Tuesday, April 16, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 244

அமுதம் தங்களுக்குக் கிடைக்காததால் கடுஞ்சினம் கொண்ட அசுரர்கள் போரிடலாயினர்.

அமுதம் உண்ட பலத்தாலும், பகானின் மேலுள்ள நம்பிக்கையாலும், தேவர்களும் சமருக்குத் தயாராகினர்.

திருப்பாற்கடலின் கரையில் அசுரர்களுக்கும்‌ தேவர்களுக்கும் இடையே பயங்கரமான போர் துவங்கியது. தேவாசுரப் போர் என்று பெயர் பெற்றது.

போர்முனையில், தேர்ப்படைகள் தேர்ப் படைகளோடும், காலாட்படைகள் காலாட்படைகளோடும் , குதிரை மற்றும் யானைப்படைகள் தகுந்தவற்றோடும் மோதின.

சிலர் ஒட்டகம், கோவேறு கழுதை, எருமை, மான், கரடி, புலி, சிங்கம், கழுகு, கோட்டான், கொக்கு, பிணந்தின்னிக் கழுகு, திமிங்கிலம், சரபம், காட்டெருமை, எருது, நரிகள், ஆடுகள் ஆகியவற்றின் மீதெல்லாம் ஏறிக்கொண்டு போரிட்டனர்.

பலவண்ணக்கொடிகள், ரத்தினங்கள் இழைத்த தேர்கள், தூய்மையான வெண்குடைகள், பறக்கும் உத்தரீயங்கள், தலைப்பாகைகள், ஒளி சிந்தும் கவசங்கள் ஆகியவற்றோடு விளங்கியது தேவர் படை.
பலி வைகாயஸம் என்னும் மிகச்சிறந்த விமானத்தின் மீதேறி போருக்கு வந்தான். அவ்விமானத்தின் தரம் சொல்லவொண்ணாதது. மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பல தானவர்கள் தத்தம் வாகனங்களில் பலியைச் சூழ்ந்து வந்தனர். இவ்வசுரர்கள் அனைவரும் பாற்கடலைக் கடைந்ததில் சிரமத்தை அடைந்தவர்கள். அமுதம் பெறாதவர்கள்.

அசுரர் தலைவன் பலி பல விதமான சாஹஸங்கள் செய்து கடும்போர் செய்தான். அசுரர்கள் மிகவும் பயங்கரமாகச் சண்டையிட்டபோதும், தேவர்கள் அதற்கு ஈடு கொடுத்தனர்.
தேவேந்திரன் கடைசியில் தன் வஜ்ராயுதத்தால் பலியின் மீது தாக்க, பலி தன் விமானத்தோடு கீழே விழுந்தான்.

பலியின் நண்பனான ஜம்பாஸுரன் ஓடிவந்து ஐராவதத்தைத் தாக்க, அது வலி தாங்காமல் விழுந்தது.
இந்திரனின் தேரோட்டி மாதலி தேர் கொண்டுவர இந்திரன் தேரிலேறிப் போரிட்டான். பின்னர் இந்திரன் ஜம்பாஸுரனை வஜ்ராயுதத்தால் கொன்றான்.

பாகன் என்னும் அசுரன் மழைபோல் அம்பைப் பொழிந்து மாதலியைத் துன்புறுத்தி தேரைச் சிதைத்தான்.
அசுரர்கள் சூழ்ந்துகொண்டு இந்திரனை மறைத்தனர்.இந்திரனைக் காணாமல் குழப்பமடைந்த தேவர் சேனையை சின்னாபின்னமாக்கினர் அசுரர்கள்.

சிறிது நேரம் கழித்து அசுர சேனையின் நடுவிலிருந்து ஆதவன் போல் ஒளியுடன் வெளிப்பட்டான் இந்திரன்.

தன் சேனை அழிக்கப்பட்டது கண்டு வஜ்ராயுதம் ஏந்தினான். பலன், பாகன் முதலிய அசுரர்களைக் கொன்றான்.
அதுகண்டு அசுரர் சேனை பயந்தது. நமுசி என்னும் அசுரன் பாய்ந்து வர, அவனையும் வஜ்ராயுதத்தால் அடித்தான் இந்திரன்.

ஆனால், அவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை. பல அசுரர்களை வென்ற வஜ்ராயுதம் நமுசியிடம் ஏன் வேலை செய்யவில்லை என்று யோசித்தனர் தேவர்களும் இந்திரனும்.

‌இவ்வாறு வருந்தி நிற்கையில்,
நமுசியை காய்ந்த பொருள்களாலோ, ஈரமான பொருள்களாலோ கொல்ல இயலாது
என்ற அசரீரி கேட்டது.

அத்தகைய பொருள் எது என்று ஆலோசித்து கடல் நுரை என்பதைக் கண்டுகொண்டான் இந்திரன்.
பின்னர் கடல் நுரையால் நமுசியை அடிக்க, அவன் மாண்டான்.

அசுரர்கள் அடியோடு அழிக்கப்படுவதும், போர் முடிவின்றி நடப்பதும் கண்டு கவலை கொண்ட ப்ரும்மதேவர் நாரதரை இந்திரனிடம் அனுப்பினார்.

நாரதர், போதும் சண்டையை நிறுத்துங்கள். இனி அசுரர் பக்கம் எதிர்க்க தலைவர் எவருமில்லை. அப்பாவியான அசுரர்களைக் கொல்லவேண்டாம் என்று கூறினார்.
அவரது சொல் கேட்டு போர் நிறுத்தப்பட்டது.

மிஞ்சியிருந்த அசுரர்கள், நாரதரின் அனுமதி பெற்று, அடிபட்டு விழுந்துகிடந்த தங்கள் அரசனான பலியைத் தூக்கிக்கொண்டு அஸ்தமன மலைக்குச் சென்றனர்.

அந்தப் போர்க்களத்தில் அவயவங்கள் சேதமாகாமல் இருந்தவர் களையும், கழுத்து அறுபடாமல் இருந்தவர் களையும், ம்ருத ஸஞ்சீவனி கொண்டு சுக்ராசார்யார் பிழைக்கச் செய்தார்.

குருவான சுக்ராசார்யாரின் கரம் பட்டதுமே, எழுந்து உட்கார்ந்தான் பலி. வாழ்வில் வெற்றி தோல்வி சகஜம் என்பதை நன்குணர்ந்தவன் பலி. எனவே, தோல்வியால் மனம் வருந்தவில்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment