Saturday, October 6, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 116 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 60

நாரதர் சொல்லும்போது இன்னொன்றும்
‌சொன்னார்.

குழந்தாய்! தன்னைவிட உயர்ந்த நிலையிலிருப்பவனைக்‌ கண்டு மனம் மகிழவேண்டும். பொறாமை கொள்ளக்கூடாது. தன்னைவிடத் தாழ்ந்த நிலையிலிருப்பவனைக் கண்டு இரக்கம் கொள்ளவேண்டும். சமமாக இருப்பவனிடம்‌ நட்பு பாராட்டவேண்டும். இவ்வாறு நடப்பவனுக்குத் துன்பமில்லை.

துருவன் கூறினான்.
தாங்கள்‌ உபதேசித்த இந்த மார்கம் என்னைப்போன்ற க்ஷத்ரியர்களுக்கில்லை. என் சிற்றன்னையின் சொற்களால் என் மனம் கலங்கியுள்ளது. எனக்கேற்ற மார்கத்தை உபதேசிக்க வேண்டும். நிச்சயம் எனக்கு பகவானின் காட்சி கிட்டும் என்று ஆசீர்வாதம்‌ செய்யுங்கள்
என்றான்.

மிகவும் மகிழ்ந்த நாரதர்,

உன்னைக்‌ கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.

உன் தாயின் உபதேசமே சிறந்தது. மூவுலகிலும் சிறந்த அரண் பகவான் வாசுதேவனே. நீ அவரை மனத்தை ஒருமுகப்படுத்தி பஜிப்பாயாக.
(பஜ -வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து)
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களில் எதை வேண்டினாலும் அதற்கு வழி ஸ்ரீமன் நாராயணனைப் பூஜிப்பதே.

பரிசுத்தமான யமுனைக் கரையுல் மதுவனம் என்ற இடம் உள்ளது.(தற்போதைய மதுரா, க்ருஷ்ண ஜென்மபூமிதான் அது)

அங்கு பகவான் ஹரி நித்யவாஸம்‌செய்கிறார். அங்கு செல்.
யமுனையில்‌ மூன்று வேளை நீராடி, மனத்தை அலையவிடாமல், ஒரு ஆசனத்தில் நிலையாக அமர்ந்துகொள்.

பின்னர் ப்ராணாயாமம் செய்து ப்ராணன், பொறி, மனத்தின் மாசுகளை நீக்கி ஸ்ரீமன் நாராயணனை தியானம் செய்.
குழந்தாய்! பகவானின் திருமுகமும்‌ கண்களும் எப்போதும் பக்தர்களுக்கு அருள்வதற்காகவே தெளிவாக மலர்ந்து விளங்குகின்றன.

அழகிய புருவங்கள், கன்னங்களின் அழகோ சொல்லவொண்ணாது.
தேவர்களும் கண்டு மயங்கும் அழகு.

ரமணீயமான திருமேனி, கொவ்வைப்பழம்போல் சிவந்த உதடுகள்.

செந்தாமரை மலரின் இதழ்களாகக் கண்கள்.

மார்பில் ஸ்ரீ வத்ஸம், நீலமேகவர்ணத் திருமேனி, கழுத்தில் வனமாலை,
நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், கதை, தாமரை‌மலர்.

தலையில் ரத்தினக் கிரீடம்,
காதுகளில்‌ மகரகுண்டலம்,
கைகளில் தோள்வளை, கங்கணங்கள்,
கழுத்தில் கௌஸ்துப ஹாரம், இடுப்பில் பொன்னாடை, அரையில் மேகலை, திருவடிகளில் ஸ்வர்ண பாதசரங்கள்,
பகவானின் திருமேனி மனத்திற்கு அமைதியளிப்பது. கண்களுக்கு விருந்து.

இவ்வாறு பகவானை நினைத்து மானஸ பூஜை செய்பவனது உள்ளத்தில் ரத்தினத் துண்டுகளாய் ஒளிரும் நகங்கள் கொண்ட தன் பாதகமலத்தைத் தோன்றச் செய்கிறார்.

இவ்வாறு தியானம் செய்தால் மனம் ஆனந்தக் கடலில் மூழ்கித் திளைக்கும். வெளியிலேயே வராது.

இதைத் தவிர உனக்கு ஒரு ரகசியமான மந்திரத்தை உபதேசம் செய்கிறேன்.

இப்போது நான் உபதேசிக்கும்‌ மந்திரத்தை ஏழு நாள்கள் தொடர்ந்து ஜபம்‌செய்பவன் வான் உலகில் உலாவரும் தேவர்களையும் தரிசிக்கலாம். என்று சொல்லி துருவனின் வலது காதில்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
என்று துவாதசாக்ஷரி (பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்ட மந்திரம்) உபதேசம் செய்தார்.

பகவானை முன் சொன்ன மாதிரி உன்னைப் பார்ப்பதுபோல் ஹ்ருதயத்தில் நிறுத்தி இந்த மந்திரத்தைச் சொல்லி, எளிமையான பொருள்களைக் கொண்டு பூஜிக்கவேண்டும். விக்ரஹமோ, கல்லோ கிடைத்தால்‌ பூஜிக்கலாம். இல்லையெனில் அனைத்தையும் மனத்தினாலேயே செய்வது நலம்.

காட்டில்‌ இயற்கையாகக் கிடைக்கும் நீர், காய், கிழங்கு, பழம், இலை ஆகியவற்றை அளவாக உண்டு, மனத்தை ஒருமுகப்படுத்தி, மௌனவிரதம் ஏற்று தியானிக்கவேண்டும்.

இவ்வாறு பூஜை செய்பவனின் பக்தி வளரும், பகவானின் மேல் அன்பு பெருகும். அவன் விரும்பும் அனைத்தையும்‌ பெறுவான். உலகியல்‌ பொருள்களில் வைராக்யம் ஏற்பட்டால், முக்தி கிட்டும்.

இவ்வாறு நாரதர் சொன்னதைக் கவனத்துடன் கேட்டுக்கொண்ட துருவன், அவரை மும்முறை வலம் வந்து விழுந்து வணங்கிப் பின் மதுவனத்தை நோக்கி நடக்கத் துவங்கினான்.

காலில் விழுந்த குழந்தையை உளமார மகிழ்ந்து
ஸர்வமங்களமும் உண்டாகட்டும்
என்று ஆசீர்வாதம்‌ செய்தார் நாரதர். பின்னர் உத்தானபாதனின் அரண்மனையை நோக்கிப் போனார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment