Tuesday, December 24, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 376

தினம் தினம் கண்ணன் புதுப்புது விளையாட்டுக்களைக் கண்டுபிடித்து கோபச்சிறுவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தான்.

ஒருநாள் களிமண்ணால் பொம்மை செய்து விளையாடிக்கொண்டிருந்தான் கண்ணன். அவனைப்போல் அழகாக சிறுவர்களுக்கு பொம்மை செய்ய வரவில்லை. இருப்பினும் முயற்சி செய்துகொண்டிருந்தனர்.

அப்போது ஒரு அசுரன் வந்து வெகுநேரமாக நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். பின்னர் கன்றின் உருவம் எடுத்துக்கொண்டு மந்தையில் கலந்துவிட்டான். மாலையானதும் அனைவரும்  கன்றுகளைத் திரட்டிக்கொண்டு கிளம்ப முயற்சி செய்தார்கள். 

லட்சக் கணக்கான கன்றுகள் இருப்பினும் ஒவ்வொன்றின் பெயரும் கண்ணனுக்குத் தெரியும். அவையும் கண்ணன்பால் மிகுந்த அன்பு வைத்திருந்தன. புதிதாகக் கூட்டத்தினுள் கலந்த கன்றைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டான். அசுரன் வடிவிலிருந்த கன்று கண்ணனைக் கொல்வதற்காக மற்ற கன்றுகளை இடித்துத் தள்ளிக்கொண்டு  முண்டியடித்துக்கொண்டு கண்ணனின் அருகே வந்து முட்டப் பார்த்தது.

கண்ணன் அவனை பலராமனுக்குச் சுட்டிக் காட்டினான். பின்னர் ஒன்றுமறியாதவன்போல் அதனருகே தானே சென்று அதன் பின்னங்கால்களைப்‌ பிடித்துத் தூக்கி விண்ணில் கரகரவென்று சுழற்றினான். அக்கணமே அசுரனின் உயிர் பிரிந்தது. பின்னர் அசுரனின் உடலை அங்கிருந்த விளாமரத்தின்மீது வீசினான் கண்ணன். மரங்களிலிருந்து விளாம்பழங்கள் உதிர்ந்துவிழ அவற்றோடு சேர்ந்து அசுரனும் வீழ்ந்தான்.

கீழே விழுந்ததும் அவனது உடல் உண்மையான அசுர  நிலைக்குத் திரும்பி விட்டது. அதைக் கண்டு சிறுவர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பினர். தேவர்களும் பூமாரி பொழிந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment