Wednesday, May 29, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 263

பரீக்ஷித் கேட்டான். ப்ரும்மரிஷியே முன்பொரு சமயம் பகவான் மத்ஸ்யாவதாரம் எடுத்து லீலைகள் செய்தாராமே. அதன் கதையைக் கேட்க விரும்புகிறேன்.

பகவான் ஏன் மீன் பிறவி எடுத்தார். மீன் பிறவி தமோகுணமுள்ளது. நாற்றமுடையது. பகவானது கதைகள் எல்லா ஜீவராசிகளுக்கும் நன்மையளிப்பது. ஆகவே, எனக்கு பகவானின் லீலா விநோதங்களை முழுமையாகக் கூறுங்கள்.

ஸ்ரீ சுகர் கூறலானர்.
எவருக்கும் ஆட்படாத ஒப்பார் மிக்கார் இல்லாத சுதந்திர புருஷன் பகவான். இருப்பினும் பசுக்கள், அந்தணர்கள், ஸாதுக்கள், வேதங்கள், தர்மம், உலகியல் செல்வங்கள் ஆகியவற்றைக் காக்க பற்பல அவதாரங்களை மேற்கொள்கிறார்.

பகவான் பெரியது சிறியது, உயர்ந்தது தாழ்ந்தது ஆகிய எல்லா ஜீவராசிகளிலும் காற்றைப்போல் உள்ளிருந்து பல திருவிளையாடல்கள் புரிகிறார். ஆனால், அந்த ஜீவராசிகளின் குணங்களால் தான் அடிமைப்படுவதில்லை.

இப்போது நடக்கும் கல்பத்திற்கு முந்தைய கல்பத்தின் முடிவில் ப்ரும்மதேவர் கண்ணயர்ந்தபோது, பிராம்மம் என்ற நைமித்திகப் ப்ரளயம் ஏற்பட்டது. அப்போது இம்மண்ணுலகம் கடலுள் ஆழ்ந்தது.

பிரளயம் தோன்றிய நேரம்‌ இரவு நேரமானதால் ப்ரும்மா உறங்கத் துவங்கினார். அப்போது அவரது திருமுகத்திலிருந்து வேதங்கள் வெளிவந்தன. அப்போது அங்கு வந்த ஹயக்ரீவன் என்ற அசுரன் அவற்றை திருடிச் சென்றான்‌.

ஸர்வசக்தரான பகவான் இதையறிந்து மத்ஸ்யாவதாரம் ஏற்றார். அவ்வமயம் ஸத்யவ்ரதன் என்ற பக்தன் நீரை மட்டும் பருகி தியானம் செய்துவந்தான். இவன்தான் இந்த மஹா கல்பத்தில் சூரியனின் மகனான ச்ராத்ததேவன். அவனைத்தான் பகவான் வைவஸ்வத மனு என்ற ஏழாவது மனுவாக நியமித்தார்.

ஒரு சமயம் ஸத்யவிரதன் க்ருதமாலா எனப்படும் வைகை நதியில் நீர்க்கடன் செய்தான்.

அப்போது குவிந்த அவன் கைக்குள் இருந்த நீரில் ஒரு சிறிய மீன் இருந்தது.

பாண்டிய மன்னனான அவன், அம்மீனை நீரிலேயே போட்டுவிட்டான்.

அப்போது குட்டிமீன் அவனைப் பார்த்துப் பேசியது.

அரசே! நீர் ஏழைப் பங்காளன். கொடிய நீர்வாழ் பிராணிகள் சில என்னைப் போன்ற குட்டிமீன்களை கொன்று உண்டுவிடுகின்றன. அவற்றிடமிடமிருந்து தப்பிக்கவே உம்மிடம் சரணடைந்தேன். நீர் எம்மை மறுபடி ஆற்றில் விட்டால் எனக்குப் புகலேது? என்று பரிதாபமாகக் கேட்டது. பகவான் தான் மீனுருவில் வந்திருக்கிறான் என்றறியாத மன்னன் அம்மீனைக் காக்க எண்ணி அதைத் தன் கமண்டலத்தில் இட்டு அரண்மனைக்கு எடுத்துச் சென்றான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment