Friday, May 10, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 255

பலியின் யக்ஞசாலைக்குள் நுழைந்த வாமனரை பலி முறைப்படி பூஜித்து, யாது வேண்டுமெனக் கேட்டான். வாமன பகவான் பலியைப் பார்த்துக் கூறலானார்.

தாங்கள் கூறியவை அனைத்தும் தமக்குப் புகழ் சேர்ப்பவை. தமது குருவான, ப்ருகு முனிவரின் புதல்வரான சுக்ராசார்யாரின் புகழை வளர்க்கிறீர். தங்கள்ப்பாட்டனாரான ப்ரஹலாதனின் கட்டளைகளை மதிக்கிறீர்.

உங்கள் குலத்தில் இதுவரை, பேராசை கொண்டவர்களோ, கருமிகளோ பிறந்ததில்லை. தானம் தருவதாக வாக்களித்து பின் வாங்கிய வரும் இல்லை.

தானம் வேண்டும் யாசகனது தீனக்குரல் கேட்டு உதவாதவரும், போரின் அறைகூவல் கேட்டு பின் வாங்கியவரும் உமது வம்சத்திலேயே இல்லை.

ஹிரண்யாக்ஷன் கதையேந்தி தனியொருவனாக திக்விஜயம் சென்றான். மிகுந்த சிரமத்திற்குப் பின்னரே அவனை பகவான் போரில் வென்றார். பின்னாளில் அவனது மனோபலத்தையும், உடல் வலிமையும் நினைத்துப் பார்த்த பகவான் தன் வெற்றியை ஒரு பொருட்டாக எண்ணவே இல்லை.

தம்பி கொல்லப்படதைக் கேட்ட ஹிரண்யகசிபு மிகவும் சினம் கொண்டு ஸ்ரீ ஹரியைக் கொல்ல எண்ணி வைகுண்டம் சென்றான். அவனைக் கண்ட பகவான், இவன் நாம் எங்கு சென்றாலும் பின் தொடர்வான். வெளிமுகமான விஷயங்களையே பார்க்கிறான். உள்முகமாக இவனது உள்ளத்திலேயே நுழைந்து விட்டால், இவனால் நம்மைக் காணமுடியாது. என்று எண்ணினார். தன்னை நுண்ணுருவாக்கிக்கொண்டு, தன்னை நோக்கி ஓடிவரும் ஹிரண்யகசிபுவின் சுவாசத்தில் கலந்து அவனது ஹ்ருதயத்தில் அமர்ந்தார்.

ஹிரண்ய கசிபு, பகவானை வைகுண்டத்தில் காணாமல், பின் எல்லா உலகங்களிலும் தேடினான். எங்கும் அவரைக் காணவில்லை. என் தம்பியைக் கொன்றவன் திரும்பிவர இயலாத உலகம் சென்றிருப்பானோ. பகை என்பது உடல் உள்ளவரைதானே. எனவே இனி ஹரியிடம் பகை வேண்டாம் என்று நிச்சயித்து வீடு திரும்பினான்.

உன் தந்தையும் ப்ரஹலாதனின் மகனுமான விரோசனன், அந்தணர்களிடம் பக்தி பூண்டவன். தேவர்கள் அந்தண வேடம் பூண்டு வந்து அவனது ஆயுளை தானமாக வேண்ட, அவர்கள் தேவர்கள் என்ற உண்மையை உணர்ந்த பின்னரும், தன் ஆயுளை அவர்களுக்குக் கொடுத்தான்.

அசுரகுல திலகனே! உங்கள்‌ முன்னோர்‌ கைக்கொண்டிருந்த நெறியையே நீங்களும் பின்பற்றுகிறீர்கள். வேண்டுவதை நல்கும் பெருமனம் படைத்த தாங்கள் என் காலடிகளால் அளக்கப்பட்ட மூன்றடி நிலம் கொடுத்தால் போதுமானது.

நீங்கள் மூவுலகின் அரசனாயினும், பெருங்கொடையாளியாயினும், எனக்கு இதற்கு மேல் எதுவும் வேண்டாம். தனக்கு எவ்வளவு வேண்டுமோ, அதை மட்டும் தானமாகப் பெறுபவனே அறிவாளி. அப்போதுதான் யாசகம் வாங்கும் பிழையிலிருந்து ஒருவன் தப்பிக்க இயலும். என்றார்.

இதைக் கேட்டு பலியின் முகம் வாடியது.
அந்தணக் குழந்தையே! பெரியவர்கள் போல் பேசுகிறாய். ஆனால், இன்னும் குழந்தை புத்தி மாறவில்லை. நன்மை தீமைகளையும் அறியவில்லை. இதன் உட்கருத்து, குழந்தைபோல் தோற்றமளிக்கும் நீ பெரிய அறிவாளி. உன் நன்மை தீமைகளை அறியமாட்டாய். தனக்கென்று எதுவும் வேண்டமாட்டாய். என்பதாகும்.

நான் மூவுலகின் சக்ரவர்த்தி. ஒரு தீவையே வேண்டினாலும் தருவேன்‌. என் மனம் மகிழும்படி பேசிவிட்டு மூன்றடி மண் போதும் என்கிறாய். என்னிடம் யாசித்தபின், வேறொருவனிடம் யாசகம் பெற ஒருவன் கை நீட்டினால் அது எனக்கு இழுக்கு. உங்கள் வாழ்க்கையைச் சரிவர நடத்துவதற்குத் தேவையான அனைத்தையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.
என்றான் பலி.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment