Tuesday, October 30, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 136 விதுர மைத் ரேய ஸம்வாதம் - 80

இந்திரனது தீய செயலை அறிந்த ப்ருது சினம் கொண்டு அவனைக் கொல்ல வில்லை எடுத்தார்.

சினத்தால் பொங்கும் அவரது கண்களைக் காணமுடியாமல் அனைவரும் கூசினர். மிகுந்த பராக்ரமம் உள்ள அவரை ரித்விக்குகள் தடுத்தனர்.

மன்னவா! தாங்கள் வேள்விக்கான தீட்சை ஏற்றபின் வேள்விப் பசுவைத் தவிர வேறெந்த ஜீவனையும் வதம் செய்யக்கூடாது. அது வேள்விக்கு இடையூறாகும்.

தங்கள் பகைவன் இந்திரன் பொறாமையால் ஒளியிழந்துபோனான். அவனை மந்திரக்கட்டு போட்டு இங்கு இழுத்துவந்து ஹோமம் செய்துவிடுகிறோம்.
என்று சொன்னார்கள்.

அவர்கள் இந்திரனை ஆவாஹனம் செய்து ஹோமத்தில் விடத் துணிந்தபோது ப்ரும்மதேவர் எழுந்தருளினார்.

ரித்விக்குகளே ! நீங்கள் செய்வது தவறு. எந்த தேவர்களுக்காக வேள்வி செய்கிறீர்களோ அவர்கள் இந்திரனின் திருமேனி. இந்திரன் பகவான் யக்ஞ நாராயணனின் அம்சம்.

இந்திரன் பொறாமை கொண்டு நாத்திகத்தைப் பரப்பி விட்டான். உங்கள் பகைமை அதிகமானால் அவன் சினம் கொண்டு தர்மத்திற்கெதிரானவற்றை வளர்த்துவிடுவான்.

மிகுந்த புகழ் கொண்ட ப்ருதுவிற்கு தொண்ணூற்றொன்பது அச்வமேதம் செய்தவர் என்ற புகழே போதும். சதக்ரது என்பது இந்திரனின் பெயர்.

ஏகோன சதக்ரது (நூறுக்கு ஒன்று குறைவு) என்ற பெயர் ப்ருதுவுக்கு மட்டுமே உரியது.

இதுவரை அறநெறி வழுவாது செய்த வேள்விகளின் பயனை, இந்த ஒரு செயலால் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

ப்ருதுவிற்கும் இந்திர பதவியில் ஆசை இல்லை.
எனவே இவ்வேள்வியினால் பயனில்லை.

ப்ருதுவே, நீங்களும் இந்திரனும் பகவானின் அம்சங்களே. ஒருவர் மற்றவர் மீது கோபம் கொள்ளலாகாது.
இவ்வேள்வி தெய்வத்தினால் தடைபட்டது. எனவே வருத்தம் வேண்டாம்.

தெய்வம் தடை செய்ததை மீண்டும் சரிவரச் செய்ய நினைப்பவனின் மனம் சினத்தினால் மயங்குகிறது.

வேள்வியை நிறுத்த இந்திரன் ஏற்படுத்திய நாத்தீக தர்மங்களால் மக்கள் கெட்டுப்போய்க் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, வேள்வியை நிறுத்திவிட்டு உங்கள் முதல் கடைமையான மக்களைக் காப்பாற்றுவதைச் செய்யுங்கள்.

இந்த மறநெறிகளை அழிக்க வல்லவர் நீர் ஒருவரே.

ப்ரும்மாவின் வார்த்தைகளைக் கேட்ட ப்ருது சமாதானம் அடைந்து அவரை வணங்கி வேள்வியை நிறுத்தினார்.

பின்னர் வேள்வி முடிந்ததற்கான அவ்ப்ருத ஸ்நானத்தைச் செய்துவிட்டு இந்திரனோடு நட்பு கொண்டார்.

அனைவர்க்கும் ஏராளமான தட்சிணைகள் அளித்தார்.

இந்திரன் மீண்டும் மனமார ப்ருதுவிடம் மன்னிப்பு வேண்டினான்.

யாகங்களால் மகிழ்ச்சி கொண்ட பகவான் மீண்டும் தோன்றினார்.

அரசே! இவன் வேள்விகளுக்கு இடையூறு செய்தவன்தான். இப்போது மன்னிப்பு வேண்டுகிறான்.

சான்றோர்கள் பிறரிடம் ஒருபோதும் பகை கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் இவ்வுடலை ஆன்மா என்று எண்ணுவதில்லை.

உன்னைப் போன்றவர்கள் மாயையில் மயங்குவாராயின், இவ்வளவு காலம் பெரியோர்க்குச் செய்த பணிவிடைகளுக்குப் பலன் ஏது?

அத்தனையும் வீண் சிரமம் என்றாகும்.
உடலில் பற்றில்லாதவன், உறவு, பகை, மனைவி, மக்கள், நட்பு என்று பற்று கொள்வானா?

தனக்கென்று நியமிக்கப்பட்ட தர்மங்களை பயனில் பற்றின்றி சிரத்தையுடன் எனக்காகச் செய்பவனது மனம் தெளிவடைகிறது.
மனம் தெளிந்தால், உடல் ஆன்மா அல்ல என்ற அறிவு பிறக்கும். அதனாலேயே அவன் என்னைப் (சாருப்யத்தை) பொன்ற திருமேனியை அடைகிறான். இதுவே அழிவற்ற சாந்தமான நிலை.

என் அடியார்கள் என்னிடம் புத்தியைச் செலுத்துவதால் எவரிடமும் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை.
அதனால் மகிழ்ச்சியோ துக்கமோ கொள்வதில்லை.

எனவே, வீரனே, வேறுபாடுகளை விடுத்து, அமைதி கொள். உனக்கு நியமிக்கப்பட்ட சபையையும், படைகளையும் கொண்டு உலக மக்களைக் காத்து நில்.

மக்களைக் காப்பதே அரசனின் பணி. அப்படிச் செய்தால் அவர்களது புண்ணியத்தில் ஒரு பங்கு அரசனைச் சேர்கிறது.

வரிவசூல் மட்டும் செய்து மக்களைக் காக்கத் தவறுபவன் மக்கள் செய்யும் தீவினைகளின் பயனை அடைகிறான்.

அறநெறியைப் பின்பற்றி அரசாட்சி செய். ஸனகாதி முனிவர்கள் உனைத் தேடி வருவர்.

உனது நற்குணங்களும் நன்னடத்தையும் என்னைக் கட்டிவிட்டன.

ஏதேனும் ஒரு வரம் கேள்.
அனைத்தையும் சமமாகப் பார்ப்பவனின் இதயத்தில் நான் இருக்கிறேன். மற்றபடி, தவம் செய்வதாலோ, யோகாசனத்தில் நிற்பதாலோ, என்னை அடைய முடியாது.

நற்குணங்களும் நற்சிந்தனைகளும் உள்ளவனின் உள்ளத்தில் விரும்பிக் குடியேறுகிறேன்.
என்றார்.

ப்ருது பகவானின் சொற்களைக் கேட்டுக் கண்ணீர் உகுத்தார். அவனது கருணையால் நெஞ்சம் விம்மினார். இந்திரனிடத்துப் பகையை விட்டு அவனைக் கட்டித் தழுவிக்கொண்டார்.

பகவானின் சரணத்தில் விழுந்து அவரது பாததாமரைகளைப் பிடித்துக்கொண்டார்.

பகவான் அங்கிருந்து புறப்பட நினைத்தான். ஆனால் போக விடாமல் ப்ருதுவின் அன்பினால் கட்டுண்டுபோய் அவரை அன்பொழுகப் பார்த்துக்கொண்டே நின்றார்.

போதும் என்று சொல்லமுடியாதபடி பகவானும் பக்தனும் ஒருவரை ஒருவர் கண்களால் விழுங்கிக்கொண்டிருந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment