Wednesday, April 24, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 247 மன்வந்தரங்களின் கதை

பத்தாவது மன்வந்தரத்தில் ப்ரும்மஸாவர்ணி என்பவர் மனு ஆவார். அவர் அனைத்து நற்குணங்களும் கொண்டவர். பூரிசேஷணன் முதலியோர் அவரது புதல்வர்கள். ஹவிஷ்மான் ஆகியோர் ஸப்தரிஷிகள். சம்பு இந்திரனாவான். விஸ்வருஜனின் பிள்ளை விஷ்வக்ஸேனராக பகவான் அவதரிப்பார்.

பதினோராவது மனு தர்மஸாவர்ணி. அவருக்கு ஸத்யம், தர்மம் முதலான பத்து பிள்ளைகள். விஹங்கமான், காமகமான் ஆகியோர் அவரது புதல்வர்கள். வைத்ருதன் என்பவன் இந்திரன். அருணன் முதலானோர் ஸப்தரிஷிகள்.

ஆர்யகன் என்பவரது மனைவி வைத்ருதையிடம் தர்மஸேது என்ற பெயருடன் ஒரு அம்சத்துடன் பகவான் திரு அவதாரம் செய்து மூவுலகங்களையும் காப்பாற்றுவார்.

ருத்ரஸாவர்ணி என்பவர் பன்னிரண்டாவது மனு. தேவவான், உபதேவன், தேவசிரேஷ்டன் ஆகியோர் அவரது மகன்கள். அந்த மன்வந்தரத்தில் ருததாமா என்பவர் இந்திரன். ஹரிதர் ஆகியோர் தேவ கணங்கள். தபோமூர்த்தி, தபஸ்வி, ஆக்னீதரன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.

ஸத்யஸஹன் மனைவியான ஸூந்ருதாவிடம் ஸ்வதாமா என்ற பெயருடன் பிறந்து பன்னிரண்டாவது மன்வந்தரத்தைக் காப்பார்.

பதிமூன்றாவது மனு தேவஸாவர்ணி. சித்ரஸேனன், விசித்ரன் ஆகியோர் அவரது புதல்வர்கள்.
ஸுகர்மன், ஸுத்ராமன் என்பவர்கள் தேவர்கள். திவஸ்பதி, அவர்களது இந்திரன். தத்வதர்சி ஆகியோர் ஸப்தரிஷிகள்.

தேவஹோத்ரனின் மனைவி ப்ருஹதீயின் புதல்வராக யோகேஸ்வரன் என்னும் திருநாமத்துடன் பகவான் அவதரிப்பார்.

இந்திர ஸாவர்ணி பதினான்காவது மனு. உருபுத்தி, கம்பீரபுத்தி, ஆகியோர் இந்திர ஸாவர்ணியின் புதல்வர்கள்.
பவிரன், ஸாக்ஷுஷன் ஆகியோர் தேவகணங்கள். சுசி என்பவர் இந்திரன். அக்னி, பாஹு, சுசி, தத்தன், மாகதன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.

பகவான் ப்ருஹத்பானு என்னும் பெயருடன் ஸத்ராணன், விதானா ஆகியோரின் மகனாக அவதரிப்பார். அப்போது வேதத்தில் கூறப்பட்டுள்ள கர்மகாண்டத்தை விளக்குவார்.

மன்னா, முக்காலங்களிலும் விளங்கும் பதினான்கு மன்வந்தரங்கள் பற்றிக் கூறினேன். இப்பதினான்கு மன்வந்தரங்கள் ப்ரும்மாவின் ஒரு பகலாகும்.
என்று கூறினார் ஸ்ரீ சுகர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment