Sunday, May 19, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 256

யாகசாலைக்குள் நுழைந்த வாமன பகவானைப் பார்த்து பலி, வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்ட, வாமனரோ, தன் காலடியால் மூன்றடி மண் வேண்டும் என்றார்.

மேலும், மூன்றடி மண்ணால் த்ருப்தி அடையாதவன், ஒன்பது வர்ஷங்கள் கொண்ட தீவே கிடைத்தாலும் த்ருப்தி அடையமாட்டான். எனவே எனக்குத் தேவையானதை மட்டும் கொடுங்கள்.

இறையருளால் தன் முன்வினைக்கேற்ப கிடைத்ததைக் கொண்டு மனநிறைவு அடைபவன் இன்பமாக வாழ்கிறான். புலனடக்கமற்றவனுக்கு மகிழ்ச்சி என்பதே இல்லை. மனநிறைவு கொள்ளாதவன் பிறவிச் சுழலில் மாட்டிக்கொள்கிறான். கிடைத்ததைக் கொண்டு மனநிறைவு கொள்பவனுக்கு ப்ரும்மதேஜஸ் வளர்கிறது. எனவே எனக்கு வேண்டியதை மட்டும் கொடுத்தால் போதுமானது. என்றார் வாமனர்.

வேறு வழியின்றி பலி, தங்கள் விடுப்பப்படியே ஆகட்டும் என்று சொல்லி, தானம் கொடுக்க தீர்த்த பாத்திரத்தை எடுத்தான்.

முக்காலமும் உணர்ந்த சுக்ராசார்யார், வாமனராய் வந்தவர் மஹாவிஷ்ணுவே என்பதை உணர்ந்தார். அவரது எண்ணத்தை அறிந்து, பலியைப் பார்த்துக் கூறினார்.

அரசனே! இந்த வாமன மூர்த்தி மஹாவிஷ்ணுவே தான். தேவர்களது விருப்பத்தை நிறைவு செய்ய வந்திருக்கிறார். உனக்குக் கேடு வரப்போவதை அறியாமல், தானமளிப்பதாக வாக்களித்துவிட்டாய்.

உன் செயலால் அசுரர்களுக்கு பெரும் தீங்கு நேரும். மாயையால் ப்ரும்மச்சாரிபோல் வந்து நிற்கும் இந்த நாராயணன், உன் அரசு, பதவி, செல்வம், புகழ், அனைத்தையும் பறித்து இந்திரனுக்குக் கொடுக்கப் போகிறார். மூன்றடிகளால் உலகனைத்தையும் அளந்துவிடுவார். எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் நீயும் உன் குலமும் எங்கு எப்படி வாழ இயலும்?

ஈரடிகளால் வானுலகையும், பூமியையும் அளந்தால், மூன்றாவது அடிக்கு நீ எங்கே போவாய்? வாக்குத் தவறினால் உனக்கு நரகம் கிடைக்கும். தானம் செய்தபின், வாழ்க்கை நடத்த ஏதுமில்லையெனில், அந்த தானத்தை யாரும் கொண்டாடமாட்டார்கள்.

வாழ்க்கை நடத்த உதவுவதற்குத்தான் தானமும் பரோபகாரமும். எவன் தன் செல்வத்தை தர்மம், புகழ், செல்வத்தைப் பெருக்குவதற்கு, தினசரி வாழ்க்கை, மற்றும் சுற்றத்தார்க்கு என ஐவகையாகப் பிரித்து வாழ்கிறானோ அவனே இம்மையிலும் மறுமையிலும் சுகமாய் வாழ்வான்.

தானமளிப்பதாகச் சொன்னதை அளிக்காவிட்டால் நரகம் வரும் என்று அஞ்சாதே. பெண்களை மகிழ்விக்கவும், வேடிக்கைக்காகவும், திருமணத்தைத் தடையின்றி முடிக்கவும், தன் உயிர்க்குத் துன்பம் நேரும்போதும், பசுக்களுக்கும், அந்தணர்க்கும் நன்மை பயக்கவும், பிற உயிரைக் காக்கவும் கூறப்படும் பொய்கள் தவறாகா. அவை நிந்திக்கத் தக்கவையல்ல. என்றார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், சுக்ராச்சார்யார் அசுர குருவானாலும் ஞானத்தினால் பகவானை உணர்ந்திருந்தார்.

மேலும், அசுரகுருவே ஆனாலும், குரு என்பவரது ஒரே நோக்கம், சீடனுக்கு இறையைக் காட்டுவது‌.
வந்திருப்பவன் பகவான் என்று தெளிவாக பலிக்கு எடுத்துரைத்தார் சுக்ராசார்யார்.

இன்னொரு சுவாரசியம் என்னவெனில்,
யாருக்கும் தெரியாமல், சுக்ராசார்யாருக்கு மட்டும் எப்படி தெரிந்ததாம் என்றால்,
ஈரேழு பதினான்கு லோகங்களிலும் சிறிதளவு செல்வம் இருப்பினும் அது மஹாலக்ஷ்மி கடாக்ஷம் என்று கொண்டாடுகின்றானர். அந்த மஹாலக்ஷ்மியோ பகவான் நாராயணனின் பாதமே கதி என்று அமர்ந்திருக்கிறாள்.

மஹாலக்ஷ்மியே காலடியில் இருக்கும்போது, பகவான் யாரிடமோ போய் தேஹி என்று கையை நீட்டி தானம் வாங்குகிறார். எனில், அவர் யாரென்று பார்க்க தாயாருக்கு ஆசை வந்து விட்டதாம்.

மேலும், தன் கணவர் கேட்டு அவன் இல்லையென்று சொல்லிவிட்டால் அவமானம் நேருமே என்று தானம் கொடுப்பவரை தான் ஒரு கடாக்ஷம் செய்வோம் என்று நினைத்தாளாம். எனவே பகவானின் மார்பில் வசிக்கும் தாயார், வாமனரின் மார்பை அலங்கரிக்கும் மான்தோலைச் சற்று விலக்கி எட்டிப் பார்த்தாளாம். அதை பார்த்த சுக்ராசார்யார், தாயார் ஹரியின் மார்பிலல்லவோ வசிப்பாள். எனவே வந்திருப்பவர் ஹரி என்று கண்டுகொண்டாராம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபாவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment