Thursday, December 5, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 363

சிறிது நேரம் குழந்தைகள் விளையாடுவதை ரசித்த யசோதை உள்ளே சென்றாள்.

கன்றின் வாலைப் பிடித்து ஓடிக் கொண்டிருந்த குழந்தைகள் அப்படியே மண்ணில் அமர்ந்துகொண்டனர்.

சுற்றி சுற்றி வந்த கன்று கண்ணனின் அருகில் அமர்ந்தது. கண்ணன் மெதுவாக மண்ணை எடுத்து வாயில் வைத்தான்.

பார்ததுக் கொண்டே இருந்த பலராமன், கண்ணன் கையைத் தட்டிவிட்டான். மீண்டும் பலராமன் அசருவதற்குள் கண்ணன் நன்றாக நைசாக இருந்த மண்ணை அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். கண்ணனின் கரம் பட்டதால் அந்த மண் பகவானுக்கே மிகவும் சுவைத்தது.

தன்னாலேயே உலகில் அனைத்தும் இனிமையாகிறது என்று அறியாத குழந்தையான கண்ணன் இன்னொரு வாய் மண்ணை அள்ளி வாயில் போட, அவனைத் தடுக்க முடியாமல், செய்வதறியாமல் திகைத்தான் பலராமன்.

பிறகு, அம்மா அம்மா என்று கூவிக்கொண்டு யசோதையைத் தேடி ஓடினான். அவனோடு மற்ற சிறுவர்களும் ஓடினர்.

கண்ணனைத் தவிர அத்தனை குழந்தைகளும் ஓடிவருவதைக் கண்ட யசோதை பயந்துபோனாள். ஏதோ அசுரன் வந்துவிட்டானோ என்று எண்ணினாள்.

என்னாச்சு என்று பதறினாள்.

அம்மா அம்மா
கண்ணன் மண்ணைத் திங்கறான்.
கண்ணன் மண்ணைத் திங்கறான்.

என்ன?
என்னடா சொல்றீங்க?

கண்ணன் மண்ணை அள்ளி அள்ளித் திங்கறாம்மா. சொன்னா கேக்கமாட்டேங்கறான். மற்ற குழந்தைகளும் சேர்ந்து மாற்றி மாற்றி முறையிட்டனர்.

நீங்க வந்து பாருங்கம்மா..

பலராமன் யசோதையின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்தான்.

சின்னக் குழந்தையானாலும் இவ்வளவு பலமாக இழுக்கிறானே என்று தோன்றியது யசோதைக்கு. அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக ஓடி வந்தாள்.

அங்கே கண்ணன் சமத்தாக கன்றுக்குட்டியின் மேல் சாய்ந்துகொண்டு உட்கார்ந்திருந்தான்.

அவன்தான் சமத்தா இருக்கானே.
என்றதும், அம்மா அவன் மண்ணைத் தின்னான். நாங்க பாத்தோம் என்று பலராமன் உறுதியாய்க் கூறினான்.

யசோதைக்குக் கண்ணன் ஒய்யாரமாகச் சாய்ந்துகொண்டிருப்பதைப்‌ பார்த்துச் சிரிப்பு வந்தது. இருந்தாலும் அடக்கிக்கொண்டு அவனை அழைத்தாள்.

இங்க வா கண்ணா.

ஒன்றுமே அறியாதவன்போல் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு
என்னம்மா என்று கேட்டுக்கொண்டு அருகில் வந்தது குழந்தை.

மண் சாப்டியா?

இல்லம்மா..

நீதான் வெண்ணெய் குடுக்கறியே. நான் ஏன் மண்ணை சாப்பிடப்போறேன்.

பலராமனோ
அம்மா அம்மா அவன் மண்ணை சாட்டான்மா. வாயில் பாருங்க என்றான்.

அவனை முறைத்த கண்ணனின் முகத்தைப் பிடித்துத் திருப்பி, மீண்டும் கேட்டாள் யசோதை.

உண்மையைச் சொல்லு கண்ணா. மண்ணு சாப்டியா?

இல்லம்மா.

அண்ணா சொல்றானே.

அவன் பொய் சொல்றாம்மா..

இல்லை இல்லை என்று எல்லாக் குழந்தைகளும் கோரஸாகச் சொல்ல,

சரி நீ ஆ காட்டு..

ஊஹூம்..
உதட்டைப் பிதுக்கினான்.

வாயைத் திறடா..

கண்ணனின் குண்டு கன்னத்தைப் பிடித்து அழுத்த, அவன் செப்பு வாய் திறந்தது.

அங்கே யசோதைக்கு அவன் உண்ட மண் மட்டுமா தெரிந்தது? புவியிலுள்ள எல்லா மண்ணும் தெரிந்தது. இன்னும் நீர், நெருப்பு, ஆகாயம், வளி மண்டலம், நட்சத்திரங்கள், விண்வெளி, பூமண்டலம் முழுவதும் எனக் காட்சி விரிந்துகொண்டே போயிற்று. அப்புவி மண்டலத்துள் இருக்கும், மலைகள், சமுத்திரங்கள், நதிகள், பாரததேசம், கோகுலம், அங்கொரு கண்ணன், யசோதை, கோபிகள், மாடுகள், அந்த யசோதை கண்ணனின் வாயைப் பார்க்க, அதற்குள் மீண்டும் ஒரு பிரபஞ்சம், பூமி, கோகுலம், கண்ணன், யசோதை என்று காட்சிக்குள் காட்சியாகப் போய்க்கொண்டே இருந்தது.

இதென்ன கனவா? புத்தி கலக்கமா? இவன் தெய்வமோ? என்றெண்ணினாள். கண்ணைக் கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தாள். அதே காட்சி.

கிறு கிறுவென்று தலை சுற்ற ஆரம்பித்தது யசோதைக்கு.

டக்கென்று வாயை மூடிக்கொண்ட கண்ணன்,
தாயின் கன்னத்தைப் பிடித்து ஒரு அழகு முத்தம் வைக்க, அனைத்தும் மறந்தாள் அவள். அவளும் கண்ணனை முத்தமிட்டு இடுப்பில் தூக்கிக்கொண்டாள்.

எல்லாம் மறந்துபோனாலும், பனி படர்ந்த இமய மலை மட்டும் மறக்கவில்லை. அதென்னவாயிருக்கும் என்று யோசித்தவள், நேற்று உண்ட வெண்ணெய் ஜீரணம் ஆகவில்லை போலும் என்று எண்ணி கண்ணன் வயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, லேகியம் கொடுத்தாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment