Friday, February 21, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 400

தினமும் பாவை நோன்பு நோற்க யமுனைக்கு வரும் பெண்களைக் கண்காணிக்கும் விதமாக கண்ணன் நண்பர்களுடன் வருவான.

அவர்களின் வேண்டுதலைக் கேட்ட கண்ணன் ஒரு லீலை செய்ய எண்ணினான்.

ஒரு நாள் கோபிகள் அனைவரும் ஆடைகள்‌ அனைத்தையும் கரையில் கழற்றி வைத்துவிட்டு கண்ணனின் புகழைப் பாடிக்கொண்டே  யமுனைக்குள் இறங்கினார்கள்.

என்ன இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஐந்தாறு வயதுக் குழந்தைகள். நீருக்குள் இறங்கியதும் சற்று விளையாடினார்கள். நீந்தினார்கள். நீரை ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொண்டு நீந்திப் பிடித்து, நீருக்குள்ளேயே வட்டமாக நின்று கும்மியடித்து என்று ஒரே அமர்க்களம்.

இறைவனை அடைய நான் என்ற அஹங்காரத்தையும், மான அவமானங்களையும் தியாகம் செய்யவேண்டும். சரீரம் என்பது ஆன்மாவிலிருந்து வேறுபட்டது என்று உணர்தல் அவசியம். கோபியர் அனைவரும் தன்னையே அடைய விரும்பியதால் கண்ணன் அவர்களின் அஹங்காரம், மான அவமானங்களை அழிக்க விரும்புகிறான். பற்றுக்கள்  அனைத்தையும் துறந்தவர்க்கு அவனே பற்றுக்கோடு.

இப்போது கரையில் இருந்த அத்தனை ஆடைகளையும் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த கடம்பமரத்தின் மீதேறினான். அதன் கிளைகளில் கோபியரின் உடைகளைக் கட்டித் தொங்கவிட்டுவிட்டுத் தானும் ஒரு கிளையில் அமர்ந்து கொண்டான்.

வெகுநேரம் நீரில் ஆடியதில் குழந்தைகளுக்குக் குளிர் எடுத்தது. 

கரைக்குப் போகலாம்டீ.. பூஜைக்கு நேரமாச்சு.
ஹவிஸ் வேற வெக்கணும். ஒருத்தி சொல்ல, எல்லோரும் ஆமோதித்துக் கரையேறத் துவங்கினர். 

ஒருத்தி அலறினாள்

ஹேய்.. துணியெல்லாம் எங்கடீ..

இங்கதான வெச்சோம்..

காணோமே..

எங்க போயிருக்கும்

எப்படித் தேடறது? 

கரையில் அங்குமிங்கும் கண்களை ஓடவிட்டனர். துணிகள் எங்கும் இல்லை.

பயம், குளிர், ஆடையில்லாமல் வீட்டுக்கு எப்படிப் போவது? அழத் துவங்கினர். ஒருத்தி எதேச்சையாக நிமிர எல்லாத் துணிகளும் மரத்தின் மேலிருந்ததைக் கண்டாள்.

அதோ அங்க இருக்குடீ..

யாரு மரத்துமேல வெச்சது?

எப்படி எடுக்கறது?

அதோ கண்ணன்டீ..

ஓ.. அவன் வேலைதான்..

கண்ணா துணிகளைக் கொடு..

சிரித்தான் கண்ணன்.

என்ன சிரிக்கற? உன்னை எங்களுக்கு காவலுக்குதான வரச்சொன்னாங்க. நான் மஹாராஜா கிட்ட சொல்லுவேன்.

தாராளமா இப்படியே போய் சொல்லேன். எனக்கென்ன?

துணியைக் கொடுடா..

கொடுத்துடலாம்னுதான் நினைச்சேன். ஆனா, எப்ப அப்பாகிட்ட சொல்வேன்னு சொன்னயோ, கிடையாது. நீ எங்கப்பா கிட்ட போய் சொல்லிக்கோ..

கண்ணா கண்ணா தயவு செய்து கொடுத்துடு. ரொம்ப குளிருது..

ஆமா.. மழை வேணும்னு தான நோன்பிருக்கறதா சொன்னீங்க. இப்ப என்ன வேண்டிண்டீங்க?

...தலையைக் கவிழ்ந்துகொண்டார்கள். என்ன சொல்வது?

கண்ணா துணியைக் கொடு. நீ இப்படிப் பண்ணலாமா?

இதோ பாருங்க. நீங்கள்லாம் பாவம் பண்ணிருக்கீங்க. அதற்குப் பிராயசித்தம் பண்ணுங்க. கொடுக்கறேன். 

என்ன பாவம்? என்ன பிராயசித்தம்?

நதியில் துணியில்லாம இறங்கக் கூடாது. நீங்க இத்தனை பேரும் துணியில்லாம இறங்கினதால் யமுனை சாபம் தரும். 

அதுக்கு பிராயசித்தம் என்ன தெரியுமா?

நானே ஸர்வேஸ்வரன். என்னை வணங்கினால் எல்லா பாவமும் போய்விடும்.

சரி வணங்கறோம். துணியைக் கொடு கண்ணா. இரு கரம் கூப்பினர்.

இப்படி இல்ல. 

பின்ன?

தலைக்கு மேல் இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு இங்கே வந்து கேட்டால் தருவேன்.

கண்ணா அதெல்லாம் முடியாது.

அப்டின்னா துணி கிடையாது.

இவ்விடத்தில் ஆண்டாள் அழகாக தோழியும் நானும் தொழுதோம். துகிலைப் பணித்தருளாயே என்று சொல்கிறாள். அதாவது ஒரு தோழியின் இடது கரமும் இன்னொரு தோழியின் வலது கரமும் கொண்டு கும்பிடுதல்.

அவ்வாறு கும்பிட்டுக் கேட்டபின்பு போனால் போகிறதென்று துணிகளைக் கொடுத்தான் கண்ணன்.

துணிகளை வாங்கிக்கொண்ட கோபிகள் வெட்கத்துடன் கண்ணனை நோக்க, அதைப் புரிந்துகொண்ட கண்ணன்
உங்கள் எண்ணம் நிச்சயம் ஈடேறும். என்னிடம் செலுத்தப்படும் காமம், வறுத்த விதை போன்றது. உலகியல் தளைக்குள் தள்ளாது. வரும் சரத்காலத்தில் தங்கள் அனைவரின் எண்ணத்தையும் நிறைவேற்றுகிறேன். இப்போது ஆயர்பாடிக்குச் செல்லுங்கள்  என்று வாக்களித்தான்.

நோன்பின் பலன் பூரணமாகக் கிடைத்துவிட்டதை எண்ணிப் பூரித்த கோபிகள் வீடு திரும்பினார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment