Wednesday, June 23, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 653

விராட் ஸ்வரூப லட்சணங்கள்..

வைகுண்டமே பகவானின் வெண்கொற்றக்குடை. கைவல்யம் அவரது வாசஸ்தலம். மூன்று வேதங்களின் உருவமே கருடன்.
மாயையே அவரது சக்தி. வைகானஸ ஆகமத்தின் ஸ்வரூபமான விஷ்வக்ஸேனர் பகவானின் கைங்கர்யபரர்களின் தலைவர். பகவானின் இயல்பு குணங்களான அஷ்டமா சித்திகளும் உருவமெடுத்து வாயிற்காவலர்களாக நிற்கின்றன.
பகவான் வாசுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என நான்கு உருவங்கள் எடுத்து வியூக மூர்த்திகளாய் நிற்கிறார்.
விழிப்பு (ஜாக்ரத்) நிலையின் அபிமான தேவதையான விஸ்வன் என்பவராக இருந்து பகவான் மற்ற உணர்வுகளை ஏற்கிறார்.
கனவு (ஸ்வப்ன) நிலையின் அங்கமாகியா கனவு நிலையின் அபிமான தேவதையான தைஜசன் என்பவராக இருந்து மனத்திலேயே பல காட்சிகளைக் காண்கிறார்.
ஸுஷுப்தி எனப்படும் உறக்க நிலையின் அபிமான தேவதையான ப்ராக்ஞன் என்பவராகி மனத்தின் வாசனைகளுக்கேற்ப ‌அஞ்ஞானத்தினால் மறைக்கப்படுகிறார். துரீய நிலையின் தேவதையான துரீயன் என்ற பெயரில் ஞானத்திற்கு ஆதாரமாக விளங்குவதும் அவரே.
எல்லா நிலைகளிலும் இருந்துகொண்டு இயக்கும் பகவானுக்கு தான் ஜீவன் என்ற எண்ணமில்லை.
பகவான் தன்னொளி பொருந்தியவர். எங்கும் நிறைபவர். மாயையை ஏற்று ப்ரும்மா என்ற பெயருடன் படைத்தலையும், விஷ்ணு என்ற பெயரில் காத்தலையும், ருத்ரன் என்ற பெயரில் அழித்தலையும்‌ செய்கிறார்.
பெயர்கள் பலவாயினும் அவர் ஒருவரே. அனுபூதிமான்கள் அவரை ஆன்மா என்கிறார்கள்.
கூறிக்கொண்டே போன ஸூதர் தன்னிலை மறந்து உரத்த குரலில் ப்ரார்த்தனை செய்தார்.
ஹே க்ருஷ்ணா! அர்ஜுனனின் ஆத்ம நண்பனே! யாதவகுலத்தில் பிறந்து பூவுலகின் பாரத்தை நீக்கியவனே! வீரத்திருமகனே! பசுக்களின் காவலனே! இடையர்களுக்கும் கோபியர்களுக்கும் நாரதர் முதலானோர்க்கும் அன்பை வாரி வழங்கியவனே! உங்கள் திருநாமம், புகழ், குணங்கள் ஆகியவற்றைக் கேட்பதாலேயே நன்மையை அருள்பவனே! எங்களைக் காத்தருள்வீராக!
என்று மேனி சிலிர்த்து கண்ணீர் மல்கக் கதறினார்.
அதிகாலையில் எழுந்து தூய்மையுடன் புருஷோத்தமனான பகவானின் அங்கங்கள், உப அங்கங்கள், ஆயுதங்கள், ஆகியவற்றை மனம் ஒன்றி தியானிப்பவர் க்கு இதய கமலத்தில் வீற்றிருக்கும் ப்ரும்மஸ்வரூபமான பகவான் தெரிகிறான். ஞானம் கைகூடுகிறது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

No comments:

Post a Comment