Thursday, February 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 399

சின்னஞ்சிறு பெண் குழந்தைகள் அதிகாலையில் இருளில் யமுனைக்கரைக்குப் போய் நோன்பிருக்கப் போவதாகச் சொன்னதும், நந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. 

எதற்காக நோன்பு? இப்ப என்ன அவசியம்?

என்ன சொல்வது? நந்தனிடம் போய், உங்கள்‌ மகனான கண்ணனை நாங்கள்‌ காதலிக்கிறோம். அனைவரும் கண்ணனையே மணக்க விரும்புகிறோம் என்று சொல்ல‌ முடியுமா?

திருதிருவென்று விழித்தார்கள். ஒருத்தி சுதாரித்துக்கொண்டு

நாட்டில் மாதம்‌ மும்மாரி மழை பெய்யணும். அப்டி பெய்தாதானே பயிர், புல் எல்லாம் நல்லா விளையும்? மாடுகளுக்குப் புல் கிடைக்கும்? நல்லா பால் கறக்கும்? நாமும் சௌக்கியமா இருக்கலாம்? அதனால் எல்லாரும் சௌக்கியமா இருக்கணும்னு வேண்டிண்டு நோன்பு இருக்கப்போறோம் என்றாள்.

நந்தன் அகமகிழ்ந்து போனான். மக்கள் வளமாக வாழ எந்த நல்ல காரியம் செய்தாலும் அரசன் அதற்குத் துணை நிற்பான். மக்களை வளமாகவும், நிம்மதியாகவும் வைப்பதே அரசனின் முதற்கடைமையல்லவா?

ஓ.. அப்படியா? ரொம்ப சந்தோஷம். ரொம்ப சந்தோஷம்.

ஒரு பெரிய கோபி சொன்னாள்

மஹாராஜா.. இருட்டில் பெண்‌குழந்தைகளை தனியா எப்படி அனுப்பமுடியும்? நாங்க யாராவது துணைக்குப் போகலாம்னா காலங்கார்த்தால நிறைய வேலை இருக்கே. மாட்டையெல்லாம் கவனிக்கணும். விடியல்ல கிளம்பினாதான் மதுரைக்கு போய் வியாபாரம் பண்ணமுடியும். இவங்களைத் தனியா எப்டி அனுப்பறது? என்றாள்.

நந்தன் சற்றும் யோசிக்காமல், உள்ளே திரும்பி கண்ணனை அழைத்தான்.

கண்ணா கண்ணா!

அவ்வளவு நேரமும் என்ன பேசுகிறார்கள் என்பதனைத்தையும் ஒளிந்திருந்து கேட்ட கண்ணன், தந்தை அழைத்ததும் ஒன்றுமறியாதவன் போல் வந்தான்.

நாளைலேர்ந்து இவங்கல்லாம் விடிகாலைல யமுனைக்குப் போய் நோன்பிருக்கப் போறாங்களாம்.
நீ துணைக்குப் போய் வா.

கோபிகளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நோன்பிருக்கத் துவங்கும் முன்பே பலன் வந்துவிட்டது. ஒரு பக்கம் வெட்கம் பிடுங்கித் தின்றது.

அப்பா.. இவங்களுக்கெதுக்கு நோன்பு?

எல்லாரும் சௌக்யமா இருக்கறதுக்கு நோன்பிருக்காங்க. அதைக் காப்பாத்திக் கொடுக்கறது ராஜாவோட கடைமைப்பா. அதான். நீ போய்ட்டு வா.

அய்ய.. அப்பா.. நால்லாம் போகமாட்டேன். பொண்குழந்தைங்க கூட சேர்ந்தா காது அறுந்துடும்னு இதோ இவங்க பாட்டிதான் சொல்வாங்க. என்றபடி ஒருத்தியைக் காட்டினான்.

அவள் வெட்கத்தினால் இன்னொருத்தி பின்னால் ஒளிந்துகொண்டாள். 

டேய்.. அதெல்லாம்‌ ச்சும்மாடா.. உன்னைத் தெரியாதா.. ரொம்ப பிகு பண்ணாத. போய் வா.

ஏதோ நீங்க சொல்றதால் போறேன் பா. என்றவன் கோபிகளைத் திரும்பிப் பார்த்து பழிப்பு காட்டிவிட்டு ஓடினான்.

கண்ணன் உடன் வரப்போகிறான் என்று மகிழ்ச்சி கரை புரண்டாலும், 

ஆனாலும் இவன் அழும்பைப்‌ பாரு. நாளைக்கு வரட்டும். பேசிக்கலாம். என்று பேசிக்கொண்டார்கள் அந்த பாக்யவதிகள்.

தினமும் அதிகாலை எழுந்து ஒவ்வொரு வீடாகப் போய் அனைவரையும் எழுப்பி அழைத்துக்கொண்டு யமுனைக்குச் செல்வார்கள். தூய பெருநீரில் நீராடி, யமுனைக் கரையில் மண்ணால் தேவியின் உருவத்தை அழகாகச் செய்வார்கள். பின்னர், சந்தனம், மணம் மிக்க மலருள்ள மாலைகள், பூக்கள், தூபம், தீபம், பழங்கள் கொண்டு பூஜை செய்வார்கள். அங்கேயே கல் கூட்டி ஒரு ஹவிஸைப் பொங்கி உண்பார்கள். 

நடு நடுவில் கண்ணன் வந்து இவர்களை வம்பிழுத்துச் செல்வான். இப்படியாக வெகு நேர்த்தியாக நோன்பிருந்து தேவியிடம்

காத்யாயினீ! மஹாமாயே! மஹா யோகின்யதீச்வரீ|
நந்தகோப ஸுதம் தேவீ! பதிம் மே குரு தே நம:||

என்று வேண்டிக்கொள்வார்கள். அதாவது காத்யாயினீ! மஹா மாயை எனும் சக்தியாக இருப்பவளே! யோகீஸ்வரியாக விளங்குபவளே! (ஏதாவது அதிசயம் செய்தாவது கண்ணனை எங்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக யோகீஸ்வரி என்றழைக்கிறார்கள் போலும்) நந்த கோபனின் மகனான கண்ணனை எங்களுடைய கணவனாக ஆக்கு தேவீ என்பதாக.

கண்ணனைக் கணவனாக்க வேண்டி அவனது சகோதரியைக் கேட்டால் அவள் என்ன செய்வாள்? கண்ணனைப் பார்த்தாள். அவன் நான் பார்த்துக்கொள்கிறேன்‌. என்று சொல்லிவிட்டதால் தேவியும் கண்ணனின் லீலைகளை ஆவலுடன் வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்.

தினமும் கோபியரின் வேண்டுதலைக் கேட்காமல் கேட்டுக்கொண்டிருந்த கண்ணன் ஒரு லீலை செய்ய எண்ணினான். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment