Sunday, October 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 587

யாதவர்கள் அனைவரும் பயணத்திற்குத் தயாராக, அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த உத்தவருக்கு மனம் கலங்கிற்று.

கண்ணனிடம் வந்து வண்ங்கிவிட்டுப் பேசலானார்.

தங்கள் லீலைகள் சொல்பவரையும் கேட்பவரையும் பவித்ரமாக்குகின்றன. பிராம்மண சாபம் உங்களுக்கு ஒரு பொருட்டில்லை. எவ்வளவோ அசுர சக்திகளை அழித்த தங்களுக்கு இதிலிருந்து தப்புவது ஒரு விஷயமா? ஆனாலும் அதைச் செய்ய விரும்பாமல் ஏற்றுக்கொண்டு இவ்வுலகை விட்டுக் கிளம்ப முடிவுசெய்துள்ளீர்கள்.

தங்கள் பாதகமலங்களைக் கணநேரமும் என்னால் பிரிய இயலாது. தாங்கள் செல்லுமிடத்திற்கு என்னையும் அழைத்துச் செல்லுங்கள்.

தங்களுடைய லீலைகளைச் சுவைத்த பின்பு மனம் வேறு எதில் நிலை கொள்ளும்? 
பல வருடங்களாக உட்காருதல், நடத்தல், உண்ணுதல், உறங்குதல் என்று எல்லாச் செயல்களையும் ஒன்றாகவே செய்தோம். அப்படியிருக்க என்னைப் பிரிந்து நீங்கள் செல்லலாமா?

தாங்கள் உபயோகித்த பொருள்களையே ப்ரசாதமாக இதுநாள் வரை பயன்படுத்தியிருக்கிறேன். நாங்கள் அனைவருமே தங்களது அடிமைகள். இந்த மாயையையும் வெற்றி கொள்ள எங்களுக்கு அருள் செய்யுங்கள்.

யோகீஸ்வரர்கள் தங்கள் சக்தியினால் ப்ரும்மலோகத்தை அடைவர். ஆனால் நாங்களோ இந்தக் கர்ம மார்கத்திலேயே உழன்றுகொண்டிருக்கிறோம். ஆனால் இந்தக் கொடுமையான மாயையை நாங்கள் தங்கள் பெயரையும் லீலைகளையும் சொல்லிக்கொண்டு்ம் கேட்டுக்கொண்டும் சுலபமாகக் கடந்துவிடுவோம். அதற்காக உடலை வருத்தவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. ஆனால் உங்களைப் பிரியும் சக்தி எங்களுக்கில்லை என்றார்.

அதைக் கேட்ட கண்ணன் அழகாகப் புன்முறுவல் பூத்தான். பின்னர் உத்தவரின் தோளின் மீது கையைப் போட்டுக்கொண்டு ஒரு தனியிடத்திற்கு அழைத்துப்போனான்.

உத்தவா! நீ சொல்வது உண்மைதான். நான் இப்புவியை விட்டுக் கிளம்பப்போகிறேன். ப்ரும்மா முதலான தேவர்கள் அனைவரும் வந்து என்னை தேவலோகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.

நான் பலராமனுடன் அவதாரம் செய்ததன் நோக்கம் பூர்த்தியாகிவிட்டது.

பிராம்மண சாபத்திற்கு ஆளான இந்த யதுவம்சம் தமக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டு முழுவதுமாக அழியப்போகிறது.

இன்றிலிருந்து ஏழாவது நாள் இந்த துவாரகை நகரைக் கடல் விழுங்கிவிடும். 

நான் இவ்வுலகிலிருந்து நீங்கியவுடன் நற்செயல்கள் யாவும் அழியும். கலியுகம் வரப்போகிறது. கலிபுருஷன் அனைத்தையும் ஆக்கிரமித்துக் கெடுத்துவிடப்போகிறான். 

மக்கள் அனைவரும் துர்நடத்தையுள்ளவர்கள் ஆவார்கள். அதர்மத்தைப் பின்பற்றுவதில் ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.

உன்னால் அதையெல்லாம் தாங்கிக்கொள்ள இயலாது.
நான் சென்ற பிறகு நீ இங்கே இருக்கவேண்டாம். நீ உன் உறவுகளிடம் கொண்ட பாசத்தை அழித்து என்னிடமே மனத்தை ஒருமுகப்படுத்தி பற்றற்றுத் திரிவாயாக.

புலன்களால் அனுபவிக்கப்படுபவை அனைத்தும் அழியக்கூடியவை என்று அறிந்துகொள்.

மனத்தெளிவு இல்லாதவர்களுக்கு மனமயக்கம், குணம், தோஷம் அனைத்தும் உண்டு.
அவர்களுக்காகவே அனைத்து விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன.

உன் மனத்தை ஒரு நிலைப் படுத்தி எல்லாப் பொருள்களிலும் என்னையே காண்பாய். நானே இவ்வுலகமாக விளங்குகிறேன்.

அனைத்து உடல்களிலும் உயிராக விளங்குவது நானே என்பதை உணர்வாய் உத்தவா!

எல்லா பிராணிகள், மற்றும் ஜீவன்கள் அனைத்தையும் அவற்றின் குண தோஷங்களைப் பாராமல் என் ஸ்வரூபமாகவே எண்ணி அவற்றை நேசிப்பாயாக! அது ஒன்றே இப்பிறவிச் சுழலினின்று மீளும் வழியாகும் என்றான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.. 

No comments:

Post a Comment