Saturday, July 3, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 657

ஸ்ரீமத் பாகவத ஸங்க்ரஹம் - 2
ஐந்தாவது ஸ்கந்தம் ப்ரியவுரதன் சரித்ரம், நாபி, ரிஷபதேவர், பரதர் ஆகியோரின் புண்ணியக் கதைகளைப் பேசுகிறது. மேலும் புவன கோச வர்ணனம் அதாவது ககனமுட்டைக்குள் விளங்கும் தீவுகள், வர்ஷங்கள், கடல்கள், குலபர்வதங்கள் (ப்ரபஞ்ச எல்லைகளாக நிற்கும் மாபெரும் மலைகள்) மகாநதிகள் அவற்றின் அளவு, காலம், தொலைவு, அந்தந்த இடத்தின் மக்கள், அங்கு வழிபடப்படும் பகவானின் அம்சம், மற்றும் பாதாளம், ஸ்வர்கம், நரகம் முதலிய லோகங்களின் விவரங்களும் ஐந்தாம் ஸ்கந்தத்தில் அடங்கும்.
ஆறாவது ஸ்கந்தம் ஸ்ரீ மத் பாகவத ரத்ன மாலையின் பதக்கம் போன்றது‌. இதில் தக்ஷனின் பிறப்பு, அவனது மகள்களின் வம்சங்கள், விருத்திராசுரன் கதை, அவன் முக்தியடைந்த விதம், அஜாமிளனின் கதை ஆகியவை இந்த ஸ்கந்ததில் விளக்கப்படுகின்றன.
ஏழாம் ஸ்கந்தம் முழுவதும் பக்த ஸாம்ராஜ்ய சக்ரவர்த்தியான பிரஹலாதனுக்காக ஒதுக்கப்பட்டது. ஹிரண்யகசிபுவின் விரிவான கதை, ப்ரஹலாதனின் குணநலன்கள், வாழ்க்கை, நரஸிம்மாவதாரம் ஆகியவற்றைச் சுவைக்கலாம்.
எட்டாவது ஸ்கந்தம் கஜேந்திர ஆழ்வாரின் சரித்திலிருந்து துவங்குகிறது.
மன்வந்தரங்களின் கதை, ஒவ்வொரு மன்வந்தரத்திலும் பகவான் எடுத்த அவதாரங்கள், ஹயக்ரீவர், கூர்மாவதாரம், தன்வந்த்ரி, மத்ஸ்யாவதாரம், வாமனாவதாரம், பாற்கடல் கடைதல், தேவாசுர யுத்தம், ஆகியவை எட்டாவது ஸ்கந்தத்தில் கூறப்படுகின்றன.
ஒன்பதாவது ஸ்கந்தத்தில் முக்கியமாக விளக்கப்படுபவை ரகு வம்சத்து அரசர்களின் கதைகள் ஆகும். இக்ஷ்வாகு, அவனது வம்சம், இளை, தாரை, சூரிய வம்சக் கதைகள், சுகன்யாவின் கதை, சர்யாதி, ககுத்ஸ்தன், நிருகன், சசாதன், கட்வாங்கர், மாந்தாதா, சௌபரி, சகரன், ஸ்ரீ ராமாவதாரம், நிமி, ஜனக குலம் ஆகியவை விளக்கப்படுகின்றன.

#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே. 

No comments:

Post a Comment