Thursday, June 17, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 651

தானாகவே தம்முன் எழுந்தருளிய பரமேஸ்வரனைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து வணங்கினார் மார்க்கண்டேயர். அவருக்கு முறைப்படி இருக்கை அளித்து அனைத்து உபசாரங்களையும் செய்தார்.


உலகனைத்தையும் இயக்கும் மங்கள ரூபரான தங்களை வணங்குகிறேன். என்று துதித்தார்.

அவரது தெள்ளிய மனம் கண்டு மகிழ்ந்த பரமேஸ்வரன் அவரைப் பார்த்துக் கூறலானார்.

தேவர்களுக்குத் தலைவர்களாகிய ப்ரும்மா, விஷ்ணு, சிவனாகிய நான் ஆகிய நாங்கள் அளிக்கும் வரங்கள் ஸத்யமாகும். அவை ஒருக்காலும் வீணாவதில்லை. தங்களைக் கண்டு மிகவும் மகிழ்ந்திருக்கிறேன்.

தாங்கள் விரும்பும் வரத்தைக் கேளுங்கள். இயல்பிலேயே பரோபகாரியும், ஒழுக்கமுடையவர்களாகவும், அமைதியாகவும், பொறாமையின்றியும், பற்றற்றும், அனைத்து ஜீவன்களிடமும் கருணையும், சம நோக்கும், எங்களிடம் பக்தியும் உடையவர்களை எல்லா உலகத்தாரும் பூஜை செய்கின்றனர்.
நானும், ப்ரும்மாவும், விஷ்ணுவும், மற்ற சான்றோரும் இத்தகையோர்களை வணங்குகிறோம். இந்த ஸாதுக்கள் எங்கள்‌ மூவரிடமும் வித்யாசம் காண்பதில்லை. மற்ற ஜீவன்களுக்கும் தமக்கும் கூட வேறுபாட்டை உணர்வதில்லை.
எல்லா நீரும் புனித நீராகாது. எல்லா தெய்வச்சிலைகளும் தெய்வங்கள் அல்ல. அனைத்தையும் பாகுபாடின்றி உய்விப்பது தங்களைப் போன்ற ஸாதுக்களே. ஒரு தெய்வ உபாசனையோ, நதி நீராட்டமோ பல காலம் சிரத்தையாகச் செய்தால்தான் பலன் தரும். ஆனால் ஸாதுக்களின் தர்சனமோ கண்டவுடனேயே ஜீவனைப் பவித்ரமாக்கிவிடுகிறது.
மன ஒருமைப்பாடு, தவம், வேதம், அறநெறி, ஆகியவற்றின் மூலம் சாதுக்கள் இறைவனைத் தமக்குள் நிலை நிறுத்தி நடமாடும் ஆலயங்களாக விளங்குகிறார்கள்.
ஸாதுக்களான உங்களோடு உரையாடுவது, ஏதேனும் சிறிய தொடர்பு ஆகியவற்றின் மூலமே பஞ்சமாபாதகர்கள் கூட மனத்தூய்மை பெற்றுவிடுகிறார்கள்.
என்றார் பரமேஸ்வரன்.
சந்த்ரமௌலீஸ்வரரின் இத்தகைய சொற்கள் மார்க்கண்டேயருக்கு அமுதம்‌ பருகினாற்போல் புத்துணர்வு கொடுத்தன.
ஸகல லோகங்களுக்கும் தலைவரான தாங்கள் என்னைப் போன்ற எளியோரைப் போற்றுவது தங்கள் நீர்மையையும் எளிமையையும் காட்டுகிறது.
அனைத்தும் அறிந்தவராயினும் ஜீவன்களுக்குப் புரிவதற்காக அறநெறிகளை உபதேசம் செய்வதோடு அவற்றை நடந்தும் காட்டுகின்றனர் சான்றோர்.
செப்படி வித்தைக்காரன் மக்களைப் பல மாய வித்தைகளைக் காட்டி மயக்கினாலும் அவனிடம் மயக்கம் இல்லை. அதுபோல பகவான் உலகை நன்னெறியில் செலுத்த லீலையாகப் பல காரியங்களைச் செய்கிறார்.
கனவில் காணும் காட்சியை உறக்கம் கலையும் வரை உணமையென்று எண்ணுவதுபோல ஜீவன்கள் மாயையின் திரை விலகும் வரை அதை ஸத்யமென்ற்ஸத்யமென்ற் எண்ணுகிறார்கள்.
தங்கள் தரிசனத்தாலேயே நான் பூரணனாகிவிட்டேன். இதற்கு மேலாக வேண்டுவதற்கு எனக்கு என்ன இருக்கிறது? தாங்கள் ஏதேனும் அருள விரும்பினால், பகவானின் சரணாரவிந்தங்களிலும், அடியார்களிடத்தும், தங்களிடத்தும் எனக்கு நிலையான பக்தி ஏற்படும்படி அருளுங்கள் என்றார்.
இதைக் கேட்டு பார்வதி தேவி மிகவும் மகிழ்ந்தார். பரமேஸ்வரன் குளிர்ந்து போனார்.
உமக்கு நிலையான பக்தி சித்திக்கட்டும். உலகங்கள் இருக்கும்வரை தங்கள் பெயரும் புகழும் நிலைக்கும். மரணம் ஏற்படாது. என்றும் இளமையோடும், ஆரோக்யத்தோடும் இருப்பீராக. தங்களின் ப்ரும்மதேஜஸ் வளரட்டும். மு க் கால ங் களையும் உணரும் ஞானம், ஆன்ம விஞ்ஞானம், வைராக்யம் ஆகியவை நிலைக்கட்டும். புராணங்களை எடுத்துக் கூறி பலருக்கும் குருவாக நல்வழி காட்டுவீராக என்று அருளினார்.
பின்னர், பரமேஸ்வரன் பார்வதியிடம் மாயையின் சக்தியையும் மார்க்கண்டேயரின் மஹிமைகளையும் பேசிக்கொண்டே அங்கிருந்து சென்றார்.
அதுமுதற்கொண்டு மார்க்கண்டேயர் பக்தி வெள்ளத்தைப் பெருக்கிக்கொண்டு உலகெங்கும் சுற்றித் திரிந்து வருகிறார்.
இந்தக் கதையை மனம் ஒன்றிக் கேட்பவர் சொல்பவர், சொல்லத் தூண்டுபவர் ஆகிய மூவரும் பிறவிப் பயனை எய்துவர். அவர்களின் பிறவிச் சுழல் முற்றிலுமாக அறுபடும் என்றார் ஸூத பௌராணிகர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

No comments:

Post a Comment