Wednesday, February 19, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 398

வசந்த காலம் முடிந்து ஹேமந்த ருது எனப்படும் முன்பனிக்காலம் வந்தது. கோகுலத்திலிருந்த அத்தனை கோபிகளும் கண்ணனைத் திருமணம் செய்ய விரும்பினர். இது எப்படி‌ சரியாகும் என்றால், அவர்களுக்கு கண்ணன் இறைவன் என்பது நன்றாகத் தெரிந்திருந்தது. 
அகில தேஹினாம் அந்தராத்மத்ருக்..
அதாவது அனைத்து ஜீவன்களின் அந்தராத்மாவாக இருப்பவனே என்று பின்னால் கோபிகா கீதத்தில் பாடுகிறார்கள்.

எவன் ஒருவனுக்கு இப்பிரபஞ்சத்தின் கட்டுப்பாடுகள் இல்லையோ, எவன் பிரபஞ்சத்தைப் படைத்தவனோ அவனோடு ஒரு ஜீவன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டால் பிரபஞ்சத்தின் ஆதார சக்தி அந்த ஜீவனை கர்மாவினால் உண்டான பஞ்ச பூதங்களாலான உடலை சிதைத்து தன்னோடு ஐக்கியப்படுத்திக்கொள்கிறது. கர்மா முற்றிலும் அழிந்து விடுவதால், அதை அடிப்படையாகக் கொண்ட உடலுக்கும் வேலையில்லை. ஆன்மா ஒன்றிவிட்ட பிறகு,‌ உடலின் இருப்பு ஜீவனுக்கு ஒரு பொருட்டில்லை.

இறைவனை அடையவேண்டும் என்ற எண்ணத்தைத்தான் அவன் பார்க்கிறான். அதுவே அவனை அடையும் உந்து சக்தி. எவ்விதமான எண்ணம் என்பது பற்றி இறைக்கு அக்கறையில்லை. ஜீவன் எவ்வெண்ணத்தில் இறையைத் தொடர்பு கொள்கிறதோ, அதே வழியில் இறை அவனை ஆட்கொள்கிறது.

தாய்மை (வாத்ஸல்யம்), இறைவன் தனது குழந்தை என்ற எண்ணம் (உம். யசோதை)
ஸக்யம் - இறை என் நட்பு (உம் அர்ஜுனன்),
தாஸ்யம் - இறை என் தலைவன் உ.ம் உத்தவன், ஹனுமான்
இறை என் குரு (பரதன், ரமணர், அருணகிரிநாதர்)
இறைவன் என் எதிரி (ராவணன், போன்ற பல எதிரிகள்)
இறைவன் என் எதிரி என்ற பயம் (கம்சன்),
இறைவன் என் காதலன், கணவன் (ஆண்டாள், மீரா, கோபிகள், வ்ருத்ராசுரன்),
இறை என்றே பக்தி செய்தவர்கள் (த்ருவன், ப்ரஹ்லாதன் முதலிய பலர்)

இவ்வாறு எந்த எண்ணத்தின் அடிப்படையில் இறையை இடைவிடாது நினைத்தாலும் அதே வழியில் இறை ஆட்கொள்ளும் அவ்வளவே. பஞ்ச பூதங்களும் இறையின் படைப்பு. எனவே அவற்றின் கட்டுப்பாடுகள் இறைக்கில்லை. எனவேதான் தூணிலிருந்து குதித்தது, தோன்றி மறைகிறது. விரும்பினால் பிறந்து வாழ்கிறது.

இங்கே கோபிகள் இறைவனைக் காதலாலும்,  காமத்தாலும், அடைய விழைகின்றனர். கண்ணனை இறை என்று உணர்ந்தபின் அவ்வாறு வேண்டுவதால் சரீர நியமங்கள் அவசியமின்றிப் போகின்றன.

யார் யார் எதை விரும்புகிறார்களோ அதை அவ்வாறே வழங்குவது இறையின் சுபாவம். 

ஹேமந்த ருதுவின் துவக்கத்தில் கோபியர் கண்ணனைத் தம் தலைவனாக அடைய வேண்டி பாவை நோன்பு இருக்க முடிவு செய்தார்கள். பாவை நோன்பை தேவி காத்யாயனியைக் குறித்துச் செய்தனர். 

பின்னாளில் ருக்மிணி தேவியும் கண்ணனைக் கணவனாக அடைய விரும்பி கௌரி பூஜை செய்கிறாள். நல்ல கணவனை அடைய விரும்புபவர்கள் கௌரி தேவியை வழிபடவேண்டும் என்பது பாகவதம் சொல்லும் செய்தி.

கோபியர்க்கு அதிகாலையில் நீராடும் பழக்கம் இல்லை. தீபாவளிக்கு தீபாவளிதான் நீராடுவார்கள். அதிலும் ஒரு தீபாவளிக்கு தலைக்கு நீராடினால், அடுத்த தீபாவளிக்குத்தான் உடல் நீராட்டம் என்று வேடிக்கையாச் சொல்கிறார்கள். அப்பகுதியின் தட்பவெப்பம் அவ்வாறு இருந்திருக்கக்கூடும்.

இப்போது ஹேமந்த ருதுவின் முதல் மாதமான மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் யமுனையில் நீராடி காத்யாயனியை வழிபடுவதாக சங்கல்பம் செய்தனர்.

தினமுன் நன்றாக அலங்காரம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். கண்ணன் எப்போது வந்தாலும், ஏன் கனவில் வந்தால் கூட அழகாகத் தெரியவேண்டும் என்று உறங்கச் செல்லும் முன் கூட ஒப்பனை செய்வார்களாம். இந்த மாதம் முழுதும் தாமாக விரும்பி மலர் சூடுவதில்லை, மையிட்டுக்கொள்வதில்லை. கண்ணன் வந்து பண்ணிவிட்டால் செய்துகொள்வார்களாம். எப்போதும் பாலும், தயிரும், நெய்யுமாக உண்பவர்கள், நோன்பு மாதம் முழுவதும் நெய்யை விலக்குகிறார்கள்.
வழக்கமான விதிகளான புறம் பேசாமை, தகாதனவற்றைச் செய்யாமை ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்கிறாள். ஆண்டாள்.

மார்கழி மாதம்‌ முழுவதும் ஒரே கொதியாக குழைந்து வெந்த ஹவிஸை உண்ணப்போவதாக முடிவு செய்தனர். அதைத்தான் பொங்கல் என்று நாம் செய்கிறோம்.

 இக்காலத்தில் மஞ்சள் நிறம் மேன்மை பெறுகிறது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலமிட்டு மஞ்சள் நிறப் பரங்கிப் பூவை வைப்பார்கள். மஞ்சள் நிற ஜவ்வந்திப்பூ தவிர வேறொன்றும் விளையாது. பொங்கலும் மஞ்சள் நிறமாக இருக்கும். மார்கழியின் முடிவில் வரும் தைத் திருநாளிலும் மஞ்சளுக்கு அதிக ஏற்றம் கொடுப்பார்கள்.

இவ்வாறு கோபியர் நோன்பிருப்பதற்காக அனுமதி வேண்டுகின்றனர். கூட்டாக நிறைய பெண்கள் அதிகாலையில் யமுனைக்குச் சென்று நோன்பிருக்கவேண்டும் என்பதால் அரசனிடம் அனுமதி வேண்டும்.

இப்ப எதுக்கு சின்ன சின்ன பெண்குழந்தைகளுக்கு நோன்பு? என்ன பலன் வேண்டும்? என்று கேட்டான் நந்தன்.

பாவம் அந்தப் பெண்கள் என்ன பதில் சொல்வார்கள்? 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment