Monday, June 14, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 649

பிரளய நீரில் பல்லாண்டுகாலம் அலைக்கழிக்கப்பட்ட மார்க்கண்டேய மஹரிஷி ஒரு நாள் ஒரு திடலின் மீது செழித்த ஆலமரம் ஒன்றைக் கண்டார்.


வ்வாலமரத்தின் கிளை நுனியில் ஒரு சிறிய இலையின் மீது ஒரு சின்னஞ்சிறு குழந்தை படுத்திருந்தது.


அக்குழந்தையின் மேலிருந்து பெருகிய ஒளியில் இவ்வளவு நேரம் அவரைச் சூழ்ந்திருந்த இருட்டு காணாமல் போயிற்று.

கார்மேக வண்ணம், தாமரைபோலத் திருமுகம், வலம்புரிச் சங்கு போன்ற கழுத்து, அகன்ற மார்பு, அழகிய நாசி, வில்லைப் போல் வளைந்த புருவங்கள், முன்னெற்றியிலும் கன்னத்திலும் தவழும் சுருண்ட குழல், மாதுளம்பூ போல சிவந்த செவிகள், மனம் மயக்கும் புன்னகை, முத்துப்பல் வரிசை, அரசிலை போன்ற திருவயிறு, அதில்‌ மூன்று மடிப்புகள், ஆழமான தொப்புள், இளந்தளிர் போன்ற திருவிரல்கள், இரண்டு கரங்களாலும் ஒரு காலைத் தூக்கி கட்டைவிரலை வாயில் வைத்து சப்பிக்கொண்டிருந்தது.

அக்குழந்தையைப் பார்த்ததும் இத்தனை ஆண்டுகாலமாக அவர் பட்ட துயரெல்லாம் மறந்துபோயிற்று. களைப்பனைத்தும் நீங்கிவிட்டது‌.

பளீரென்று ஒரு மகிழ்ச்சிப் பேரலை இதயம் முழுவதும் வீசி வியாபித்தது. கண்கள் மலர, மேனி சிலிர்த்தது.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே இக்குழந்தை யார் என்று மனம் கேள்வியெழுப்பியது.

அதனிடம் பேச எண்ணி அருகில் சென்றார்.
ஒரே கணத்தில் சுதாரிப்பதற்குள் அதன் சுவாசக் காற்றால் இழுக்கப்பட்டு குழந்தையின் திருவயிற்றினுள் சென்று விட்டார்.

அங்கே பிரளயத்திற்கு முன் தான் கண்ட காட்சி போலவே அனைத்து உலகங்களையும், படைப்புகளையும் கண்டார்.

பூமி, சுவர்கம், ஆகாயம், நக்ஷத்ர மண்டலம், மலைகள், கடல்கள், தீவுகள், எட்டு திசைகள்,‌ தேவர்கள், அசுரர்கள், காடுகள், நாடுகள், நகரங்கள், வயல்கள், உழவர்கள், இடைச்சேரிகள், முனிவர்கள், ஆசிரமங்கள், பஞ்ச பூதங்கள், யுகங்கள், கல்பங்களைக் காட்டும் காலம் அனைத்தையும் கண்டார். இடம், பொருள், காலம் ஆகிய அனைத்தும் உண்மையாகவே இருப்பதுபோல் கண்டார்.

புஷ்பபத்ரா நதி, அதன் கரையில் தன் ஆசிரமம், மற்ற முனிவர்களின் ஆசிரமங்களாகிய அனைத்தையும் கண்டார்.

ஒன்றும் புரியாமல் வியப்பின் உச்சிக்கே போனார்.

பார்க்கும்போதே அடுத்த சுவாசத்தால் இழுத்து வெளியே தள்ளப்பட்டு பிரளயக் கடலில் மீண்டும் விழுந்தார்.

மீண்டும் கண்ணெதிரே திடல். அதில் ஆலமரம். ஆலமரக்கிளையில் குழந்தையின் காட்சி. இப்போதும் அதே புன்முறுவலுடன் குழந்தை அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அதுவே பரம்பொருள் என்று உணர்ந்தார். பேரன்பு மேலிட
எப்படியாவது அதன் அருகில் சென்று பேசவேண்டும். அதை மார்புறத் தழுவ வேண்டும் என்றெண்ணினார்.

மிகுந்த சிரமப்பட்டு கடலில் இருந்து எழுந்து மணல் திட்டில் கரை ஏறி குழந்தையின் அருகில் சென்றார்.
அனைத்து ஜீவராசிகளின் அந்தர்யாமியான அந்தக் குழந்தை அவர் பார்க்கும்போதே மறைந்துபோயிற்று.

மார்க்கண்டேயர் கண்ட அத்தனையும் மறைந்தது. ஆலமரமும் இல்லை. ப்ரளயக் கடலும் இல்லை. முன்போல் தன் ஆசிரமத்தில் தான் அமர்ந்திருக்கக் கண்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

No comments:

Post a Comment