Tuesday, December 17, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 372

இடைக்குலப் பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர். அவர்களுள் மூத்தவரான உபநந்தர் கோகுலத்தை விட்டு வேறெங்காவது செல்லலாம் என்று ஆலோசனை கூறினார்.

அதைத் தொடர்ந்து ஒவ்வொருவராகப் பேசத் துவங்கினர்.

சின்னக் குழந்தைகளாப் பார்த்து கொன்னு போட்டிருக்கா அந்த ராக்ஷஸி. பக்கத்து கிராமத்தில்கூட நிறைய குழந்தைங்க போயிடுச்சு. நல்லவேளையா அவளால நம்ம ஊர்க் குழந்தைகளுக்கு ஒன்னும் ஆகல.

இன்னொருவர் ஆரம்பித்தார்.

காத்து மாதிரி ஒரு அசுரன் வந்தானே. நம்ம கண்ணனை ஆகாசத்தில் கொண்டுபோய்த் தூக்கிப்போட்டானே. எவ்ளோ ஒயரம். யப்பாடீ..கீழ விழுந்த  குழந்தையை எப்டியோ பகவான் காப்பாத்தினார்.

இப்ப என்னடான்னா நெடுநெடுன்னு ஆகாசத்துக்கு வளர்ந்திருக்கற மரங்க ரெண்டும் சாய்ஞ்சுடுச்சு.

நல்லவேளையா அதுக்கு நடுவுல இருந்த கண்ணனுக்கோ வேற குழந்தைங்களுக்கோ ஒன்னும் ஆகல.

வரிசையா ஏதாவது ஆபத்து வந்துட்டே இருக்கு.

ஒவ்வொரு நிமிஷமும் நம்ம குழந்தைகளுக்கு என்னாகுமோன்னு பயமாவே இருக்கு.

அதிலயும் கண்ணனுக்கு ஏதாவது ஆகுமோன்னுதான் ரொம்ப பயம்.

காலைல மாடு மேய்க்கப் போனாக்கூட நினைப்பெல்லாம் வீட்லதான். 

டேய், உனக்கு இப்பதான் கல்யாணம் ஆயிருக்கு. அப்டிதான் இருக்கும். சும்மாயிரு.

எல்லாரும் கொல்லென்று சிரிக்க அந்த இடையன் வெட்கினான்.

அடுத்த அசம்பாவிதம் நடக்கறதுக்கு முன்னால நாம வேறெங்கயாவது போலாம்.

ம்ம்ம்..
சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தார் நந்தன்.

பின்னர், வேறெங்க போலாம்? நீங்களே ஏதாவது யோசிச்சு வெச்சிருந்தா  சொல்லுங்க. என்றார்.

ஒரு வயதான இடையன் பேசத்துவங்கினார்.

நந்த ராஜா.. நான் ஒரு எடம் சொல்லவா..

சொல்லுங்க.

பக்கத்தில ப்ருந்தாவனம்னு ஒரு காடு இருக்கே.

ஆமாம். நானும் மாடு ஓட்டிட்டுப் போறப்ப சில சமயம் அதுக்குள்ள போயிருக்கேன்.

ம்ம். ஆமா. அது நல்ல இடம். ஒரு பக்கம் யமுனா நதி. இன்னொரு பக்கம் கோவர்தன மலை. இயற்கையா ஒரு பாதுகாப்பா அமைஞ்சிருக்கு. நடுவில் பெரிய சமவெளி இருக்கு. அங்க போனா நாம எல்லாரும் தங்க வசதி பண்ணிக்கலாம்.
சட்டுனு எதிரிகள் யாரும் வரமுடியாது.

மற்றொரு கோபன், ஆமா ஆமா அது நல்ல இடம். அங்கயே போலாம்.

என்று சொல்ல, நந்தருக்கும் அந்த யோசனை சரியென்று பட்டது. அதற்குள் மற்ற கோபர்களும் 

ஆமாம் ஆமாம் நாம ப்ருந்தாவனத்துக்கே போகலாம் 

என்று கூட்டாகச் சொல்ல, அனைவரும் ப்ருந்தாவனம் செல்வது ஒரு மனதாக முடிவாயிற்று.

நந்தன், அனைவரையும் பார்த்து,
நல்லது, நாளைக்கே போகலாம். இன்னிக்கு எல்லாரும் வீட்டுக்குப்போய் கிளம்ப ஏற்பாடு பண்ணுங்க. வண்டிகள்ள சாமானெல்லாம் கட்டுங்க. மாடு கன்னுக்குட்டியெல்லாம் தொலயாதபடி, கட்டி அழைச்சிட்டுப்போவோம்.

பெண்கள் குழந்தைகள்ளாம் வண்டிகள்ள வரட்டும்.

எல்லா ஆயுதங்களையும் எடுத்துக்கோங்க.

முன்னும் பின்னுமா காவலுக்கு ஆள் போகணும்.

எல்லாரும் நாளை பொழுதுவிடியும்போது கிளம்பலாம்‌. போய்ச்சேரும்போது சூரியன் மேல ஏறிடும். அதுக்கேத்தபடி ஏற்பாடு இருக்கட்டும். என்றார்.

உறங்கிக்கொண்டிருந்தபடியே கண்ணன் சிரித்தான்.
ப்ருந்தாவனத்திற்குப் போகவேண்டும் என்ற அவனது  சங்கல்பம் ஈடேறிவிட்டது. 

சாமி தாமரைப்பூ காட்டிச்சோ, என்று குழந்தையைக் கொஞ்சிவிட்டு, சாமான்களை ஏறக்கட்டும் வேலையைப் பார்க்கப்போனாள் யசோதை.

அசுரர்கள் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்காக வரவில்லை. கண்ணனைக் கொல்லத்தான் வந்தார்கள் என்று கோபர்களுக்கு நன்றாகத் தெரியும். கண்ணனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதென்பதே அவர்கள் அனைவரின் கவலையும். கண்ணனுக்கு ஒரு இடத்தில் ஆபத்து அதிகம் என்றால் அவ்விடம் தங்களுக்கும் வேண்டாம். அவன் வேறிடம் சென்றால் நாமும் அவனுடன் செல்வோம். கண்ணனைப் பிரிந்து இருக்க இயலாது என்பதே அவர்களது நிலைப்பாடு. ஒருவர் பாக்கியின்றி,  அவர்கள் அனைவருமே  கண்ணனுக்காக அவ்வளவு நாள்களாக தாங்கள் வாழ்ந்து வந்த வீடு, சூழல் அனைத்தையும் விட்டு வேறிடம் செல்லத் தயாரானார்கள் என்பதே அவர்களது பக்தியின் அழகு.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment