Sunday, December 30, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 185 அஜாமிளன்‌ - 3

விஷ்ணுதூதர்கள் தொடர்ந்து கூறினர்.
ஏதோ ஒன்றை மனத்தில் நினைத்துக்கொண்டு உலகியல்‌ நடைமுறைக்காகவோ, பாடும்போது ஆலாபனைக்காகவோ, பிறரை ஏளனம் செய்வதற்காகவோ, எவ்வாறாகிலும் பகவன் நாமத்தை உச்சரிப்பவனின் பாவங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன.

மேலிருந்து இடறி விழும்போதோ, அடிபடும்போதோ, ஜ்வரத்தின்போதோ, மனதார இல்லாமல் தன்னிலை‌ மறந்தோ, எப்படியேனும் சொல்லப்படும் ஹரி எனும் நாமம் அவனை யமதண்டனையிலிருந்து காக்கிறது.

மஹரிஷிகள் சொல்லியிருக்கும் ப்ராயசித்தங்கள் நிச்சயமாக பாவங்களைப் போக்கும். ஆனால் தீய செயல்களில் பழகிய மனம் அவற்றால் தூய்மைப்படுவதில்லை.

தெரிந்தோ தெரியாமலோ எப்படியாயினும் நெருப்பில் போடப்பட்ட பொருள் பொசுங்கிவிடுகிறது. அதுபோல் இறைநாமத்தை அறியாமலே கூறினாலும், அவனது பாவங்கள் அழிந்துபோகின்றன.

மரணத் தறுவாயில் நாமம் சொன்னால் பாவங்கள் அழிவதோடு மீண்டும் பாவம் செய்ய அவகாசம் இல்லாததால் பாவமற்ற ஜீவன் சுத்தமடைந்து பிறவாநிலையை அடைகிறான்.

வைத்தியர் கொடுக்கும் சக்தி வாய்ந்த மருந்தை அதன் இயல்பை அறியாமல் உண்டாலும் பலன் தரும். அதுபோலவே வேதமந்திரங்களைப் பொருள் தெரியாமல் சொன்னாலும் அவை நம்மைக் காக்கின்றன.

நாராயண மந்திரமும் சொல்லப்பட்டதற்காக தன் வேலையைச் செய்கிறது. பொருளின் தரத்தைப் பார்ப்பதில்லை.
இவ்வாறு விஷ்ணுதூதர்கள் அஜாமிளனுக்காகப் பரிந்துபேசி அவனை யமபாசத்திலிருந்து விடுவித்தனர்.

யமதூதர்கள் திரும்பிச் சென்று தங்கள்‌ தலைவனான யமதர்மராஜனிடம்‌ கூற அவன் தூதர்களை வணங்கினான்.
விஷ்ணுபார்ஷதர்கள் அஜாமிளன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்துபோனார்கள்.

அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த அஜாமிளனுக்கு தன்மேல் பச்சாதாபம் உண்டாயிற்று.

அந்தோ என்னைப்போல் அறிவிலி யாருளர்?

மஹாபாவியான நான் குலத்திற்கே இழுக்கைத் தேடித் தந்தேனே. பெற்றோர், சாதுக்கள் அனைவரையும் உதறித் தள்ளிவிட்டேனே. நான் கண்ட அற்புதக் காட்சிகள் கனவா? நினைவா?

என்னைக் கயிற்றால் கட்டி இழுத்தவர்கள் யார்? விடுவித்தவர்கள் யார்? எப்போதோ செய்த புண்ணியத்தின் காரணமாக மரணத்தறுவாயில் என் நாவில் பகவன் நாமம் வந்ததோ?

மட்டமான பிறவியான நான் எங்கே? பவித்ரமான பகவன் நாமம் எங்கே? இனியும் என் நேரத்தை வீணடிக்கமாட்டேன். புத்தியை ஒருமைப்படுத்தி பகவன் நாமத்தில் நிறுத்துவேன். என்று கூறி அங்கிருந்து கிளம்பினான் அஜாமிளன்.

பகவத் பார்ஷதர்களின் தர்சன விசேஷத்தால்‌ அவனது உடல் ஆரோக்யம்‌ பெற்றிருந்தது. கண நேர சத்சங்கத்தால் உலக விஷயங்களில் வெறுப்புற்று கங்கைக் கரையான ஹரித்வாரத்தை அடைந்தான்.

அத்தலத்தில் அமர்ந்து மனத்தை ஒன்றுபடுத்தி,புலன்களை அடக்கி நாராயண நாமத்தையே எப்போதும்‌ ஸ்மரித்தான். பின்னர் அங்கேயே உடலை விடுத்து, சாரூப்ய முக்தியை அடைந்தான்.

அவனை விஷ்ணு பார்ஷதர்கள் தங்கமயமான விமானத்தில் அழைத்துச் சென்றனர்.

ஸ்ரீ சுகர் கூறினார்.
அரசே! வெறுக்கத்தக்க, ஒழுங்கீனமான செயல்களால் அறநெறிகளைக் காற்றில் பறக்கவிட்டு நரகம்‌செல்லவிருந்த அஜாமிளன் பகவானது நாமத்தால் பாவங்களிலிருந்து விடுபட்டான். இக்கதையை பக்தியுடன் கேட்பவர்களை யமதூதர்கள் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment