Wednesday, December 18, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 373

அடுத்த நாள் அதிகாலையில் வண்டிகளில் சாமான்களை ஏற்றிக்கொண்டு, தத்தம் பசு மந்தையை ஒழுங்குபடுத்தி ஒரே இடத்தில் கொண்டு சேர்த்துக் கொண்டு, கோபர்களது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் துவங்கியது.

முதியவர்கள், சிறுவர்கள், மற்றும் பெண்களை வண்டிகளில் ஏற்றிக்கொண்டனர். பசுக்களை முன்னே செல்லவிட்டு, கோபர்கள் வில்லேந்திக்கொண்டும், கொம்புகளை ஊதிக்கொண்டும், முரசறைந்துகொண்டும், மிகுந்த கவனத்துடன் நாற்புறமும் பார்த்துக்கொண்டு சென்றனர். 

வண்டிகளில் அமர்ந்திருந்த பெண்கள் கண்ணனின் லீலைகளை அழகாகப் பாடிக்கொண்டே சென்றனர்.

யசோதை, ரோஹிணி இருவரும் கண்ணனையும் பலராமனையும் ஒரே வண்டியில் வைத்துக்கொண்டு பயணித்தார்கள். வழியெல்லாம் குழந்தைகளின் குறும்பையும், மழலைப் பேச்சையும் ரசித்துக்கொண்டே வந்தனர். 

காட்டுவழியில் சென்றதால் பல வித்யாசமான மரங்கள், மலர்கள், விலங்குகள் அனைத்தையும் கடந்து சென்றனர்.

வழியில் எதைப் பார்த்தாலும் குழந்தைகள் இருவரும் மாற்றி மாற்றி இது என்ன? இது என்ன? என்று கேட்டுக்கொண்டே வந்தனர். 

பேசிப்பேசி நேரம் போனதும் தெரியவில்லை. பயணக்களைப்பையும் உணரவில்லை. ப்ருந்தாவனமே வந்துவிட்டது. 

அங்கே நடுவிலிருந்த பெரிய சமவெளியின் நடுவில் நந்தன் சென்று ஒரு கொடியை நட்டார். அதைச் சுற்றி அரை வட்ட வடிவில் வண்டிகளை நிறுத்தினர்.

கோபர்கள் சென்று பசுக்கள் தங்குவதற்கான கொட்டில்களை கிடுகிடுவென்று அமைத்தனர்.

 மாடுகளையும், கன்றுகளையும் பாதுகாப்பாகக் கொட்டிலில் விட்டனர். பசுக்களல்லவோ அவர்களது செல்வம்? அவற்றை முதலில் காக்கவேண்டுமல்லவா?

பின்னர், தாங்கள் தங்குவதற்காகவும், நந்தனுக்காகவும் வீடுகள் அமைக்கத் திட்டமிட்டனர். அதுவரை தற்காலிகத் தங்குமிடங்களை ஏற்படுத்திக்கொண்டனர்.

பற்பல குன்றுகள் சூழ்ந்த நீண்ட நெடிய கம்பீரமான  கோவர்தன மலை, ஆங்காங்கே தங்கக் குவியல் போன்ற மணல் திட்டுக்கள், மயில்கள், குயில்கள், அன்னங்கள், மற்றும் பல பறவைகளின் ஒலிகள்  சங்கீதமாய்க் கேட்கும் அழகிய வனம் ஆகியவற்றைக் கண்டதும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

புதிய இடம் என்பது தவிர, ப்ருந்தாவனத்தின்  அழகும் மயக்கிற்று.

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்கள் இயற்றிய ப்ருந்தாவனத்தை வர்ணிக்கும் மதுரகீதம்

ராகம்: மாயாமாளவகௌளை தாளம்: ஏகம்

ப்₃ருந்தா₃வனம் ப₄ஜே ப்₃ருந்தா₃வனம் - நித்யம்
ப்₃ருந்தா₃வனம் ப₄ஜே ப்₃ருந்தா₃வனம்

01. க₂க₃ம்ருக₃ ப்₄ரமிதம் ப்₃ருந்தா₃வனம் - விவித₄
புஷ்பைரலங்க்ருதம் ப்₃ருந்தா₃வனம்

02. யமுனா லாலிதம் ப்₃ருந்தா₃வனம் - நித்ய
ராஸோத்ஸவஸ்த₂லம் ப்₃ருந்தா₃வனம்

03. ஹரிசரணாங்கிதம் ப்₃ருந்தா₃வனம் - க்ருஷ்ண
லீலாஸ்த₂லம் ஶ்ரீ ப்₃ருந்தா₃வனம்

04. பூ₄லோக கோ₃லோகம் ப்₃ருந்தா₃வனம் - க்ருஷ்ண
ப₄க்தானாம் ஆஶ்ரயம் ப்₃ருந்தா₃வனம்

05. ப₄க்தசித்தாகர்ஶணம் ப்₃ருந்தா₃வனம் - ப்₃ரஹ்ம
நிஷ்டா₂கர்ஷகம் ப்₃ருந்தா₃வனம்

No comments:

Post a Comment