Sunday, October 4, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 577

நாராயணன் என்றழைக்கப்படும் அந்த பரப்ரும்மத்தின் வடிவம் எப்படிப்பட்டது?
அதை தயைகூர்ந்து விளக்குங்கள் என்றான் நிமிச் சக்ரவர்த்தி

இப்போது ஐந்தாவது யோகியான பிப்பலாயநர் திருவாய் மலர்ந்தார்.

மன்னவா! இந்த அண்டத்தின் தோற்றுவாய், அது நிலைத்திருத்தல், மறைவு, ஆகியவற்றின் காரணம் ஸ்ரீமன் நாராயணன் ஆவார். அவருக்குத் தோற்றமே இல்லை. அவர் ஜீவன்களின் கனவு மற்றும் உறக்கத்திலும் கூட சாட்சியாய் விளங்குகிறார்.

உறங்கி எழுந்தபின் நன்றாக உறங்கினேன் என்று மகிழ்ச்சியாகச் சொல்லமுடிவதன் காரணம், உறக்க நிலையிலும் ஆன்மா விழிப்புடன் சாட்சியாக பார்த்துக்கொண்டிருப்பதே ஆகும். அதன் இயல்பான ஆனந்தத்தில் சற்று நேரம் தன்னை மறந்து லயிப்பதால் எழுந்ததும் அனுபவிக்கப்பட்ட ஆனந்தத்தை மட்டும் நினைவுகூர முடிகிறது.

அவர் ஆத்ம ஸ்வரூபமாக உள்ளிருப்பதாலேயே எல்லா காரியங்களையும் செய்யமுடிகிறது. இவை எல்லாவற்றையும் கடந்து தனித்திருப்பவரும் ஸ்ரீமன் நாராயணனே. 

அக்னியிலிருந்து தோன்றும் ஜ்வாலைகள் அக்னியை ப்ரகாசப்படுத்த இயலாது. அதனால் மற்ற பொருள்கள் ப்ரகாசமாகத் தெரியும். அதுபோல் ஆத்மாவின் வெளிச்சத்தாலேயே கண்கள், ப்ராணன் மற்றும் அனைத்துப் புலன்கள் எல்லாம் இயங்குகின்றன.
அவற்றால் ஆத்மாவைக் காணவோ விவரிக்கவோ இயலாது.

வேதங்கள் கூட பகவானைக் கூறும்போது இது அல்ல, இது அல்ல, என்று தள்ளிக்கொண்டே வந்து கடைசியில் எஞ்சி நிற்கும் பொருள் என்று தான் சொல்லமுடிகிறது.

அவ்வாறு எஞ்சும் பொருளே‌ சேஷன் எனப்படும் நாராயணன் ஆவார்.

முதலில் பரப்ரும்மம் மட்டுமே இருந்தது. அதனிடமிருந்து ஸத்வம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களால் ஆன ப்ரக்ருதி தோன்றிற்று. அதன் மீது பகவானின் பார்வை பட்டதும் ஹிரண்யகர்பம் எனப்படும் மஹத் தத்வமும், அஹங்காரமும் தோன்றின. பின்னர் அஹங்காரத்திலிருந்து மனம், புலன்கள் ஆகியவற்றின் அதிதேவதைகள் தோன்றின. அனைத்தும் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் தனித்து நின்றபோது பரமாத்மாவே ஆத்ம ரூபத்தில் அவற்றுள் ப்ரவேசித்தார். பின்னர் அவை ஒன்றுக்கொன்று ஒத்துப்பொய் அவற்றின் சேர்க்கை விகிதத்தால் மேலும் பல பொருள்கள் தோன்றின.

அசையும் அசையாப் பொருள்கள் அனைத்தின் ஆதாரமும் பரமாத்மாவேதான்.

ஆத்மாவிற்கு பிறப்பு இறப்பு இல்லை. அது வளர்வதில்லை. தேய்வதுமில்லை. நிலையில்லாத பொருளுக்குத்தான் மாற்றம் உண்டு. அழிவற்ற ஆத்மா மாறுபாடற்றது. அது தங்கியிருக்கும் உடலுக்கேற்ப வடிவம், குணம், பெயர் ஆகியவற்றைப் பெறுகிறது.

பிறப்பு நால்வகைப்பட்டது.
முட்டையிலிருந்து தோன்றுவது, கருவிலிருந்து தோன்றுவது, 
முளை விடுவது, வியர்வையிலிருந்து தோன்றுவது.

அவ்வாறு பிறப்பெடுக்கும் ஜீவனிடம் அதற்கேற்ப கர்மச்சுழல் கொண்ட ப்ராணன் ஒட்டிக்கொள்கிறது. 
இந்திரியக் கூட்டமாகிய இவ்வுடலை நான் என்று எண்ணத் தூண்டுவது உறக்கத்தில் கூட விடாது.

பகவானின் பாதகமலங்களில் பக்தி ஏற்படுபவர்க்கு உள்ளத்தூய்மை கிட்டும். அவருக்கு மாசற்ற ஆத்ம தத்வம் உள்ளங்கை நெல்லிக்கனியாகும். சூரிய வெளிச்சம் எப்படி நேராகத் தெரியுமோ அதுபோல் அவரிடம் ஆத்ம ப்ரகாசம் வெளிப்படும்.

என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment