Tuesday, April 30, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 251

அதிதி தேவி தன் புதல்வர்களான தேவர்களின் கஷ்டம்‌ நீங்க வழி சொல்லுமாறு தன் கணவரான கச்யப ப்ரஜாபதியிடம் கேட்டாள்.

கச்யபர் கூறினார்.
அதிதி! முன்பு ப்ரும்மதேவரிடம் நான் இதைக் கேட்டபோது, அவர் எனக்கு கூறியதை அப்படியே கூறுகிறேன்.

பங்குனி மாதத்தின் வளர்பிறையில் முதல் பன்னிரண்டு நாள்கள் பால் மட்டும் உணவாக ஏற்று பக்தியுடன் பகவானைப் பூஜிக்க வேண்டும்.

இவ்வாறு துவங்கி, பகவானைப் பூஜை செய்யும் முறையை மிகவும் விளக்கமாக எடுத்துரைத்தார் கச்யபர். அனுஷ்டானங்கள், ஜபிக்க வேண்டிய மந்திரங்கள், செய்ய வேண்டிய கிரியைகள் அனைத்தையும் உபதேசம் செய்தார்.
செய்யவேண்டிய தானங்கள்‌ பற்றியும் கூறினார்.

தினமும் பாட்டு, நர்த்தனம், பகவானது துதிகள், வேத மந்திரங்கள், பகவானைப் பற்றிய கதைகள் ஆகியவற்றை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க வேண்டும்.

பகவானுக்கு பிடித்தமான பயோ விரதம் என்ற இவ்விரதத்தை ப்ரும்மா எனக்குக் கூறியபடியே உனக்குக் கூறினேன்.
இது பகவானை மகிழ்விப்பதாகும். இதனைக் குறைவற முறைப்படி செய்யவேண்டும்.

அப்படிச் செய்தால், பகவான் வெகு விரைவில் உன் விருப்பத்தை நிறைவேற்றுவார். என்றார்.

கணவர் கூறியபடி அதிதி தேவி மிகவும் கவனமாக பன்னிரண்டு நாள்கள் அந்த பயோ விரதத்தை மேற்கொண்டாள்.

புலன்களை அடக்கி, மனத்தை வாசுதேவனிடம் ஒன்றச் செய்து சிரத்தையுடன் விரதத்தைப் பூர்த்தி செய்தாள்.
அப்போது பகவான் பீதாம்பரம் உடுத்தி, சங்கு, சக்கரம், கதை, தாமரையுடன் அவள் முன் தோன்றினார்.

திடீரென்று பகவான் எதிரில் தோன்றவும், அதிதி தேவி, ஒரு தடியைப் போல் அவர் முன் விழுந்து வணங்கினாள்.

பின் எழுந்து கண்ணீருடன் நாத்தழுதழுக்க, பகவானைத் துதிக்க விழைந்தாள். உடல் மயிர்க்கூச்செறிந்து நடுங்கியது. பேச இயலாமல் நின்றாள்.
பகவானை விழுங்கிவிடுவாள்‌ போலப்‌ பார்த்துக்கொண்டிருந்தவள் சிறிது நேரம் கழித்து, அன்பு பொங்கி வர, மெதுவாகப் பேசலானாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment