Sunday, October 28, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 134 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 78

பூமிதேவியின் சொற்களால் மகிழ்ந்தார் ப்ருது.

பசு உருவத்திலிருந்த பூமியிடம் ஸ்வாயம்புவமனுவைக் கன்றாகக் கொண்டு அனைத்து விதமான பயிர்களையும் கைகளாலேயே கறந்து ஏந்திக்கொண்டார்.

ப்ருதுவைப் போலவே மற்றவர்களும் பேச்சின் ஸாரத்தையே உள்வாங்கிக்கொண்டனர்.

எனவே ரிஷிகள் ப்ருஹஸ்பதியைக் கன்றாகக் கொண்டு வேதங்களைக் கறந்தனர்.

தேவர்கள் இந்திரனைக் கன்றாக அமைத்து தங்கப்பாத்திரத்தில் மனவலிமை, பொறி புலன்களின் வலிமை, உடல் வலிமை, அமிர்தம் ஆகியவற்றைக் கறந்தனர்.

அசுரர்கள் அசுரர்களில் சிறந்தவனான ப்ரஹ்லாதனைக் கன்றாகக் கொண்டு இரும்புப் பாத்திரத்தில் கள்ளையும், மற்ற போதை தரும் வஸ்துக்களையும் கறந்தனர்.

கந்தர்வர்களும் அப்ஸரஸ்களும் விச்வாவசு என்ற கந்தர்வனைக் கன்றாய்க் கொண்டு தாமரை மலர்ப் பாத்திரத்தில் சங்கீதம் என்ற தேனையும், அழகு என்ற பாலையும் கறந்தனர்.

ச்ராத்த தேவர்களான பித்ருக்கள் அர்யமா என்ற பித் ரு தேவனைக் கன்றாக்கி சூளையில் சுடாத மண் பாத்திரத்தில் பிதுர் தேவதைகளுக்கு அர்ப்பணிக்கப்படும் கவயம் என்ற ஹவிஸைக் கறந்தனர்.

சித்தர்கள் கபிலரைக் கன்றாகக் கொண்டு அஷ்ட சித்திகளையும், அந்தர்தானம் முதலிய வித்தைகளையும் ஆகாயமாகிய பாத்திரத்தில் கறந்தனர்.

மாயையில் வல்ல கிம்புருஷர்கள் மயனைக் கன்றாக்கி பலவிதமான மாயைகளைக் கறந்தனர்.

மாமிசம் உண்ணும் யக்ஷ கின்னரர்களும் பூத பிசாசர்களும் ருத் ரனைக் கன்றாய்க் கொண்டு, மண்டை ஓட்டில் ரத்தமான கள்ளைக் கறந்தனர்.

படம் எடுக்கும், எடுக்காத பாம்பு வகைகளும், தேள் முதலியவையும், தக்ஷகனைக் கன்றாக்கி தம் வாய் எனும் பாத்திரத்தில் விஷமாகிய பாலைக் கறந்தனர்.

பசுக்கள் ருத்ரனின் வாகனமான காளையைக் கன்றாய்க் கொண்டு வனமாகிய பாத்திரத்தில் புல்லைக் கறந்தன.

பறவைகள் கருடனைக் கன்றாக்கி அசைவ உணவுகளையும், பழங்களையும் கறந்தன.

மரங்கள் ஆலமரத்தைக் கன்றாக்கி ரஸரூபமான பாலைக் கறந்தன.
மலைகள் இமயமலையைக் கன்றாக்கி தாழ்வரைப் பாத்திரத்தில் தாதுப்பொருள்களைக் கறந்தன.

ப்ருது மன்னனின் அனுமதியோடு அவரவர் தத்தம் தலைவர்களைக் கன்றாய்க் கொண்டு, தங்களுக்கு விருப்பமானவற்றைக் கறந்துகொண்டனர்.

விரும்பியதனைத்தையும் கொடுத்த பூமாதேவியிடம் அன்பு பெருகி அவளைத் தன் மகளாகவே ஏற்றார் ப்ருது.

இவையனைத்தும் உருவகங்கள். அனைவர்க்கும் வேண்டியதை பூமி அளித்தது என்பதே அறிய வேண்டிய விஷயம்.

ஒரு தந்தைபோல் பூமிக்கு சிறப்பான வாழ்வை அமைத்துக் கொடுத்தார்.

ஏழு கண்டங்களாகப் பிரித்து (எவ்வளவோ நிலப்பரப்புகளைக் கடல் கொண்டாலும், வெளி வந்தாலும் இன்று வரை ஏழு கண்டங்களே)
மேடு பள்ளங்களைச் சமனாக்கி, மக்கள் வாழ வீடுகளையும், நகரங்களையும் அமைத்தார்.

கிராமங்கள், பட்டணங்கள், நகரங்கள், கூடாரங்கள், சுரங்கங்கள், கோட்டைகள், வேடுவச்சேரிகள், இடைச்சேரிகள், சேனைக் கூடாரங்கள், வேளாண் கிராமங்கள், மலைச் சாரல் கிராமங்கள், அனைவர்க்குமான வாழ்க்கைத் தளம் ஆகியவற்றை ஏற்படுத்தினார்.

ப்ருதுவிற்கு முன்பு இவ்வாறான கட்டமைப்புகள் இல்லை. மக்கள் தங்கள் வசதிக்கேற்ப இன்பமாக வாழ்ந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன் யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment