Thursday, October 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 574

நவயோகிகளுள் ஒருவரான கவி கூறியதைக் கேட்ட நிமிச்சக்ரவர்த்தி,

எனில், பகவத் பக்தரின் லட்சணங்களைக் கூறுங்கள்? பக்தர் எப்படி இருப்பார்? அவரின் இயல்பு என்ன? எப்படிப் பழகுவார்? ஒருவர் பகவனுக்குப் பிரியமானவர் என்பதைக் காட்டும் அடையாளங்கள் உள்ளனவா? என்று கேட்டான்.

அதற்கு நவயோகிகளுள் ஒருவரான ஹரி என்பவர் பதிலுரைக்கத் துவங்கினார்.

எல்லா பிராணிகளிடத்தும் இறைவனைக் காண்பவரே முதன்மையான பக்தர் ஆவார்.

பகவானிடம் ஆழ்ந்த அன்பும், அடியார்களிடம் நட்புணர்வும், ஸம்ஸாரத்தில் உழல்பவரிடம் கருணையும், பகவானை வெறுப்பவரிடமிருந்து விலகியும் இருப்பார். 

பகவானின் மூர்த்திகளை மிகவும் ஆசையோடு வழிபட்டுக்கொண்டு அதே சமயம் அடியார்களிடம் ஒட்டுதல் இல்லாமலும் அல்லது பாரபட்சத்துடனும் பழகுபவர் கீழ்நிலையில் உள்ள பக்தராவார்.

புலன் இன்பங்களை அனுபவித்தாலும் அவை பகவானின் மாயை என்பதை கவனத்தில் கொண்டு, அவற்றால் வெறுப்போ மகிழ்ச்சியோ அடையாமல் இருப்பவர் உத்தம பக்தர் ஆவார்.

பிறப்பு, இறப்பு, பசி, தாகம், துக்கம், அச்சம் ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல் அனைத்தும் பகவானின் லீலை என்று பார்ப்பவர் உத்தம பக்தராவார்.

இன்பங்களை அனுபவிக்கும் ஆசையோ, நற்காரியங்களை புண்ணிய பலனுக்காகச் செய்து நல்ல லோகங்களை அடையவேண்டும் என்ற ஆசையோ இல்லாமல் நற்கர்மங்களைச் செய்பவர் உத்தம பக்தராவார்.

யார் தன்னுடைய பிறப்பு, குலம், செல்வம், படிப்பு, பக்தி ஆகியவற்றால் நான் என்ற கர்வம் கொள்ளாமல் இருக்கிறாரோ அவரே உத்தம பக்தர்.

எவர் தன் உடல், மற்றும் செல்வத்தில் தன்னுடையது மற்றவருடையது என்ற வேறுபாடு கொள்ளாமல் இருக்கிறாரோ அவரே உத்தம பக்தர்.

எவர் மூவுலக ஆதிக்கமே கிடைத்தாலும் பகவானின் திருவடியை மறக்காமல் இருக்கிறாரோ அவரே உத்தம பக்தர்.

தன்னையறியாமல் பேச்சுவாக்கில் பகவன் நாமத்தைக் கூறினாலே பாவங்கள் பொடிப்பொடியாகும். அப்படியிருக்க பகவானின் திருவடித் தாமரைகளில் தன்னைப் பிணைத்துக் கொண்டுள்ள பக்தரின் நிலை என்ன? 

என்று கூறினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment