Saturday, February 29, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 403

அந்தணர்கள் தம் மனைவியர் இல்லாத குறையை உணரவே இல்லை. கண்ணனைக் கண்டு திரும்பிய பெண்களைக் கண்டு, வந்துவிட்டீர்களா, வாருங்கள் என்று சகஜமாக அடுத்த நிகழ்வைப் பார்க்கத் துவங்கினார்கள். 

இதற்கிடையில் கண்ணனைக் காணக் கிளம்பிய ஒரு பெண்ணை அவளது கணவர் மிகவும் கண்டித்து வீட்டுக்குள் வைத்து கதவைத் தாளிட்டு விட்டார். உடலால் கண்ணனைக் காணக் கிளம்ப இயலாது என்றதும் அப்பெண் சரீரத்திலிருந்த தொடர்பை விட்டுவிட்டு கண்ணனின் சரணத்தை அடைந்தேவிட்டாள்.
என்னே அவளது பக்தி!

இறைவனைக் காண உடலை ஒரு சாதனமாகப் பயன்படுத்தவேண்டும்‌. அதற்காகத்தான் உடல். தடையாக இருந்ததால் உதறிவிட்டு யோகமார்கத்தில் அடைந்துவிட்டாள்.

அந்தணர்களோ மனித உருவெடுத்து இறைவன் வந்திருக்கிறான் என்றறிந்தும் இப்படி க்ருஷ்ண தரிசனத்தைக் கோட்டை விட்டோமே என்று நொந்து கொண்டனர். தத்தம் மனைவியரிடம் கண்ணனைப் பற்றிக் கேட்டறிந்தனர். இப்போதும் கண்ணன் அங்கேதானே காட்டில் இருக்கிறான். போய் தரிசனம் செய்யலாமே என்றால், கம்சனின் மீதிருந்த பயம் அவர்களைத் தடுத்தது.

எப்படியேனும் கம்சனுக்கு உளவுச் செய்தி போய்விடும். மிகக் கடுமையான தண்டனையை அளிப்பான்‌ என்பதை எண்ணி பயந்ததனால்  போகவில்லை.

அந்தணப் பிறப்பு, வேதங்களைக் கற்ற அறிவு, கர்ம காண்டத்தில் புலமை, விரதங்கள், அனைத்தும் பக்தியில்லாததால் பயனற்றுப் போயிற்று.

எல்லாம் வல்ல இறைவனுக்கு நம்மால் ஆகவேண்டியதென்ன? அவர் இவ்வாறு உணவுக்காக யாசிப்பது லீலையன்றி வேறென்ன? அருமையாகக் கிடைத்த சந்தர்ப்பத்தை வீணடித்தோமே.

மனித வேடத்தில் வந்த இறைவனின் வேண்டுகோளை அலட்சியம் செய்தோமே.

திருமகள் சேவை செய்யும் பாதம், காட்டில் நடந்து நம்மருகே வந்தபோதும் மாயையினால்‌ மயங்கிப் போகாமல் இருந்துவிட்டோமே.

யோகீஸ்வரனான பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனாக யதுகுலத்தில் தோன்றியுள்ளார் என்று பலமுறை கேள்விப்பட்டும் படித்தும் புத்தியில் உறைக்கவே இல்லையே.

இறைவனின் மாயை யோகிகளையும் நிலைகுலையச் செய்துவிடும்.
பெண்களாயிருந்தும், எந்த ஸம்ஸ்காரங்களும் இல்லாதபோதும், குருஸேவை செய்யாதபோதும், ஆன்மவிசாரம் செய்யாதபோதும், கதை கேட்டதால் ஏற்பட்ட  பக்தியினாலேயே இறை தரிசனம் பெற்றார்களே என்று கூறி மனைவியரை வணங்கினார்கள்.

இந்தப் பெண்களாலன்றோ இப்போது கண்ணனிடம் பக்தி உண்டாகியிருக்கிறது
என்றெல்லாம் புலம்பினார்கள்.

கண்ணன் அப்பெண்கள் அளித்த ருசியான உணவை நண்பர்களுன் பகிர்ந்துண்டான்.

பின்னர், மாடுகளையும் கோபர்களையும் அழைத்துக்கொண்டு பலவிதமான கதைகளைப் பேசிக்கொண்டு வீடு திரும்பினான்.

அங்கே இடைச்சேரி விழாக்கோலம் பூண்டிருந்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment