Tuesday, October 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 579

காலத்தின் தேவைக்கேற்றபடி பற்பல வடிவங்கள் எடுத்து லீலைகள் செய்யக்கூடியவர் பகவான். அவர் இதுவரை செய்துள்ள லீலைகள், செய்துகொண்டிருப்பவை, இனி வருங்காலத்தில் செய்யப்போகும் லீலைகள் எல்லாவற்றையும் விரிவாகக் கூறுங்கள் என்றான் நிமிச் சக்ரவர்த்தி.

இக்கேள்விக்கான பதிலை ஏழாவது யோகியான த்ருமிளர் கூறத் துவங்கினார்.

பகவான் எல்லைகள் அற்றவர். அவரது குணங்களும் கணக்கில் அடங்கா. அவருடைய லீலைகள் அனைத்தையும் கூறவல்லவர் எவருமிலர். பூமியிலுள்ள தூசியின் துகள்களைக்கூட எப்படியாவது எண்ணிவிடமுடியும். ஆனால், பகவானின் லீலைகளைச் சொல்லி மாளாது.

தனக்குள்ளேயே பஞ்சபூதங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் அகண்ட ப்ரபஞ்சத்தை உருவாக்கி, லீலையாகத் தன் அம்சத்தை அதனுள் புகுத்தியவர் அவர். அவரே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குவதால் புருஷர் எனப்படுகிறார்.

மூவுலகங்களும் பகவானின் உடலே ஆகும். உடல் கொண்ட அனைத்து ஜீவன்களும் அவரது சக்தியால் படைக்கப்பட்டவையே. அந்தர்யாமியாக விளங்குவதோடு, ஞானம், மனோ பலம், உடல் பலம் ஆகியவற்றுக்கும் ஆதாரமாக இருக்கிறார்.

ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களாகவும் தானே பரிணமிக்கிறார்.
ஆதிபுருஷன் முதலில் ரஜோ குணத்தை ஏற்று ப்ரும்மாவாக ஆனார்.

பின்னர் வேதங்களுக்கும் கர்மாக்களுக்கும் பலன் அளிப்பதற்காக ஸத்வ குணத்தை ஏற்று விஷ்ணு ரூபம் ஏற்றார்.

அதன் பின் தமோ குணத்தை ஏற்று ருத்ரவடிவம் கொண்டு அழிக்கும் செயலைச் செய்கிறார். 

தக்ஷ ப்ரஜாபதியின் மகள் மூர்த்தி என்பவள் தர்மரின் மனைவி. அவர்களுக்கு நர நாராயணர்களாகப் பிறந்தார். அந்த அவதாரத்தில் பயன்களை அலட்சியம் செய்து கர்மாக்கள் செய்யும் விதத்தை (நைஷ்கர்ம்யம்) உபதேசம் செய்தார்.

அவர்கள் தாங்களும் அதைச் செய்துகாட்டினர். இன்றும் பதரிகாஸ்ரமத்தில் இருவரும் விளங்கிக் கொண்டிருக்கின்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment