Saturday, October 3, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 576

மனத்தை வசப்படுத்த இயலாமல் சிற்றின்பங்களில் உழலும் பாமரர்க்கு மாயையைக் கடப்பது கடினமே. முனிச்ரேஷ்டரே! அப்படிப்பட்டவர்க்கு மாயையைக் கடக்க அதிகம் சிரமம் இல்லாத மார்கம் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அதை எனக்குக் கூறுங்கள் என்றான் நிமிச் சக்கரவர்த்தி.

இக்கேள்விக்கு நான்காவது யோகியான பிரபுத்தர் விடை பகரத் துவங்கினார்.

செல்வத்தை மிகவும் கஷ்டப்பட்டுத்தான் ஈட்டவேண்டியுள்ளது. அப்படியும் அது கஷ்டத்தைத்தான் கொடுக்கும். அப்படித்தான் வீடு, மனை, மக்கள், உறவு அனைத்தும்.
இவை அனைத்துமே அழியக்கூடியவை. அழியும் பொருளால் எவ்வாறு நிலையான ஆனந்தத்தைத் தர இயலும்?

பலனுக்காகப் பெரிய கர்மங்களைச் செய்யலாம். அவற்றால் அடையப்படும் மேலுலகங்கங்களும் அழியக்கூடியவையே.

இப்பூவுலகிலுள்ள போட்டி, பொறாமைகள் மேலுலகங்களிலும் உள்ளன. அச்சூழலிலும் அமைதி கிட்டாது.

ஆகவே நிரந்தர ஆனந்ததைத்தை வேண்டுபவன் செய்யவேண்டியது ஒன்றேயாகும். அது யாதெனின் பரப்ரும்மத்தை உணர்ந்த ஒரு உயர்ந்த ஞானியை குருவாக அடையவேண்டும். அவரையே தன் இஷ்டதெய்வமாக வழிபடவேண்டும்.

அவரிடமிருந்து பாகவத தர்மத்தைக் கற்றுக்கொண்டு கடைப்பிடிக்க வேண்டும். பகட்டுக்காக இல்லாமல் மனப்பூர்வமாக அவருக்குச் சேவை செய்து அவரது நன்மதிப்பைப் பெறவேண்டும். குருவுக்குச் செய்யும் தன்னலமற்ற சேவை ஒன்றே பகவானான ஸ்ரீ மன் நாராயணனை உடனடியாக மகிழ்விக்கக்கூடியது.

யாரிடமும் பற்றில்லாமல் பழகவேண்டும். சாதுக்களையே உறவாக எண்ணவேண்டும். சூழலுக்கேற்ப மற்ற ஜீவன்களிடமும் மனிதர்களிடமும் அன்புடனும் தயையுடனும் பழகவேண்டும்.

மனத்தூய்மை, உடல்தூய்மை, மௌனம், சாஸ்திரங்களை அவ்வப்போது சிந்தித்தல், நேர்மை, பிரம்மச்சர்யம், அஹிம்சை, சமநோக்கு ஆகிய குணங்களைக் கைக்கொள்ளவேண்டும்.

எல்லா இடங்களிலும் பகவானைக் காண்பது, ஆத்மாவிலேயே லயித்திருப்பது, எளிய தோற்றம், கிடைப்பதைக் கொண்டு த்ருப்தி அடைவது, சாஸ்திர நூல்களிடம் நம்பிக்கை, மற்ற மார்கங்களை நிந்திக்காமல் இருப்பது, வாய்மை, மனவடக்கம், புலனடக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பகவானின் குணங்கள் மற்றும் லீலைகளை ஆசையுடன் கேட்கவேண்டும். இயன்றபோதெல்லாம் கீர்த்தனம் செய்வதும் கேட்பதுமாக இருக்கவேண்டும். தான் செய்யும் எல்லாச் செயல்களையும் பகவானின் ப்ரீதிக்காகச் செய்யவேண்டும்.
அடியார் சேவை, மற்றும் சாமான்ய மக்களுக்கும் துன்பத்தில் இயன்ற உதவிகளைச் செய்தல் ஆகியவை முக்கியமானவை.

எப்போதும் பகவான் ஹரியின் நாமத்தைக் கீர்த்தனம் செய்வது சாதன பக்தியாகும். இதைத் தொடர்ந்து செய்தால் ப்ரேம பக்தி சித்திக்கும்.

அதனால் புளகாங்கிதம் அடைதல், பகவானின் லீலையை நினைத்து ஏங்குதல், அழுதல், சிரித்தல், ‌உலக நடைமுறைக்கு ஒவ்வாமல் நடந்துகொள்ளுதல்,‌ நடனமாடுதல், பாடுதல், பகவானின் லீலைகளை அபிநயம் செய்தல், ஆகிய லக்ஷணங்கள் ஏற்படும். சில சமயம் அனைத்தையும் கடந்து மௌனமாகவோ, மூர்ச்சையாகவோ ஆகிவிடுவதும் உண்டு. 

பகவத் பக்தியில் ஈடுபடுபவர்க்கு மாயையைக் கடப்பது வெகு சுலபம்

என்று முடித்தார் பிரபுத்தர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment