Saturday, April 20, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 246 மன்வந்தரங்களின் வர்ணனை

ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறலானார்.
பரீக்ஷித்!
விஸ்வவான் எனப்படும் சூரியனின் புதல்வனான ச்ராத்ததேவன் ஏழாவது மனுவான வைவஸ்வதன் ஆவார். இப்போது நடப்பது வைவஸ்வத மன்வந்தரம்தான்.

வைவஸ்வத மனுவிற்கு பத்து பிள்ளைகள்.
இக்ஷ்வாகு, நபகன், திருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூஷன், பிருஷத்ரன், வஸுமான் ஆகியோர்.

ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்ரர்கள், விஸ்வேதேவர்கள், மருத்கணங்கள் அஸ்வினீ தேவர்கள், ருபுக்கள் ஆகியோர் பிரதான தேவர்கள். புரந்தரன் இந்த மன்வந்தரத்தின் இந்திரன் ஆவான்.

கச்யபர், அத்ரி, வஸிஷ்டர், விஸ்வாமித்ரர், கௌதமர், ஜமதக்னி, பரத்வாஜர் ஆகியோர் ஸப்த ரிஷிகள்.
இந்த மன்வந்தரத்தில் ஆதித்யர்களின் கடைசித் தம்பியாக கச்யபரின் மனைவி அதிதி வயிற்றில் வாமனனாக அவதரித்து மூவுலகையும் அளக்கும் த்ரிவிக்ரமனாக நிற்கிறார் பகவான் ஸ்ரீ ஹரி.

அரசனே! இதுவரை சென்ற ஏழு மன்வந்தரங்கள் பற்றிக் கூறினேன்.
இனி வரப்போகும் ஏழு மன்வந்தரங்களையும் கூறுகிறேன் கேள்.

விஸ்வகர்மாவின் புதல்விகளான ஸந்த்யாவும், சாயாவும் விஸ்வவானின் இரு மனைவிகள். வடவா என்பவள் மூன்றாவது மனைவி என்றும், ஸந்த்யாவே தான் வடவா என்றும் கருத்துக்கள் உண்டு.

யமன், யமி, ச்ராத்ததேவன் மூவரும் ஸந்த்யாவின் குழந்தைர்கள். சாயாவின் குழந்தைகள் ஸாவர்ணீ, தபதி, சனி பகவான் ஆகியோர். தபதி என்பவள் ஸம்வரணன் என்பவனின் மனைவியானாள். ஸந்த்யா தேவி வடவா என்னும் பெண் குதிரை உருவம் எடுத்தபோது அஸ்வினி குமாரர்களைப் பெற்றாள்.

எட்டாவது மன்வந்தரத்தில் சாயாவின் புதல்வரான ஸாவர்ணி என்பவர் மனுவாகப் போகிறார். நிர்மோகன், விரஜங்கன் ஆகியோர் அவரது புதல்வர்களாவர்.

அந்த மன்வந்தரத்தில் ஸுதபஸ், விரஜன், அம்ருதப்ரபன் ஆகியோர் தேவகணங்கள். இந்திரனாக விரோசனன் மகனான பலி வரப்போகிறார்.

இந்த பலிச் சக்ரவர்த்தியிடத்தில்தான் ஏழாவது மன்வந்தரத்தில் மூன்றடி மண் கேட்டு வாமன பகவான் வந்தார். பலி அவருக்கு மூவுலகங்களையும் தானமாக அளித்துவிட்டார். எட்டாவது மன்வந்தரத்தில் பகவானின் அருளால் பலி இந்திரப்பதவி பெற்று அவற்றை அனுபவித்து , பின்னர் அனைத்தையும் துறந்து மோக்ஷமடையப்போகிறான்.

பகவானால் ஆட்கொள்ளப்பட்ட பலி இப்போது தேவலோகத்தை விடவும் சிறந்த உலகத்தைப் பெற்று மகிழ்ச்சியோடு விளங்குகிறான்.

காலவர், தீப்திமான், பரசுராமர், அச்வத்தாமா, க்ருபாசார்யார், ரிஷ்யச்ருங்கர், வியாஸர் ஆகியோர் எட்டாவது மன்வந்தரத்தின் ஸப்தரிஷிகள் ஆகப்போகிறார்கள். இவர்கள் தற்போது தத்தம் ஆசிரமத்தில் யோகத்தில் உள்ளனர்.

ஸ்ரீமன் நாராயணன் தேவகுஹ்யனின் மனைவியான ஸரஸ்வதியின் வயிற்றில் ஸார்வபௌமன் என்னும் பெயருடன் அவதாரம் செய்யபோகிறார்.
புரந்தரன் என்னும் இந்திரனிடமிருந்து இந்திரபட்டத்தை அபகரித்து பலிக்குத் தரப்போகிறார்.

வருணனின் புதல்வனான தக்ஷஸாவர்ணி ஒன்பதாவது மனு ஆவார். பூதகேது, தீப்தகேது ஆகியோர் அவரது புதல்வர்கள்.

பாரா, மரீசிகர்பன் முதலியோர் தேவகணங்கள். அத்புதன் என்பவன் இந்திரன். த்யுதிமான் முதலானோர் ஸப்தரிஷிகளாகப் போகிறார்கள்.

ஆயுஷ்மானின் மனைவி அம்புதாரா. அவள் வயிற்றில் பகவான் ஒரு அம்சத்துடன் ரிஷபதேவர் என்ற பெயருடன் அவதரிக்கப்போகிறார். அவரால் அத்புதன் எனப்படும் இந்திரனுக்கு தேவலோகம் அளிக்கப்படும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment