Friday, August 16, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 315

முத்கலரின் மகன் திவோதசன். அவனது மகன் மித்ரேயு. அவனுக்கு சியவனன், ஸுதாசன், ஸஹதேவன், ஸோமகன் என்று நான்கு மகன்கள். ஸோமகனுக்கு நூறு புதல்வர்கள். அவர்களுள் மூத்தவன் ஜந்து. இளையவன் ப்ருஷதன். அவனது மகன் த்ருபதன். த்ருபதனுக்கு த்ருஷ்டத்யும்னன் என்ற மகனும், திரௌபதி என்ற மகளும் பிறந்தனர்.

திருஷ்டத்யும்னனின் மகன் த்ருஷ்டகேது. இவர்கள் அனைவரும் பாஞ்சாலர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.

அஜமீடனின் இன்னொரு மகன் ருஷன். அவனது மகன் ஸம்வரணன். அவன் சூரியனின் மகளான தப்தியை மணந்தான். அவர்களது புதல்வன் குருக்ஷேத்ரத்தின் அதிபதியான குரு. இவனுக்கு பரீக்ஷித், ஸுதனுஸ்(ஸுதன்வா), ஜன்ஹு, நிஷதாச்சன் என்று நான்கு மகன்கள்.

ஸுதன்வாவின் வம்சம் முறையே ஸுஹோத்ரன், சியவனன், க்ருதீ, உபசாரின். அவனுக்கு ப்ருஹத்ரதன், குசாம்பன், மத்ஸ்யன், ப்ரத்யரன், சேதிபன் ஆகிய ஐந்து மகன்கள்.
இவர்கள் சேதிநாட்டு அரசர்களானார்கள்.

ப்ருஹத்ரதனின் வம்சம் முறையே குசாக்ரன், ரிஷபன், ஸத்யஹிதன், புஷ்பவான், ஜஹு ஆகியோர். ப்ருஹத்ரதனின் இரண்டாவது மனைவிக்கு இரண்டு பாகங்களாக ஒரு உடல் பிறந்தது.

குழந்தை உயிருடன் இல்லை என நினைத்து அதன் தாய் அதைத் தூக்கி எறிந்துவிட்டாள். அப்போது அங்கு வந்த ஜரை என்ற அரக்கி, விளையாட்டாக அவ்வுடல்களை ஒன்று சேர்த்தாள். எதிர்பாராத விதமாக அக்குழந்தை உயிர் பெற்றது. எனவே அது ஜராஸந்தன் எனப்‌பெயர் பெற்றது.

ஜராஸந்தனின் மகன் சகதேவன். அவனது மகன் ஸோமபி. அவனது மகன் ச்ருதச்ரவன்.

குருவின் மூத்த மகன் பரீக்ஷிதிற்கு மகப்பேறில்லை. ஜன்ஹுவின் வம்சம் ஸுரதன், விதூரதன், ஸார்வபௌமன், ஜயசேனன், ராதிகன், அயுதன், குரோதனன், தேவாதிதி, ருஷ்யன், திலீபன், ப்ரதீபன். ப்ரதீபனின் மகன்கள், தேவாபி, சந்தனு, பாஹ்லீகன் ஆகியோர்.

தேவாபி தனக்கு அரசு வேண்டாம் என்று சொல்லி வனம் சென்றான்.
எனவே சந்தனு பட்டமேற்றான்.

சந்தனு யாரை இருகைகளால் தீண்டுகிறானோ அவன் இளமையையும், மன நிம்மதியையும் அடைவான்.

ஒரு சமயம் அவனது நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் மழை பெய்யவில்லை. அவன் அந்தணர்களை அழைத்து வினவ, அவர்கள் மூத்தவன் இருக்க இளையவனான நீ அரசு ஏற்றதால் தோஷம்‌ ஏற்பட்டிருக்கிறது. உடனே உன் தமையனைத் தேடிச் சென்று அரசை ஒப்படைத்தால் மழை வரும் என்றனர்.

அவனும் தமையனான தேவாபியைத் தேடிச் சென்று அரசுரிமையை ஏற்க வேண்டினான்.
அதற்குள் சந்தனுவின் மந்திரி அச்மராதன் என்பவன் சிலரை அனுப்பி தேவாபியின் மனத்தை நாத்திகத்தில் திருப்பிவிட ஏவியிருந்தான். அவர்கள் பேசி பேசி அவனை நாத்திகனாக்கி விட்டனர். அவன் வேத நிந்தனை செய்யத் துவங்கினான். எனவே அவன் அரசுரிமையை ஏற்கும் தகுதியை இழந்துவிட்டான். அதனால் சந்தனுவின் தோஷம் நீங்கி நாட்டில் மழை பொழியலாயிற்று.

தேவாபி யோக மார்கத்தில் இருந்ததால் யோகிகள் வசிக்கும் கலாபக் கிரமத்தில் இருக்கிறான். கலியுகத்தின் முடிவில் சந்திர வம்சம் அழிந்துபடும். அப்போது க்ருதயுகத்தின் துவக்கத்தில் சந்திர வம்சத்தை தோற்றுவிக்கப் போகிறான்.

சந்தனுவின் தம்பி பாஹ்லீகனுக்கு ஸோமதத்தன் பிறந்தான். அவனது மகன்கள் பூரி, பூரிசிரவஸ், சலன் ஆகியோர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment