Sunday, April 14, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 243 கடல்‌ கடைந்த கடல்வண்ணன் - 7

மோஹினியின் அழகில் மயங்கி அவள் எதைச் சொன்னாலும் தலையாட்டினர் அசுரர்கள்.

அதன் பின் அவர்கள் அனைவரும் மறுநாள் நீராடி உபவாசம் இருந்து பசுக்களுக்கும் பிராணிகளுக்கும் உணவும், அந்தணர்களுக்கு தானமும் அளித்து அவர்களிடம் மங்கல வாழ்த்து பெற்றனர். பின்னர் நன்கு அலங்கரித்துக் கொண்டு கிழக்கு நுனியாகப் போடப்பட்ட தர்பாஸங்களில் அமர்ந்தனர்.

அவ்விடத்தில் அவ்வாறே தேவர்களும் வந்து அமர, மோஹினி மயக்கத்தால் அசுரர்கள் அமுதம் கிடைத்தால் போதுமென்று வாளாவிருந்தனர்.

தங்கத் தேரொன்று அசைந்து வருவதுபோல் கையில் அமுத கலசத்துடன் அசைந்து அசைந்து மோஹினி வந்தாள்.

இயல்பிலேயே கொடூரத்தன்மை நிரம்பிய அசுரர்களுக்கு அமுதம்‌கொடுத்தால், விபரீதம் நிகழும் என்பதால் அவள் அசுரர்கள் பக்கம் சிரித்துக்கொண்டு தேவர்கள் பக்கம் அமுதத்தை பரிமாறினாள்.

மேலும் அவர்களிடம் அமுதின் தெளிந்த பகுதியைத்தான் தேவர்களுக்குக் கொடுக்கிறேன். அடியிலிருக்கும் விழுதான பகுதி உங்களுக்குத்தான் என்று கூறியவாறே தேவர்களுக்குப் பரிமாறினாள்.

மோஹினியிடம் கொண்ட மயக்கம், தங்கள் ஒப்பந்தம் ஆகியவற்றாலும், மேலும் அவளோடு வழக்காடுவதில் விருப்பமில்லாததாலும் அசுரர்கள் பேசாமலிருந்தனர்.

இவ்வாறு தேவர்களுக்குப் பரிமாறுகையில், ஸ்வர்பானு என்ற அசுரன் மட்டும் சுதாரித்துக்கொண்டான்.

அவன் தேவனைப்போல் உருமாறி தேவர்கள் பந்தியில் சூரிய சந்திரர்களுக்கிடையில் அமர்ந்து கொண்டான்.

மோஹினி வரிசையாகப் பரிமாறிக்கொண்டு வந்தபோது ஸ்வர்பானுவும் இடையில் கையை நீட்டி அமுதத்தை வாங்கி உண்டுவிட்டான்.

சூரிய சந்திரர்கள் அவன் அசுரன் என்று காட்டிக்கொடுக்க, மோஹினியான பகவான் தன் சக்கரப்படையால் அவன் தலையை வெட்டினார்.

அமுதம் பெற்றுவிட்டதால் மரணம் ஏற்படவில்லை.
எனவே அவனை ராகு கேது என்னும் கிரஹங்களாக்கினார்.

சூரிய சந்திரர்கள் காட்டிக்கொடுத்ததால் ராகு அவர்கள் மீது பகை கொண்டு அவர்களைப் பீடிக்கிறான். அதுவே கிரஹணம் எனப்படுகிறது.

பரீக்ஷித்! தேவர்களும் அசுரர்களும் ஒரே இடத்தில் ஒரே வஸ்துவைப் பெற முயற்சி செய்தனர். ஆனால், பலனை நுகர்வதில் எவ்வளவு வேறுபாடு பார்த்தாயா?

தேவ்ரகள் எவ்வளவு முயற்சி செய்தாலும், பகவான் ஒருவனையே நம்பினர். அசுரர்களோ, தங்கள் உடல் வலிமையை நம்பினர்.

எந்த ஒரு செயலுக்கும் பயனளிப்பது பகவான் என்று அவன் மீது நம்பிக்கை வைத்துச் செய்யப்படும் செயல் வெற்றியடைகிறது. அதாவது பகவதர்ப்பணமாகச் செய்யும் செயல் பலனளிக்கிறது.

நான் எனது என்ற அபிமானத்துடன் செய்யும் செயலுக்கான வெற்றி உறுதியில்லை. உடலின் மீதும், சுற்றத்தின் மீதும் பற்றுக்கொண்டு செய்யப்படும் எந்தச் செயலும் வெறும் சிரமங்களே.

மோஹினி வேடத்தைக் களைந்த பகவான் கருடன் மீதேறிச் சென்று மறைந்தார்.
தாங்கள் ஏமாற்றப்பட்டது கண்டு பெருஞ்சினம் கொண்டனர் அசுரர்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment