Sunday, October 21, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 128 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 72

விதுரர் கேட்டார்.

முனிவரே அங்க மஹாராஜன் ஒழுக்கம்‌ மிகுந்தவன். பரம ஸாது. மகானும் கூட. அவனுக்கு வேனன் போன்ற கொடிய இயல்புடைய மகன் எவ்வாறு பிறந்தான்?

குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் பொறுப்பு அரசனுடையது. அப்படியிருக்க அரசனையே முனிவர்கள் தண்டிக்க இயலுமா? அவன் அப்படி என்ன தவறு செய்தான்?
மைத்ரேயர் கூறினார்.

அங்கன் ஒரு சமயம் யாகங்களில் சிறந்த அசுவமேத யாகத்தைச் செய்தான். அதில் நெறி தவறாது அத்தனை மந்திரங்களையும் கூறி அழைத்தும், தேவர்கள் அவிர்பாகத்தைப் பெற்றுக்கொள்ள வரவில்லை.

இதைக்‌கண்ட ரித்விக்குகளும் எல்லாமே குறைவற இருந்தும் தேவர்கள் வராததன் காரணம் தெரியாமல் திகைத்தனர்.

அங்கன் மிகவும் வருந்தி, யாகத்திற்காகத் தான் ஏற்ற மௌன விரதத்தை விடுத்து அவையோர்களைப் பார்த்து தேவர்கள் அவர்கள் வராததன் காரணம் கேட்டான்.

அரசே, இப்போது ஏதும் தவறு இல்லைதான். ஆனால் நிச்சயமாக ஏதோ முன்வினைப் பயன் உள்ளது. அதன் காரணமாகவே இதுவரை தங்களுக்கு பிள்ளைப்பேறும் இல்லை. எனவே நீங்கள் நல்லதோர் குமாரனைப் பெற முயற்சி செய்யுங்கள். புத்ர ஸந்தானம் வேண்டி யக்ஞ புருஷனான ஸ்ரீமன் நாராயணனை ஆராதனை செய்யுங்கள். அவர் மகிழ்ந்தால் போதும். புத்ர ஸந்தானமும் கிடைக்கும். தேவர்களும் ஹவியை ஏற்க வருவர் 
என்றனர்.

புரோகிதர்கள் அங்கனுக்கு புத்ர பாக்யம் வேண்டி புரோடாசம் என்ற அவியைத் தயாரித்து, மஹாவிஷ்ணுவைத் தியானித்து அதை வேள்வியில் இட்டார்கள்.

உடனே வேள்வியிலிருந்து கழுத்தில் தங்க ஹாரமும் தூய்மையான பொன்னாடையும் அணிந்த யக்ஞபுருஷன் தங்கப் பாத்திரத்தில் பாயசத்தை ஏந்திய வண்ணம் வெளிவந்தார்.

அங்கன் மிகவும் மரியாதையுடன் இரு கரங்களால் அதை வாங்கி மகிழ்ச்சியோடு மனைவியிடம்‌ கொடுத்தான்.

அரசி தன் பேற்றை நினைந்து மகிழ்ந்து அந்தப் பாயசத்தை அருந்திக் கருவுற்றாள்.

உரிய காலத்தில் ஓர் ஆண்மகவை ஈன்றாள்.

அதர்மத்தின் அம்சத்திலிருந்து தோன்றிய ம்ருத்யு இவனது தாய் வழித் தாத்தா. ஆகவே அக்குழந்தை சிறு வயதிலிருந்தே தாத்தாவைப் பின்பற்றி தீயவழியிலேயே நின்றான்.

கையில் வில்லேந்தி வேட்டையாடச் சென்று எளிய விலங்குகளைக் கொன்றான்.

அதைக்‌கண்டு மக்கள் கொடியவன் என்று பொருள்படும்படி வேனன் என்று அவனை அழைக்கத் துவங்கினர்.
விளையாட்டுத் திடலில் தன்னொத்த சிறுவர்களைப் பிடித்து பலவந்தமாகக் கொன்றுவிடுவான்.

மன்னன் அங்கன் அவனைப் பல விதங்களில் தண்டித்தும், தீய செயல் களிலிருந்து தடுத்தும் அவன் நல்வழித் திரும்பினான் இல்லை.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment