Tuesday, October 13, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 581

த்ருமிலர் மேலும் தொடர்ந்தார்.

ஸ்ரீமன் நாராயணன் ஒரு முறை ஹம்ஸ பட்சியின் வடிவத்தில் தோன்றி ஆத்மயோகத்தை உபதேசம் செய்தார். தத்தாத்ரேயராயகவும், சனத்குமாரராகவும், எங்களது தந்தையான ரிஷபதேவராகவும் தோன்றி ஆத்மயோகத்தை விளக்கினார்.

ஒரு சமயம் மது மற்றும் கைடபன் என்ற அசுரர்கள் வேதத்தைத் திருடிச் சென்றுவிட்டனர். அவ்வமயம் ஹயக்ரீவராக அவதாரம் செய்து, அவர்களைக் கொன்று வேதங்களை மீட்டார்.

மற்றொரு சமயம் மீனாகத் தோன்றி ஸத்யவ்ரதன் என்ற மனுவையும் புவியையும், மூலிகைகளையும் காப்பாற்றினார். 

ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் பூமியை எடுத்துச் சென்று ரஸாதலத்தில் ஒளித்து வைத்து விட்டான். அப்போது பகவான் ப்ரும்மாவின் மூக்கிலிருந்து வராஹமாக வெளிப்பட்டு அவனைக் கொன்று பூமியை அதனிடத்தில் நிறுவினார்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த சமயத்தில் ஆமையாக வடிவெடுத்து மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கினார். 

ஒரு சமயம் கஜேந்திரன் என்ற யானை முதலையின் பிடியில் மாட்டிக்கொண்டது. அப்போது அதன் அழைப்பில் பேரில் ஓடிவந்து அதை விடுவித்தார்.

மற்றொரு நேரம்‌ சில முனிவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். அப்போது அவர்கள் பகவானை அழைக்க, விரைந்துவந்து அவர்களை மேலே தூக்கிவிட்டார்.

த்வஷ்டா என்பவரின் புதல்வரையும், விருத்திராசுரன் என்ற பரமபாகவதனையும் இந்திரன் கொன்றுவிட்டான். அதனால் அவனை ப்ரும்மஹத்தி பாபம் பிடித்துக்கொண்டது. அவனை அந்தப் பாவத்திலிருந்து காப்பாற்றினார்.

நரசிம்மராக அவதாரம்‌ செய்து ஹிரண்யகசிபுவைக் கிழித்துப் போட்டார். ஹிரண்யகசிபு தேவமகளிரைச் சிறைப்பிடித்து அவனது வீட்டில் ஒளித்துவைத்திருந்தான். அவர்களையும் விடுவித்தார்.
ப்ரஹலாதனையும் காப்பாற்றினார்.

தேவாசுர யுத்தத்தில் அசுரவேந்தனை அழித்தார். வாமனாவதாரம் செய்து பலிச் சக்ரவர்த்தியிடமிருந்து தேவலோகத்தையும், பூமியையும் யாசித்துப் பெற்று அவற்றை தேவேந்திரனிடம் ஒப்படைத்தார்.

பரசுராமராகப் பிறந்து இருபத்தியொரு தலைமுறை க்ஷத்ரியர்களைக் கொன்றார். கார்த்தவீர்யார்ஜுனனின் பரம்பரையை அழித்தார். ராமனாக அவதாரம் செய்து கடலின் மீது அணை கட்டி, அதன் மீது நடந்து சென்று ராவணனை வதைத்தார்.

ஒப்பில்லாத பெருமைகளை உடைய பகவான் பூபாரம் குறைப்பதற்காக யது வம்சத்தில் தோன்றினார்‌. ஒருவராலும் செய்ய இயலாத பல அரிய காரியங்களைச் செய்தார். பின்னர் வேள்விச் சடங்குகளைக் குதர்க்கமாகச் செய்யும் தகுதியற்றவரிடம் வாதம் செய்து அவற்றை நிறுத்தப்போகிறார். கலியுகத்தில் அரசுப் பொறுப்பேற்கும் நீசர்களை மாய்க்க அவதாரம் செய்யப்போகிறார்.

இன்னும் அவரது லீலைகள் எண்ணில. இவற்றையெல்லாம் பல மஹாத்மாக்கள் விரிவாகப் பாடியிருக்கிறார்கள்‌. நான் உனக்கு சுருக்கமாகத்தான் சொல்லியிருக்கிறேன் என்று முடித்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment