Tuesday, October 23, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 130 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 74

முனிவர்களின் பேச்சைக் கேட்ட வேனன் ஏளனமாய்ச் சிரித்தான். பின்னர் மனம்போன போக்கில் பேசத் துவங்கினான்.

அறிவிலிகளே! மதநெறியை அறநெறி என்கிறீர்களே. உங்களுக்குச் சோறுபோடும் என்னை விடுத்து யாரோ ஒருவனை வேண்டுகிறீர்களே. கணவனை விடுத்து கள்ளக் காதலனை அணுகுவார்களா?
அதுபோல் உள்ளது உங்கள் செயல்.

அரசனே கடவுள். தீய நடத்தையுள்ள பெண் கணவனை விடுத்து வேறொருவனை நாடுவதுபோல் அரசானான என்னை விடுத்து இவ்வளவு பக்தியுடன் எவனோ ஒரு யக்ஞபுருஷனைக் கொண்டாடுகிறீர்கள்.

அனைத்து தேவர்களும் அரசனின் திருமேனியில் வாசம் செய்கிறார்கள்.

ஆகவே, நீங்கள்‌ முதலில் என்னைப் பூஜை செய்யுங்கள். எல்லாக் காணிக்கையும் எனக்கே. உங்கள் வேள்விகளின் ஹவிர்பாகம் என்னையே அடையட்டும். என்னைத் தவிர இங்கு வேறெவருக்கும் ஆராதனை நடைபெறுவது தகாது.
என்றான்.

தீய புத்தி கொண்ட வேனன் ஸாதுக்களை அவமதித்ததால் அவனிடம் கொஞ்சமாய் ஒட்டிக்கொண்டிருந்த புண்யபலன் அப்போதே தீர்ந்துபோய், பாவம் மலையென உயர்ந்தது.

முனிவர்கள் அவன்‌மீது கடுங்கோகம் கொண்டனர்.

மஹாபொறுமைசாலிகளும் ஞானிகளுமான அவர்கள் உலக நன்மை கருதி கோபத்தை ஏற்றனர்.
இந்தப் பாவியைக்‌ கொல்லுங்கள். இவன் சில நாள்களிலேயே பூமியைச் சாம்பலாக்கிவிடுவான். வேள்விகளின் தலைவனான ஸ்ரீமன் நாராயணனை வெட்கமின்றி நிந்திக்கிறான். இவன் சிங்காசனத்திற்கு ஏற்றவனல்லன்
என்று கூக்குரலிட்டனர்.

அனைவரும்‌ சேர்ந்து ஒரு ஹூங்கரம் செய்தனர். அதனால் எழுந்த அக்னி ஜ்வாலையால் அவர் உயிர் அக்கணமே பிரிந்தது.

பகவான் அச்சுதனை நிந்தித்ததால் அவன் முன்பே இறந்ததற்கொப்பானவனே.

வேனன் இறந்துபட்டதும் முனிவர்களின்‌ கோபம் தணிந்தது. துக்கத்தினால் துன்புற்ற வேனனின் தாய் தன் தவ வலிமையாலும், வேறு சில யுக்திகளாலும் வேனனின் உடலைக் காத்து வந்தாள்.

முனிவர்கள் ஆசிரமம் சென்று ஸரஸ்வதி நதியில் நீராடி, அனுஷ்டானங்களை‌முடித்து, பகவானின் திருவிளையாடல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது துர்நிமித்தங்கள் தோன்றின.

அரசனில்லாததால் கொள்ளையர்கள் பெருகுவரே என்று கவலை கொண்டனர். அச்சமயம் கொள்ளையடித்துக்கொண்டு திருடர்கள் குதிரை மீதேறி ஓடுவதால் புழுதி நாற்றிசையையும் மூடியது.

அரசன் இல்லாததால் அதர்மம் சூழ்வது கண்டு வருந்தினர். தங்கள் தவ வலிமையால் அதர்மத்தைத் தடுக்க இயலும் என்றாலும் அதில் பல தோஷங்கள் ஏற்படும் என்பதால் செய்யவில்லை.

அந்தணன் அனைத்திலும் ஒரே நோக்குடையவனாயினும், அமைதியே உருவெடுத்தவனாயினும், தீனர்களது துன்பம்‌ கண்டு அதை நீக்க வழி வகை செய்ய இயன்றும் வாளாவிருந்தால் அவனது தவம்‌ ஓட்டைப் பாத்திரத்திலுள்ள நீர்போல் சிறிது சிறிதாய்க் குறையும்.

ராஜராஜனான அங்கனது வம்சம் வேனனோடு அழியக்கூடாது இந்த வம்சத்தரசர்கள் பக்தர்கள். பகவானையே நம்பியவர்கள். என்றெல்லாம் தீர்மானித்த முனிவர்கள் அரண்மனையை அடைந்தனர்.

வேனனது உடலைக் கொண்டு வரச்சொல்லி அவனது தொடையைக்‌ கடைய அதிலிருந்து பாகுகன்‌ என்ற குள்ளமான ஒரு மனிதன் தோன்றினான்.

அவன் காக்கை போல் கருப்பாக இருந்தான். குட்டையான உடலும் கை கால்களும் கொண்டு செம்பட்டை முடியுடன் இருந்தான்.

அவன் முனிவர்களை வணங்கினான்
நான் பாகுகன். உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?
என்று கேட்டான்.

அவனை முனிவர்கள் நிஷீத! உட்கார். என்றனர். அவன் பெயர் நிஷாதன் என்றாயிற்று.

அவன் வேனனின் பாவங்கள் மொத்ததின் உருவாக இருந்தான். அவன் வம்சத்தினர் ஹிம்சை, திருட்டு முதலியவைகளில்‌ ஈடுபட்டனர். மலைகளிலும் வங்களிலும் வசிக்கலாயினர்.

அதன்‌ பின்னர் முனிவர்கள் வேனனின் கைகளைக் கடைய அவற்றிலிருந்து ஒரு ஆணும் பெண்ணும் தோன்றினார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment