Wednesday, May 22, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 259

பகவானின் திருவடி சத்யலோகத்தை அடைந்தபோது, அவரது நகங்களின் ஒளியால் சத்யலோகம் ஒளியிழந்தது.

ப்ரும்மா அவ்வொளியில் மறைந்துபோனார். கண்களைக் கூசும் ஒளியுடைய நகங்கள் கொண்ட திருவடியை மஹரிஷிகள் அனைவருடனும் சேர்ந்து வணங்கினார்.

ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும், தனுர் வேதம், ஆயுர்வேதம், காந்தர்வ வேதம், அர்த்த சாஸ்திரம் ஆகியவற்றின் நியமங்களுக்கான அதிஷ்டான தேவதைகளும், புராண, இதிஹாஸங்களுக்கான தேவதைகளும், சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம், கல்பம் ஆகிய வேதாங்கங்களின் தேவதைகளும் ப்ரும்ம லோகத்தில் வசிக்கின்றன.

அர்ச்சிராதி மார்கங்களில் வந்த கர்மாக்களைப் பொசுக்கிய ஞானிகளும், கல்பத்தின் முடிவில் பகவானுடன் ஐக்கியமாவதற்காக ஸத்யலோகத்தில் காத்திருக்கின்றனர். இவர்கள் பகவானின் திருவடிகளை இடையறாது நினைந்ததாலேயே ஸத்யலோகம் வந்தனர்.

பகவானின் தொப்புள்கொடியிலிருந்து தோன்றிய ப்ரும்மா தம்மிடத்திற்கு வந்த பகவானின் திருவடியை முறைப்படி பூஜை செய்தார்.

விஸ்வரூபனான பகவானின் திருவடியைக் கழுவியதால் அவரது கமண்டல தீர்த்தம் புனிதமாயிற்று. அதுவே ஆகாய கங்கையாகி, விண்ணுலகில் பாய்ந்து பின் புவியில் இறங்கி மூவுலகையும் பவித்ரமாக்குகிறது.


பதநக நீர் ஜனித ஜன பாவன என்று ஜெயதேவர் உள்பட அனைத்து மஹாத்மாக்களும் கொண்டாடுகின்றனர். பகவானின் பாத தீர்த்தமான கங்கை இன்று வரை புனிதத்துவம் மாறாமல் விளங்குகிறது.

ஈரடிகளால் மண்ணுலகையும் விண்ணுலகையும் அளந்தபின்பு தன் விபூதிகள் அனைத்தையும் ஒடுக்கிக்கொண்டு சிறிய வாமன ரூபம் கொண்டார்.

அனைத்து லோகபாலர்களும் பகவானை வணங்கினர்.
அப்போது கரடி அரசனான ஜாம்பவான் பேரிகையை முழங்கிக்கொண்டு காற்று வேகத்தில் எண்டிசைகளிலும் சென்று பகவானின் மங்களமான லீலைகளை அறிவித்தார்.

மூன்றடி நிலம் வேண்டி வந்த அந்தணச் சிறுவன், தம் அரசனை ஏமாற்றி மூவுலகையும் பிடுங்கிக்கொண்டானே என்று அசுரர்கள் கோபத்துடன் பேசினர்.

எப்போதும் ஸத்தியம் பேசுபவர் நம் அரசர். வேள்வி தீக்ஷை வேறு. அந்தணர்களிடம் அன்பு கொண்டவர். வாக்குத் தவறமாட்டார். எனவே அவரால் ஒன்றும் செய்ய இயலாது. நாமே இவரைக் கொல்வோம். அதுதான் நம் அரசர்க்குச் செய்யும் சேவை என்று கூறிக்கொண்டு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வாமனரை நோக்கி ஓடினர்.

விஷ்ணு பார்ஷதர்கள் சிரித்துக் கொண்டே அவர்களைத் தடுத்தனர்.
பத்தாயிரம் யானை பலம் கொண்ட நந்தன், சுநந்தன், ஜயன், விஜயன், ப்ரபலன், பலன், குமுதன், குமுதாக்ஷன், விஷ்வக்சேனர், கருடன், ஜயந்தன், ச்ருததேவன், புஷ்பதத்தன் , ஸாத்வதன் ஆகிய விஷ்ணு பார்ஷதர்கள் அசுரர்களைக் கொல்லத் தலைப்பட்டனர்.

தன் வீரர்கள் கொல்லப்படுவதைக் கண்ட பலி அவர்களைத் தடுத்தான்.
விப்ரசித்தன், ராகு, நேமி ஆகிய அசுரர்களை அழைத்து, காலம் நமக்கு சாதகமாக இல்லை. அமைதியாக இருங்கள். சண்டை வேண்டாம் என்று அறிவுரை கூறி அனுப்பினான் பலி.

அனைத்து ஜீவராசிகளுக்கும் இன்ப துன்பங்களைச் சரியாகத் தரும் காலதேவதையான பகவானை ஒருவரும் வெற்றி கொள்ள முடியாது.

படை, பலம், யோசனை, புத்தி, மதில்கள், மந்திரங்கள், மூலிகைகள், ஸாம தான பேத தண்டம் போன்ற முறைகள் எதனாலும் காலத்தை வெல்ல இயலாது.

முன்பு காலம் நமக்கு அனுகூலமாய் இருந்தது. அப்போது நாம் பலமுறை தேவர்களை வென்றோம். இப்போது அவ்வாறாக இல்லை. தெய்வம் நமக்கு அனுகூலமாகும் சமயம் வரும்போது நாம் மீண்டும் வெல்வோம். அதுவரை காலத்தை எதிர் நோக்குங்கள் என்றான்.

அசுரர்கள் மஹாபலி கூறியதைக் கேட்டு ரஸாதலம் சென்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment