Friday, May 31, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 265

தன்னைக் கடலில் விட்டுச் செல்லவேண்டாம் என்று மீன் ஸத்யவிரதனிடம் வேண்டியது.

அதன் இனிமையான, பரிதாபமான குரலைக்கேட்ட ஸத்யவிரதனுக்கு மதி மயங்கிற்று.

தாங்கள் ஒரே ஒரு பகற்பொழுதில் நூறு யோஜனை தூரம் வளர்ந்துவிட்டீர்கள். இப்படிப்பட்ட நீர்வாழ் பிராணியை நான் பார்த்ததே இல்லை.

நீங்கள் நான் பூஜிக்கும் நாராயணனே என்று நினைக்கிறேன். ஸர்வ அந்தர்யாமியான தாங்கள் நீர்வாழ்பிராணியின் உருவம் தாங்கி வந்திருக்கிறீர்கள்.

தங்களையே சரணமடைகிறேன். தங்கள் திருவிளையால்களும், அவதாரங்களும் ஜீவன்களின் நன்மைக்காகவே. இப்போது மீனாகத் திருமேனி தாங்கி வந்துள்ளீர்கள். தங்களைச் சரணடைவது என்றுமே‌ வீண்போவதில்லை. என்றான் ஸத்யவிரதன்.

தன் பரமபக்தனான ஸத்யவிரதன் இவ்வாறு பேசவும், அதற்குமேல் பகவான் விளையாட விரும்பவில்லை.

பகவான் கூறலானார்.

குழந்தாய்! இன்று முதல் ஏழாம் நாளில், பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூவுலகங்களும் ப்ரளயக் கடலில் மூழ்கப் போகின்றன.
அவ்வாறு மூவுலகங்களும்‌ மூழ்கும்போது உன்னருகில் ஒரு படகு வரும்.

அதில் நீ ஸகல ஜீவராசிகளின் சூக்ஷ்ம சரீரங்களையும், மூலிகைகள், பெரிய செடி கொடி மரங்களின் விதைகளையும், எடுத்துக்கொண்டு ஸப்தரிஷிகளையும் அழைத்துக்கொண்டு அப்படகில் ஏறு.

அவ்வமயம் எங்கும் இருள் சூழ்ந்து, நீர் மட்டும் இருக்கும். கலங்காமல், ப்ரும்மரிஷிகளின் தேஜஸ் வெளிச்சத்தில் அப்படகில் அமர்ந்து ப்ரளயகாலத்தில் கடலில் சுற்றித் திரிந்து வா.

சூறாவளிப் புயலால், படகு தத்தளிக்கும் சமயம் நான் அங்கு வருவேன். வாசுகிப்பாம்பைக் கொண்டு அப்படகை என் கொம்பில் கட்டிவிடு.

ப்ரும்மாவின் இரவுக்காலம் முடியும் வரை நீ இருக்கும் படகை இழுத்துக்கொண்டு நான் ப்ரளயஜலத்தில் சுற்றித் திரிவேன். அப்போது நீ கேட்கும் கேள்விகளுக்கு பதிலுரைப்பேன். உனக்கு என்னைப் பற்றிய விளக்கங்கள் தானாகவே தோன்றி நீ ஞானம் பெறுவாய்.

இவ்வாறு ஸத்யவிரதனுக்கு க் கட்டளையிட்டுவிட்டு பகவான் அங்கேயே மறைந்துபோனார்.

ஸத்யவிரதன் அங்கேயே தர்பைகளைக் கிழக்கு நுனியாகப் பரப்பி அமர்ந்து மத்ஸ்யமூர்த்தியை தியானிக்கலானான்.

பகவான் கூறியபடி, ஊழிக்காலத்து மேகங்கள் திரண்டு பயங்கரமாக மழை பொழியலாயிற்று. கடல் பொங்கி கரையைக் கடந்து வரலாயிற்று. பூமி முழுவதும் கடலில் மூழ்கத் துவங்கியது.

ஸத்யவிரதன் பகவானின் கூற்றை நினைந்து, உடனே மூலிகைகளையும், மரம், செடிகளின் விதைகளையும் அள்ளி எடுத்துக்கொண்டு நின்றான். அப்போது அவனருகில் ஒரு படகு வந்தது. ஸத்யவிரதன் படகில் ஏறினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment