Monday, April 29, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 250

ஸ்ரீ சுகர் மேலும் கூறலானார்.
பரீக்ஷித்! தேவர்கள் சென்றதும், அசுரர்கள் ஸ்வர்கத்தைக் கைப்பற்றியபோது, தேவர்களின் தாயான அதிதி தேவி மிகவும் வருந்தினாள்.

வெகு காலமாக சமாதியிலிருந்த கச்யபர், ஒரு சமயம் சமாதி கலைந்து எழுந்து ஆசிரமத்தினுள் வந்தார். அப்போது ஆசிரமத்தில் மகிழ்ச்சி இல்லாததைக் கண்டார்.

அவரை வணங்கி உபசரித்த அதிதிதேவியின் முகம் வாடியிருப்பதைக் கண்டு அவளிடம் கேட்டார்.

தேவீ! ஏதேனும் கேடு நிகழ்ந்ததா? அறநெறிகளைத் தவறாமல் கடைப்பிடிக்கிறாயா? ஏதாவது நேரக்கூடாதது நிகழ்ந்துவிட்டதா?

இல்லறத்தில் ஏதேனும் செல்வக் குறைபாடா? யாரேனும் விருந்தாளிகளை உபசரிக்காமல் விட்டுவிட்டாயா?

எந்த வீட்டில் வந்த விருந்தாளிக்கு தண்ணீர் மட்டுமாவது தந்து உபசரிக்கவில்லையோ, அது வீடல்ல. நரிகள் வாழும் பொந்து.

நான் வெளிச் சென்றிருப்பதனால் வருந்தி மூன்று அக்னிகளுக்கும் ஹோமம் செய்யாமல் விட்டுவிட்டாயா? எப்போதும் மலர்ந்திருக்கும் உன் முகம் வாடியிருக்கிறதே. என்ன காரணம்?
என்றார்.

அதிதி கூறலானாள்.
இங்கு எனக்கு எக்குறையும் இல்லை. நான் எப்போதும் தங்களையே தியானம்‌ செய்வதால் மூன்று அக்னிகளுக்கும், விருந்தாளிகளுக்கும், பணியாளர்கள், மற்றும் துறவிகளுக்கும் வேண்டியவற்றைக் கொடுக்கிறேன்.

தங்களைப் போன்ற ப்ரஜாபதிகள் எனக்கு அறநெறிகளை போதித்திருப்பதால், என் மனவிருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன.

அசுரர்கள், தேவர்கள் அனைவரும் தங்கள் மக்கள். எனவே, நீங்கள் அனைவரிடமும் சமமான அன்பு கொண்டிருக்கிறீர்கள்.

நான் தங்களைத்தான் அண்டியிருக்கிறேன். என் மக்களான தேவர்களின் பகைவர்கள் அவர்களின் செல்வங்களையும் பதவிகளையும் பறித்துக்கொண்டார்கள். எங்களை ஸ்வர்கத்திலிருந்து துரத்திவிட்டார்கள். எனவே, நானும் என் மக்களும் துன்பக்கடலில் மூழ்கித் தவிக்கிறோம்.
தாங்கள்தான் என் மக்களைக் காக்க வேண்டும்.

கச்யபர் சிரித்தார்.
தேவீ! இவ்வுலகம் அன்புத்தளையால் பிணைக்கப்பட்டுள்ளது. ஐம்பூதங்களாலான இவ்வுடல் எங்கே? ஆன்மா எங்கே? யார் யாருக்குக் கணவன்? யாருக்கு யார் பிள்ளை? எல்லா உறவுமுறைகளுக்கும் அஞ்ஞானமே காரணம். அனைத்து ஜீவராசிகளின் இதயத்திலும் உறையும் பகவானை ஆராதனை செய். உன் துயர் நீங்கும். பகவானிடம் கொண்ட பக்தி எப்போதும் வீண்போகாது. இதுவே சிறந்த வழி. என்றார்.

அதிதி மீண்டும் கேட்டாள்.
லோகநாயகனான பகவான் என் விருப்பத்தை நிறைவேற்றித்தர நான் எவ்விதமாக உபாசனை செய்யவேண்டும்? நான் என் புதல்வர்களுடன் பெருந்துன்பத்தை அனுபவிக்கிறேன். எனவே எனக்கு வெகு விரைவில் பகவான் மனமகிழ்ந்து அருள்புரியும் வழிமுறையைக் கூறுங்கள்
என்றாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment