Saturday, October 31, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 589

யதுவின் கேள்விக்கு அவதூதரான தத்தாத்ரேயர் புன்முறுவலுடன் பதிலிறுக்கத் துவங்கினார்.

அரசனே! எனக்குப் பல ஆசார்யர்கள் பாடம்‌ கற்பித்திருக்கிறார்கள். அவைகளின் பலனாக எனக்கு இவ்வுலகத்துடனான ஒட்டுதல் அறுந்துபோய்விட்டது. 
என் ஆசார்யர்கள் யார் யார் தெரியுமா?

பூமி, காற்று, ஆகாசம், நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில் பூச்சி, தேனீ, யானை, தேனெடுப்பவன், மான், மீன், பிங்களை என்னும் பொதுமங்கை, குரா எனப்படும் பட்சி, ஒரு சிறுவன், கன்னிப்பெண், வேடன், பாம்பு, சில்ந்தி, மற்றும் குளவி ஆகியோர்.

இந்த இருபத்துநான்கு குருமார்களிடம் நான் என்ன கற்றேன் என்று கூறுகிறேன் கேள்.

எல்லா ஜீவன்களாலும் வெகுவாகத் துன்புறுத்தப்பட்டாலும், அனைத்தையும் தன் கர்மா என்றெண்ணித் தன்னிலை மாறாமல் இருக்கும் பொறுமையை பூமியிடம் கற்றேன்.
புவியின் அனைத்து நிலைப்பாடுகளும் பிறர் நன்மைக்காகவே. அதற்கு வலிமை சேர்க்கும் விதமாக அதன் குழந்தைகளான மரங்களும் செடிகளும் கூட பரோபகாரத்தை மேற்கொண்டுள்ளன.

ஒரு யோகி தன் உடலில் உயிர் நிலைக்கத் தேவையான அளவு உணவை மட்டுமே ஏற்கவேண்டும். புலன் இன்பத்திற்காக ஏராளமான உணவுகளை உண்ணலாகாது. உணவுக்கட்டுப்பாட்டினால் வாக்கும் மனமும் அடங்கும்.

காற்று எங்கும் நிறைந்துள்ளது. ஆனாலும் எதனோடும் ஒட்டுவதில்லை. அதுபோல் யோகியும் எல்லா இடத்திலும் சுற்றினாலும் எதன் மீதும் ஒட்டுறவு கொள்ளலாகாது. வாயு நறுமணத்தையோ, துர்நாற்றத்தையோ தூக்கிக்கொண்டு சென்றாலும் அதனோடு ஒன்றுவதில்லை. ஆத்மாவானது பஞ்சபூதங்களால் ஆன சரீரத்தினுள் இருந்தாலும் எதனோடும் ஒட்டாமல் தனித்து நிற்கிறது‌. இதை நன்குணரவேண்டியது யோகியின் தர்மமாகும்.

ஆகாயம் இல்லாத இடமே‌ இல்லை. எல்லா ஜீவன் மற்றும்‌ பொருள்களிலும் உள்ளும் புறமுமாக வியாபித்திருப்பது ஆகாயம். யோகியானவன் எல்லா இடத்திலும் இருந்தாலும் எதனோடும் ஒட்டாத ஆகாயத்தோடு ஆன்மாவை ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளவேண்டும்.

நீர் இயற்கையிலேயே தூய்மையானது. த்ருப்தி தருவது. தன்னைத் தொடுபவர்களைத் தூய்மைப் படுத்துவது. அதே போல ஒரு முனிவனும் தன் பார்வை மற்றும் வாக்கினால் மற்றவருக்கு அன்பையும் மனத் திருப்தியையும் வழங்கவேண்டும். எப்போதும் மனத்தூய்மை பெற்றிருக்கவேண்டும். அவனோடு தொடர்பு கொள்பவர்களின் பாவங்களைத் தூய்மைப் படுத்த வேண்டும். முனிவனுக்கு நீரின் நண்பன் என்ற செல்லப்பெயர் உண்டு.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment