Wednesday, June 30, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 656

ஸ்ரீ மத் பாகவத ஸங்க்ரஹம் - 1

ஸ்ரீ ஸூதபௌராணிகர் இவ்வளவு நேரமாகத் தான் விவரமாக வர்ணித்த ஸ்ரீ மத் பாகவதத்தின் ஸாரத்தைக் கூறத் துவங்கினார்.
நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பிக்கேட்ட உயர்ந்ததான இந்த பாகவதக் கதையை என்னால் இயன்றவரை கூறினேன்.
இந்த ஸ்ரீ மத் பாகவதத்தில் யோகிகளால் போற்றப்படும், ஸகல கல்யாண குணங்களும் உடைய பகவானான ஸ்ரீ ஹரியின் பெருமைகள் பேசப்படுகின்றன.
இதில் ப்ரும்ம தத்வம் ரகசியமாக விவரிக்கப்படுகிறது. அதிலிருந்து இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம், இருப்பு, அழிவு மூன்றும் ஏற்படுகின்றன. இந்த தத்வத்தின் விளக்கங்களும், அவற்றின் பயனான ஞானமும், அதஅதை அடைவதற்கான வழிகளும் விரித்துக் கூறப்பட்டுள்ளன‌.
பக்தியோகம், அதைப் பின்பற்றும் வைராக்யம், துறவு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. முதல் ஸ்கந்தத்தில் பரீக்ஷித்தின் தோற்றம், வியாஸர், நாரதர் இவர்களுக்கிடையே ஆன உரையாடல் மூலம் நாரதரின் வரலாறு ஆகியவை கூறப்படுகின்றன.
முனி குமாரனின் சாபத்தால் பரீக்ஷித், கங்கைக் கரையில் வடக்கிருந்து உயிர்துறக்க முடிவு செய்து அமர்கிறான்‌ அப்போது சுகமுனி அங்கு வர, இருவருக்குமான உரையாடல் கூறப்பட்டது.
இரண்டாவது ஸ்கந்தத்தில் யோக மார்கம், அர்ச்சிராதி மார்கம், நாரதர் மற்றும் ப்ரும்மாவுக்கிடையே ஆன உரையாடல், அவதாரங்களின் கதைச் சுருக்கம், தத்வங்களின் வரிசை, விராட் புருஷன், ச்ருஷ்டி ஆகியவை கூறப்பட்டன.
மூன்றாவது ஸ்கந்தம் விதுரருக்கும் உத்தவருக்குமான உரையாடல், தொடர்ந்து விதுரருக்கும் மைத்ரேயருக்குமான உரையாடல். அதில் ப்ரளயத்தின் போது நிகழும் செயல்கள், பகவானின் யோக நிலை, இந்த ப்ரபஞ்ச ச்ருஷ்டி, மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், ஆகிய ஏழு தத்துவங்களால் நிகழும் காரியங்களும், படைப்பும், பிரும்மாண்டத்தின் தோற்றம், அதில் விராட் புருஷனின் நிலை, காலத்தின் பரிமாணங்கள், ப்ரும்மாவின் தோற்றம், இரண்யாக்ஷ வதம், தேவர், அசுரர், மாந்தர் ஆகியோரின் படைப்பு, பதினோரு ருத்ரர்களின் தோற்றம், அர்த்தநாரீ தத்துவம், ஸ்வாயம்புவ மனு, மற்றும் உலகின் முதல் பெண்ணான சதரூபையின் தோற்றம், கர்தம ப்ரஜாபதியின் சரித்ரம், அவரது மனைவி, குழந்தைகள், ஆகியோரின் வரலாறு, கபில பகவானின் தோற்றம், தேவஹூதிக்கும் கபிலருக்குமான உரையாடல் மூலம் சாங்க்ய தத்துவ விளக்கம் ஆகியவை வர்ணிக்கப்பட்டன.
நான்காவது ஸ்கந்தத்தில் மரீசி முதலான ஒன்பது ப்ரஜாபதிகளின் தோற்றம், தக்ஷனின் வேள்வியை வீரபத்ரர் அழித்தல், துருவ சரித்ரம், பிருது, பிராசீனபர்ஹிஸ் ஆகியோரின் சரித்ரங்கள், நாரதருக்கும் ப்ராசீனபர்ஹிஸுக்குமான உரையாடல், புரஞ்ஜனன் கதை ஆகியவை அடங்கும்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரசானுபவங்களில் இவையும் சிலவே.

No comments:

Post a Comment