Monday, October 29, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 135 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 79

மைத்ரேயர் தொடர்ந்து கூறலானார்.
ஸரஸ்வதி நதி கிழக்கு நோக்கிப் பாயும் ப்ரும்மாவர்த்தம் என்ற இடம் மனு சக்ரவர்த்தியின் புனிதத்தலம். அங்கு ப்ருது நூறு அச்வமேத யாகங்கள் செய்வதாக சங்கல்பம் செய்துகொண்டார்.

நூறு அச்வமேத யாகங்கள் செய்பவரே இந்திர பதவியை அடையலாம். ப்ருது பதவியை எண்ணிச் செய்யவில்லை. ஆனாலும் இந்திரன் அவர் மீது பொறாமை கொண்டான்.

ப்ருது மன்னனின் இவ்வேள்வியில் அனைத்துலகோரும் மகிழ்ந்து வணங்கும் யக்ஞ நாராயணனான பகவான் ஸ்ரீ ஹரி நேரிடையாக தரிசனம் தந்தார்.

அவருடன் ப்ரும்மாவும், பரிவாரங்களும், எண்டிசை பாலகர்களும் வந்தனர். அப்போது கந்தர்வர்கள், முனிவர்கள், அப்சரஸ்கள் அனைவரும் பகவானின் புகழை இசைத்தனர்.

அனைத்து தேவர்களும், முனிவர்களும் அங்கு குழுமினர்.

விதுரா! பூமாதேவி காமதேனு உருக்கொண்டு யாகத்திற்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் வழங்கினாள்.

திராட்சை, பழரசம், கரும்புச்சாறு, பால், தயிர், அன்னம், நெய் அனைத்தும் பெருகி வந்தன. மரங்கள் தேன் சிந்தும் பழங்களை அளித்தன.

அனைத்து வகையான உணவு வகைகளையும் மலைகள் கொடுத்தன. ரத்தினங்களை ஸமுத்திரங்கள் அளித்தன.

எண்டிசைப் பாலர்களும், மற்ற மன்னர்களும் பல உயர்ந்த காணிக்கைகளை அளித்தனர்.
ப்ருதுவின் செழிப்பைக் கண்டு மனம் பொறாத இந்திரன் வேள்விக்கு இடையூறு செய்ய முற்பட்டான்.

ப்ருது தொண்ணூற்றொன்பது அச்வமேத யாகங்களை முடித்தார். நூறாவது யாகத்தில் இந்திரன் குதிரைகளைக் கவர்ந்து சென்றான்.

மறநெறியை (அதர்மத்தை) அறநெறியாகக் காட்டுவது நாத்திகம். அதைப் பாகண்டம் என்பர்.

இந்த வேடத்தில் தீயோனும் நல்லவனாகக் காட்சி தருவான்.

தன்னைக் காத்துக்கொள்ள நாத்திக வேடம் தரித்து வேள்விக்கான குதிரையை இந்திரன் கவர்ந்து கொண்டு வான் வழிச் சென்றான். அதை அத்ரி முனிவர் பார்த்தார்.

அவர் ப்ருதுவின் மகனிடம் கூறினார். அவன் சினம் கொண்டு இந்திரனைக் கொல்ல எண்ணி நில் நில் என்று கத்திக்கொண்டு துரத்திச் சென்றான்.

தலையில் சடாமுடியும், விபூதி பூசிய திருமேனியுமாக இருந்த இந்திரனைக் கண்டு தர்மதேவதையே உருவெடுத்து வந்ததோ என்றெண்ணி ஏமாந்தான்.
இந்திரன் மீது பாணம் எய்யாமல் திரும்பினான்.

ப்ருதுவின் மகன் இந்திரனைக் கொல்லாமல் திரும்பியது கண்டு, அத்ரி, குழந்தாய்! அவன் தீய குணம் கொண்ட இந்திரனே. யாகத்தைக் கெடுக்க வந்தவன். அவனைக் கொல்
என்றார்.

சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை ஜடாயு துரத்தியதுபோல்
ப்ருதுவின் மகன் மறுபடி இந்திரனைத் தொடர்ந்தான்.

அவன் துரத்துவதைக் கண்ட இந்திரன் தன் வேஷத்தைக் கலைத்துவிட்டு குதிரைகளை விட்டு விட்டு மறைந்தான்.

குதிரையோடு திரும்பி வந்த ப்ருதுவின் மகனை முனிவர்கள் "விஜிதாச்வன்" என்று கொண்டாடினர்.

இந்திரன் அடர்ந்த இருளைத் தோற்றுவித்து, அதில் மறைந்திருந்து, சஷாலம் என்னும் யூபஸ்தம்பத்திலிருந்து தங்கக் கடிவாளம் போட்ட வேள்விக் குதிரையை மீண்டும் கவர்ந்து சென்றான்.

கையில் கபாலமும் கட்வாங்கம் என்னும் தண்டமும் ஏந்தி காபாலிகன் வேடத்தில் குதிரையுடன் விண்வழித் தப்பியோடினான் இந்திரன். அத்ரி முனிவர் சுட்டிக்காட்டியும், அவன் சிவபக்தன்போல் வேடமணிந்திருந்ததால் விஜிதாச்வன் தயங்கினான்.

அத்ரி மீண்டும் தூண்டவே, கோபம் கொண்டு அம்பு தொடுத்தான் விஜிதாச்வன்.

இந்திரன் உடனே குதிரையை விட்டு மறைந்துவிட்டான்.

விஜிதாச்வன் குதிரையுடன் திரும்பினான். இந்திரன் விட்டுச் சென்ற வேஷங்களை அறிவிலிகள் ஏற்று நாத்திகர்களாயினர்.

அவை பாவத்தின் சின்னங்கள் எனவும், பாகண்டம் எனவும் அழைக்கப்படுகின்றன.

அவ்வேடங்களின் கொள்கைகள் மனம் மயக்குபவை. செவிக்கு இனிமையானவை. பலவிதமான இனிய உத்திகளால் தம் கொள்கைகளை நிறுத்துபவை. ஆனால் அத்தனையும் போலி தர்மங்கள்.

ஆனால், உலகோர் அவற்றை நம்பி மனத்தைப் பறிகொடுக்கின்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment