Monday, February 24, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 401

கோபியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, கண்ணன் தன் நண்பர் படையுடன் மாடுகளை அழைத்துக்கொண்டு வனம் சென்றான். 

பேசிக்கொண்டே வெகுதூரம் வந்துவிட்டான். கண்ணன் மிகவும் ரசிக ஹ்ருதயம் உள்ளவன். வழியெங்கும் காணப்படும் செடிகள், பூக்கள், மரங்கள் அனைத்தையும் ரசித்து ரசித்து, அவற்றைக் காட்டிப் பேசிக்கொண்டே செல்வான். ஒரு இடத்தில் மரங்கள் மிகவும் அடர்த்தியாக குடைபோல் விரிந்திருந்தன. அவ்விடத்தில் சூரியனின் கிரணங்கள் துளியும் விழவில்லை. மாறாக மிகக் குளிர்ச்சியாக இருந்தது.

அதைக் கண்டு கண்ணன் மிகவும்‌ ஆச்சரியத்துடன் சொன்னான்.

ஹே ஸ்தோஹ க்ருஷ்ணா! ஹே அம்சு! ஸ்ரீ தாமா! ஸுபலா! அர்ஜுனா! விசாலா! ருஷபா! தேஜஸ்வீ! தேவப்ரஸித்தா! வரூதபா! இங்கே பாருங்கள்! இந்த மரங்களின் தயாள குணத்தை. இவை பிறருக்காகவே வாழ்கின்றன. காற்று, வெய்யில், மழை, பனி ஆகியவற்றைப் பொறுத்துக்கொண்டு அவை  நம்மைப் பாதிக்காமல் தடுத்துக் காப்பாற்றுகின்றன. இவற்றின் நிழல் எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது!

நல்லோரிடம் வந்தவர்கள் உதவி பெறாமல் சென்றதுண்டா? அது போல் இம்மரங்களை நாடி வந்தவர்கள் இவற்றின் பயனை அடையாமல் செல்லமுடியாது.

இம்மரங்களின் இலை, பூ, காய், பழம், பட்டை, கட்டை, சந்தனம், கோந்து, கரி, விறகு, துளிர், இலைகள், கிளைகள் ஆகிய எல்லாமே மற்றவர்க்குப் பயன்படுகின்றன.

உடலும் உயிரும் பெற்றதன் பயன் யாதெனில் மற்ற உயிர்கட்கு உயிர், மனம், வாக்கு, பொருள் மற்றும் உடலால் மேலான உதவியை எப்போதும் செய்வதே.

இவ்வாறு பேசிக்கொண்டே ஒவ்வொரு மரத்தையும், செடியையும், மலர்களையும் தன் அமுதக்‌கரங்களால் தடவிக்கொண்டே யமுனைக்கு வந்துவிட்டான் கண்ணன். அங்கு புல்வெளியில் பசுக்களை மேயவிட்டார்கள். யமுனையின் தேன் போன்ற குளிர்ந்த நீரைப்‌ பருகினார்கள். 

ஓரிடத்தில் அனைவரும் அமர, சில கோபச் சிறுவர்கள், கூறினார்கள். 

ஹே! க்ருஷ்ணா! எல்லா துஷ்ட அரக்கர்களையும் விரட்டுவாய் அல்லவா! இப்போது பசி என்னும் அரக்கன் எங்களை வாட்டுகிறான். அவனை விரட்ட ஏதாவது வழி செய் என்றனர்.

கண்ணன் சிரித்தான். 

பின்னர், அவர்களிடம் 
இங்க பக்கத்தில் வேதம் ‌ஓதும் அந்தணர் குடியிருப்பு இருக்கு. அவங்க ஆங்கீரஸம் அப்டிங்கற ஒரு ஸத்ர யாகம்‌ பண்றாங்க. அங்க போய் என் பேரையும் பலராமன் அண்ணா பேரையும் சொல்லி நாங்க அனுப்பினோம்னு சொல்லி சாப்பாடு கேட்டு வாங்கிட்டு வாங்க
என்று அனுப்பினான்.

உடனே சில கோபச் சிறுவர்கள் அந்தணக் குடியிருப்பை நோக்கிப் போனார்கள். அங்கு சில அந்தணர்கள் யாகம்‌ செய்துகொண்டிருந்தனர். அவர்களிடம்‌சென்று, 

ஐயா, நாங்க இடைச் சேரிலேர்ந்து வரோம். கண்ணனும் பலராமனும் எங்களை அனுப்பினாங்க. அவங்க ரெண்டு பேரும் இங்கதான் பக்கத்தில்‌ மாடு மேய்க்க வந்திருக்காங்க. அவங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கமுடியுமா? என்றார்கள்.

அற்ப பலன்களை வேண்டி யாகம்‌ செய்யும் அந்த அந்தணர்கள், சிறுவர்களின் வேண்டுதலைக்‌ கேட்டும் கேளாததுபோல் இருந்தனர்.

தந்திருக்கலாம், அல்லது தருகிறேன் என்று கூறியிருக்கலாம், சற்று பொறுங்கள் என்றோ தரமாட்டோம், போங்கள் என்றாவது சொல்லியிருக்கலாம். 

கண்ணனே வேதத்தின் முழு அங்கமும் பலனும் ஆவான் என்பதை அறிந்தும், மனிதன்தானே என்ற லட்சியத்தால்
எதுவுமே சொல்லாமல், யாகத்தைத் தொடர்ந்தனர்.

சிறுவர்கள் பாவம். வெகு நேரம் காத்துக் காத்துப் பார்த்துவிட்டு, இனி இவர்கள் எதுவும் தரமாட்டார்கள் என்பதை அறிந்து கண்ணனிடம் திரும்பிச் சென்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment