Wednesday, December 11, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 368

கண்ணன் உரலில் கட்டுண்ட லீலையைக் கேட்டதும் பரிக்ஷித் நெகிழ்ந்துபோனான்.

ஸ்ரீ சுகர் கூறலானார்.
இவ்வுலகமே பகவானின் வசத்தில் உள்ளது. அப்படியிருக்க அவனோ யசோதையிடம் கட்டுண்டு, அந்த இடையர்களின் கைப்பொம்மையாக விளங்கினான்.

என்றதும், பரிக்ஷித் கேட்டான்.
மஹரிஷி! அந்த மரங்களிலிருந்து வெளிவந்தவர்கள் யார்? அவர்கள் என்ன துதி செய்தார்கள்? அவர்கள் ஏன் மரமாக நின்றார்கள்? ஏதேனும் சாபமா?
விளக்கமாகக் கூறுங்கள் என்றான்.

ஸ்ரீ சுகர் தொடர்ந்தார்.
அவர்கள் இருவரும் குபேரனின் புதல்வர்கள். நளகூபரன், மணிக்ரீவன் என்பது அவர்கள் பெயர். ஒரு சமயம் செல்வச் செருக்கால் நாரதரை அவமதித்து விட்டார்கள். அவரது சாபத்தால் மரங்களாகிப்போனார்கள்.

ஓ.. அதென்ன சாபம்? நாரதருக்குக் கூட கோபம் வருமா? அப்படி என்ன செய்தார்கள்?

ஸ்ரீ சுகர் கூறலானார்.
குபேரனின் மைந்தர்களான அவ்விருவரும் ஸ்ரீ ருத்ரனின் தொண்டர்கள். ஒரு சமயம் கைலாயத்தில் ஒரு தோட்டத்தில் வாருணீ எனப்படும் மதுவை அருந்தி மெய் மறந்தனர். கண்கள் சுழல, நாக்குழற, போதையால் நடை தடுமாற, அத் தோட்டத் தி லும், கங்கைக் கரையிலுமாக பெண்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

தாமரைக் குவியல்போல் பூத்திருந்த கங்கையில் ஆண்யானைகள் பிடிகளுடன் விளையாடுவதுபோல் நீர் விளையாட்டு ஆடினர்.

அப்போது தற்செயலாக அங்கு வந்த நாரதரைக் கண்டதும் அங்கிருந்த பெண்கள் ஓடிப்போய் ஆடைகளை அணிந்துகொண்டு மரியாதை நிமித்தமாக வணங்கினர்.

குபேரனின் புதல்வர்கள் இருவரும், முனிவரை வணங்காதது மட்டுமின்றி, அவரை அவமதிக்கவும் செய்தனர்.

அதைக் கண்ட நாரதர் அவர்கள் இருவரையும் மரங்களாகப் போகும்படி சபித்தார்.

அளவுக்கு மீறி விரும்புவதை அனுபவிப்பதால் புத்தி தடுமாற்றம் ஏற்படும். செல்வச் செழிப்பாலும், கல்வியாலும், உயர்குடிப் பிறப்பாலும் வருவதைக் காட்டிலும் அளவுக்கதிகமான மதம், பெண்கள் சேர்க்கை, சூதாட்டம், மது இவற்றால் ஏற்படுகிறது.

இவர்கள் மனத்தைக் கட்டுப்படுத்த இயலாமல், இவ்வுடலுக்கு அழிவில்லை என்றெண்ணுவர்.
இந்த உடல், புதைக்கப்பட்டு, விலங்குகளுக்கும், புழுக்களுக்கும் உணவாகப் போகிறது. அழியும் இவ்வுடல் சுகத்திற்காகப் பிற உயிர்க்குத் தீமை செய்பவனுக்கு நரகம் கிட்டும்.

இவ்வுடல், அன்னமிட்டு வளர்த்தவரையோ, உயிர் கொடுத்த தந்தையையோ, தாயையோ, குடும்பத்தாரையோ, அரசனையோ, எரிக்கும்‌நெருப்பையோ, தின்னும் நாயையோ‌ சார்ந்ததல்ல. பிரக்ருதியில் தோன்றி மறைகிறது. இதன் தோற்றமும் மறைவும் விளக்கப்படுபவை அல்ல. இதைத் தனதென்று எண்ணுபவன் முட்டாள்.

முள்ளால் குத்தப்பட்டால் வேதனை புரியும்‌. அவன் அவ்வேதனை மற்றவர்க்கு நேராவண்ணம் காப்பான். அதை அனுபவிக்காதவனுக்கு மற்றவரின் துன்பம் புரியாது.

சம்நோக்குள்ள சாதுக்களின் சங்கத்தால் பேதபுத்தி அழியும். பேராசை குறையும். மனம் தூய்மை பெறும். அதனால் அவனுக்கு நன்மை ஏற்படும்.

நீங்கள் இருவரும் உங்கள் செருக்கு அழியும்வரை உணர்வுகளற்ற மரமாக இருங்கள். உங்களுக்கு இந்த நினைவுகள் மறக்காது. நூறு தேவ வருடங்கள் கழிந்தபின் பகவான் வாசுதேவனின் அருள் கிட்டும். அவரால் பக்தி ஏற்பட்டு, உங்கள் உலகை அடைவீர் என்றார் நாரதர்.

பின்னர் கிளம்பி பதரி சென்றார். நளகூபரனும் மணிக்ரீவனும் கோகுலத்தில் இரட்டை மருதமரங்களாக ஆயினர்.

நாரதரின் கூற்றை மெய்ப்பிக்க விரும்பிய கண்ணன் அந்த மரங்களின் இடையே சென்று அவற்றை முறித்து அவர்களை சாபத்திலிருந்து விடுவித்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment