Monday, June 28, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 655

ஐப்பசி மாதத்தின் சூரியன் துவஷ்டா. ரிஷி ஜமதக்னி, நாகம் கம்பளன், அப்ஸரஸ் திலோத்தமா, ராக்ஷஸன் ப்ருமமாபேதன், யக்ஷன் சதஜித், கந்தர்வன் திருதராஷ்டிரன்.

கார்த்திகை மாதத்தின் அதிபதிகள் விஷ்ணு என்னும் சூரியன், அச்வதரன் என்ற நாகம், ரம்பை என்ற அப்ஸரஸ், சூர்யவர்ச்சஸ் என்ற கந்தர்வன்,
ஸத்யஜித், என்ற யக்ஷன், விஸ்வாமித்ர ரிஷி, மகாபேதன் என்ற ராக்ஷஸன் ஆகியோர்.
மார்கழி மாதம் அம்சு என்ற சூரியன், கச்யப ரிஷி, தார்க்ஷ்யன் என்ற யக்ஷன், ருதசேனன் என்ற கந்தர்வன், ஊர்வசி என்ற அப்ஸரஸ், வித்யுச்சத்ரு என்ற ராக்ஷஸன், மகாசங்கன் என்ற நாகம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
தை மாதம் பகன் என்ற சூரியன், ஸ்பூர்ஜன் என்ற ராக்ஷஸன், அரிஷ்டநேமி என்ற கந்தர்வன், ஊர்ணன் என்ற யக்ஷன், ஆயு என்ற ரிஷி, கார்கோடகன் என்ற நாகம் பூர்வசித்தி என்ற அப்ஸரஸ் ஆகியோரால் நடத்தப்படுகிறது.
மாசி மாதத்தை நடத்துபவர்கள் பூஷா என்னும் சூரியன், தனஞ்ஜயன் என்ற நாகம், வாதன் என்னும் ராக்ஷஸன், ஸுஷேணன் என்ற கந்தர்வன், ஸுருசி என்ற யக்ஷன், க்ருதாசீ என்ற அப்ஸரஸ், கௌதம ரிஷி ஆகியோர்.
பங்குனி மாதத்தின் அதிகாரம் பெற்றவர்கள் பர்ஜன்யன் என்ற சூரியன், கிரது என்ற யக்ஷன், வர்ச்சஸ் என்ற ராக்ஷஸன், பரத்வாஜ ரிஷி, சேனஜித் என்ற அப்ஸரஸ், விச்வன் என்ற கந்தர்வன், ஐராவதன் என்ற நாகம் ஆகியோர்.
இவர்கள் அனைவரும் ஆதித்யனான பகவானின் அம்ச பூதங்கள். காலையிலும் மாலையிலும் இவர்களை நினைப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் அழியும்.
சூரியனைப் பற்றி ருக் யஜுர் சாமம் முதலிய மூன்று வேதங்களும் மஹான்களும் ரிஷிகளாலும் பலவாறு ஓதப்படுகின்றன. அப்ஸரஸ்கள் அவர்முன் நர்த்தனமாடுகின்றனர். சூரியனின் தேரை இழுத்துக் கட்டுபவர்கள் நாகர்கள், கந்தர்வர்கள் புகழ்ந்து பாடுகின்றனர். யக்ஷர்கள் அழகுபடுத்துகிறார்கள். அரக்கர்கள் பின்புறமிருந்து தள்ளுகின்றனர். வாலகியர்கள் என்ற அறுபதினாயிரம் ப்ரும்மரிஷிகள் அவரைத் துதித்துக் கொண்டு முன் செல்கின்றனர்‌.
முதலும் முடிவுமற்ற, பகம் எனப்படும் ஆறு குணங்களும் கொண்ட ஸ்ரீ மன் நாராயணன் ஒவ்வொரு கல்பத்திலும் தானே பலவிதமான உருவங்கள் எடுத்து மக்களைக் காக்கிறார்.
#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

No comments:

Post a Comment