கிவிடும். நிற்கவோ, நடக்கவோ, உட்காரவோ, படுக்கவோ முடியாமல் பசிதாகத்தால் துன்புறுத்தப்படுவான்.

அஸிபத்ரவனம்

எந்த ஒரு ஆபத்தும் இல்லாத அமைதியான காலத்திலும், எந்த நிர்பந்தமும் இன்றி நாத்திக வழியைத் தேர்ந்தெடுப்பவனுக்கு இந்த நரகத்தில் சவுக்கடி கிடைக்கும். கூர்மையான பனைமட்டைகளால் அவன் உடல் கிழிக்கப்படும்.

ஸூகரமுகம்

எவன் பதவியில் இருக்கும் நண்பன், அல்லது உறவுக்காரனைப் பயன்படுத்தி தண்டிக்கத்  தகாதவர்களைத் துன்புறுத்துகிறானோ, அவனை இங்கு யமதூதர்கள் ஆலையில் இட்ட கரும்பாகப் பிழிந்தெடுக்கிறார்கள்.

அந்தகூபம்

இருள் சூழ்ந்த பாழும்கிணறுபோல்‌ உள்ள இவ்விடத்தில் ஜீவனால் துன்புறுத்தப்பட்ட பசுக்கள், விலங்குகள், ஊர்வன, கொசு, மூட்டைப்பூச்சி, பறவை, பாம்பு முதலியன எல்லாப் பக்கங்களிலிருந்தும் கடிக்கின்றன.

கிருமிபோஜனம்

பிறருக்கு எதையாமல் தான் மட்டும் உண்பவன், தேவ, பித்ரு, மனுஷ, பூத, ப்ரும்ம யக்ஞங்களைச் செய்யாமல் சுகங்களில்‌உழல்பவன் இங்கு புழுவாய் இருந்து புழுக்களால் கடிக்கப்பட்டு புழுக்களையே உண்கிறான்.

ஸந்தம்சம்

பிறருடைய தங்கம், ரத்தினங்களைத் திருடுபவன் இங்கு இரும்புக்கோலால் சூடு போடப்படுகிறான்.

தப்தஸூர்மி

தகாதவர்களுடன் புணர்பவன்/ள் இந்நரகத்தில் தள்ளப்பட்டு  பழுக்கக் காய்ச்சிய ஆண் சிலையைப்‌ பெண்ணையும், பழுக்கக் காய்ச்சிய பெண் சிலையை ஆணையும் கட்டியணைக்கச் சொல்லப்படுவார்கள்.

வஜ்ரகண்டக சால்மலி

விலங்குகளைப் புணர்பவனை இந்த நரகத்தில் தள்ளி முட்கள்‌ நிறைந்த மரத்தில்‌ ஏற்றிக்‌கீழ் நோக்கி இழுப்பார்கள்.

வைதரணி

நற்குலத்தில் பிறந்தும், அறநெறிகள் நன்றாகத் தெரிந்தும் வரம்புகளை மீறுபவன் வைதரணி என்ற நதியில் வீழ்வான். இந்நதி ரத்தம், எலிம்பு, மஜ்ஜை, கொழுப்பு, மாமிசம் ஆகியவற்றால் நிறைந்தது‌. இதிலுள்ள நீர்வாழ் பிராணிகள் கடித்துக் குதறும். ஆனால், உயிர் போகாது.

பூயோதம்

ஒழுக்கத்தையும், குல நியமங்களையும் விட்டு காமத்தால் தகாதவர்களுடன் உறவு கொள்பவன், பூயோதம் எனும் கடலில் நிரம்பியுள்ள சீழ், மலம், கபம், எச்சில் ஆகியவற்றை உண்ண நிர்பந்திக்கப்படுகிறான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment