Friday, February 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 402

வேள்வி செய்யும் தீக்ஷிதர்களிடம் பலமுறை உணவு கேட்டும் அவர்கள் காதிலேயே வாங்கவில்லை. குழந்தைகள்‌ மிகவும் வருந்தி கண்ணனிடம் சென்று கூறினார்கள்.

கண்ணனுக்கு அவர்களைப் பார்க்கக் கஷ்டமாக இருந்தது. 

ஏண்டா.. சாப்பாடு வேணும்னா மாமிகிட்ட போய் கேப்பாங்களா.. யாகம் பண்றவங்களைக் கேப்பாங்களா.. யாக சாலைக்குப் பின்னாடிப்போனா அவங்க வீடுகள் இருக்கும். அங்க இருக்கற மாமிகள் கிட்ட போய் கேளுங்க. தருவாங்க என்றான்.

எடுப்பது பிக்ஷை. அந்தக் குழந்தைகள் சற்றும் யோசிக்காமல் கண்ணன் சொன்னான் என்பதற்காக, நேராக யக்ஞ பத்னிகளிடம் போனார்கள்.

அங்கே சென்று கண்ணன் வந்திருக்கிறான் என்று சொன்னதுமே அந்தப் பெண்கள் சட்டென்று எழுந்தனர்.

கண்ணனா? வந்திருக்கானா? எங்க? எங்க?

இங்க பக்கத்தில் காட்டில் இருக்கார்..

பரபரவென்று உள்ளே‌ ஓடிச்சென்று சமைத்த உணவுகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டனர்.

எங்க கிட்ட கொடுக்கறீங்களா?

குழந்தைகள் கேட்டதும்,

நாங்களே வந்து கொடுக்கறோமே. கண்ணனை ஒரு‌ தரமாவது பார்க்கவேண்டாமா?

ஆறு கடலை அடைவதுபோல் கண்ணனை அடைய ஓடினார்கள்.
ஓட்டமும் நடையுமாகச் சென்ற அவர்களது வேகத்திற்கு சிறுவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.

இதுநாள் வரை பால் தயிர் விற்க வரும் கோபிகள் வாயிலாக கண்ணனின் அனைத்து லீலைகளையும் கேட்டறிந்து கண்ணன் மீது அளவிலா அன்பை வளர்த்துக்கொண்டிருந்தனர் அந்தணப் பெண்மணிகள்.

யமுனைக் கரையில் புதிதாகத் துளிர்த்திருந்த அசோக மரக் காட்டில் பலராமன் மற்றும் பல கோபர்கள் சூழ நின்றிருந்த கண்ணனைக் கண்டனர்.

கறுத்த மேகம் போல் மேனி, இடையில் பொன்னாடை, வனமாலை, தலையில் பெரிய முண்டாசு. அதன் மீது மயில்தோகை. பூக்கள் மற்றும் தாதுப்பொடிகளால் கண்ணனின் கன்னத்திலும் உடலிலும் பல ஓவியங்களை சிறுவர்கள் வரைந்து வைத்திருந்தனர். ஒரு கை தோழனான ஸ்ரீதாமாவின் தோளில் போட்டுக்கொண்டு தாமரைப் பூவைச் சுழற்றிக்கொண்டிருக்க, மறு கை கோலைப் பிடித்திருக்க, இதழில் குமிழ் சிரிப்பு கொப்பளிக்க, கன்னத்தில் ஒரு முடிச்சுருள் விளையாட, காதில் அல்லிப்பூவைச் செருகிக்கொண்டு ஒய்யாரமாய் நின்றிருந்த கண்ணனின் அழகில் மயங்காதவர் உண்டா?

கண்ணனைக் கண்டதும் அப்பெண்மணிகளின் தாபமெல்லாம் தீர்ந்தது.

அவர்களை வரவேற்றான் கண்ணன்.

பாக்யவதிகளே! வாருங்கள்! நீங்கள் போய் என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்களே. உங்களுக்கு நான் என்ன சேவை செய்யவேண்டும்?

தனக்கு எது நல்லது என்று உணர்ந்த அறிவாளிகள் பயன் கருதாத அன்பை என்மீது வைக்கிறார்கள். அது உண்மையில் அவர்களது ஆன்மாவின் மீது வைக்கும் அன்பாகும்.

உடல், அறிவு, மனம், உறவுகள், செல்வம் அனைத்தும் ஆன்மாவுக்கு பிரியமானவை என்று எண்ணுவதாலேயே அவற்றின்மீது பிரியம் உண்டாகிறது. ஆனால் உண்மையில் ஆன்மாவை விட பிரியமானது வேறெதுவும் இல்லை.

சாதாரணமாக உடலில் காயம் பட்டால் உடல் முக்கியம் என்று நினைப்பார்கள். உடலில் ஒரு பாகம் அழுகினால், அதை வெட்டினால்தான் உயிர் பிழைக்கலாம் என்று மருத்துவர் சொன்னால் உயிர்தான் வெல்லம். முக்கியம்.‌ உடலின் பாகம் அல்ல. என்று தானே முடிவு செய்கிறோம். உங்கள் வீட்டில் தேடத் துவங்கும் முன் கிளம்புங்கள்.

அந்தணப் பெண்கள் கூறினார்கள்.

கண்ணா! இதென்ன இப்படிக் கடுஞ்சொல் கூறலாமா? நாங்கள் எங்கள் உறவுகளை எல்லாம் அறுத்துவிட்டு உன்னிடம் வந்திருக்கிறோம்‌. இனி எங்களை கணவர், பெற்றோர் யாரும் ஏற்க மாட்டார்கள்.

இந்த உணவுகளை ஏற்றுக்கொள். எங்களைத் திருப்பி அனுப்பாமல், எங்களுக்கு வேண்டியதைச் செய். உன் சரணம் தவிர எங்களுக்கு வேறு அடைக்கலமில்லை.

கண்ணன் சிரித்தான்.

பெண்களே! இவ்வுலகில் என்னைச் சேர்ந்தவரை எவரும் வெறுக்கமாட்டார்கள். அனைவரும் மதிப்பார்கள். உங்கள் வீட்டிலும் உங்களை வரவேற்பார்கள். அதைப் பற்றிக் கவலை வேண்டாம். குடும்பத்தில் இருந்துகொண்டு சேவை செய்துகொண்டு, மனத்தை என்னிடம் வையுங்கள். அருகில் இருந்து பக்தி செய்வதை விட,  தூரத்திலிருந்துகொண்டு என்னையே எப்போதும் நினைத்து பக்தி செய்தால் விரைவில் என்னை அடையலாம்.

என்றான்.

இதைக் கேட்டதும், அந்ணப்‌ பெண்கள் தாங்கள் கொண்டு வந்த அத்தனை உணவுகளையும் கண்ணனிடம் சமர்ப்பித்துவிட்டு வீடு திரும்பினார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment