Monday, February 10, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 394

ஒருநாள் கண்ணனும் கோபர்களும் மாடுகளை மேயவிட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். 

அப்போது, மாடுகள் மேய்ந்துகொண்டே வழி தெரியாமல் வெகு தூரம் சென்றுவிட்டன. அங்கு ஒரு முஞ்சைக் காடு இருந்தது. அதற்குள் அலைந்த மாடுகளுக்கு வழி தெரியவில்லை.

நன்கு உலர்ந்து போயிருந்த அக்காட்டில் மருந்துக்கும் எங்கும் தண்ணீர் இல்லை. தாகத்தினால் தவித்த மாடுகள், வழி தெரியாத குழப்பத்தினால் அங்குமிங்கும் ஓடி, தீனமாகக் குரல் எழுப்பத் துவங்கின.

சற்று நேரம் கழித்து மாடுகளைக் காணாமல் கோபச் சிறுவர்கள் பயந்து போயினர். பின்னர் அவற்றின் குளம்படித் தடம், மிதிபட்டிருக்கும் புற்கள் ஆகியவற்றைப்‌ பின்பற்றிக்கொண்டே முஞ்சைக் காட்டை அடைந்தனர். அங்கும் வெகுதூரம் அலைந்தபின்பும் மாடுகளைக் காணவில்லை. ஆனால் அவற்றின் குரல் மட்டும் நாலாபுறங்களிலிருந்தும் எழும்பியது. 

கண்ணன் தன் குழலை எடுத்து ஒவ்வொரு‌ மாட்டின் பெயரையும் சொல்லி ஊத, அவை பதில் குரல் எழுப்பிக்கொண்டு குழலிசை வந்த திசையை நோக்கி ஓடிவந்தன.

அங்கே கண்ணனையும் சிறுவர்களைக் கண்டதும் மயிழ்ச்சியால் துள்ளிக் குதித்தன‌.

மாடுகளை அழைத்துக்கொண்டு அனைவரும்  கிளம்பினர்.

திரும்பிச் செல்லும் வழியில் மிகவும் காய்ந்திருந்த அந்த முஞ்சைக் காடு எங்கோ பற்றிக்கொண்டது.

கிடுகிடுவென்று நாலாபக்கமும் நெருப்பு பரவிவிட்டது.
மாடுகள் ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு ஓடின. பயத்தில் மிகவும் தீனமாகக்‌ குரல் எழுப்பின. கோபச் சிறுவர்கள் கண்ணா காப்பாற்று என்று கூறிக்கொண்டு சரணடைந்தனர். 

கண்ணன் மறுபடி மாடுகளை ஒரு சிறு குழலோசையால் அடக்கினான். பின்னர் அனைவரையும் கண்ணை மூடிக்கொள்ளச் செய்தான்.

மாடுகள் உள்பட அனைவரும் கண்களை மூட, ஹாவென்று கோட்டை வாசல் போல்  வாயைத் திறந்தான்.

பஞ்சபூதங்களும் அவன் வயிற்றினுள்‌அடக்கம். அங்கிருந்த நெருப்பு முழுவதையும் குடித்துவிட்டான். அவ்விடத்தைத் தன் அமுதப் பார்வையால் சோலை வனமாக்கினான்.

பின்னர், தன் யோகமாயையால் அனைவரையும் பாண்டீர வனத்தில் யமுனைக் கரையில் இருக்கும்  பெரிய ஆலமரத்தின் அடியில் கொண்டு வந்துவிட்டான். 

 கண்ணைத் திறக்கலாம் என்ற கண்ணனின் குரலைக் கேட்டு கண்ணைத் திறந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.

இன்று வீட்டுக்குச் சென்றதும் அன்னையிடம் சொல்ல நிறைய விஷயம் இருந்தது அந்த கோபச் சிறுவர்களுக்கு.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...




No comments:

Post a Comment