Thursday, January 30, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 390

அகில கலாதி குரு: நநர்த்த |
என்கிறார் ஸ்ரீ சுகர்.

எல்லாக் கலைகளுக்கும் குருவான கண்ணன் நர்த்தனமாடினான் என்பதாக. 

ஏன் அப்படிச் சொன்னார்? ஆறே வயரதான கண்ணன் எங்கே சென்று நாட்டியம்‌ கற்றுக்கொண்டான்? யாரிடம் குழலிசைக்கக் கற்றுக்கொண்டான். கண்ணனுக்கு எதையும் யாரிடமும் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அவனே அனைத்துக் கலைகளுக்கும் குரு.

க்ருஷ்ணம் வந்தே 
ஜகத் குரும்

காளியன் ஆங்காரத்தோடு தன் நூறு தலைகளையும் ஒவ்வொன்றாய்த் தூக்கி தூக்கிக் கண்ணனைத் தீண்ட முற்பட்டான். கண்ணனுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று. தூக்கிய தலைகளை எல்லாம் தன் தாமரைப்‌பாதத்தால் மிதித்துத் துவைத்தான். காளியனின் தலையில் இருந்த நாகரத்தினங்களின் ஒளியால் கண்ணனின் சிவந்த பாதங்கள் மேலும் செம்மையாகத் தனி விளக்கு பொருத்தியது போலவும், கிழக்கே எழும் அருணனைப் போலவும் ஒளிர்ந்தன.

தலையில் இருந்த படங்கள் கிழிந்து புண்ணாயின. மடு முழுவதும் காளியன் கக்கிய விஷத் துளிகளும், ரத்தத்துளிகளுமாகச் சிதறி, நீலமும் சிவப்புமாகப் புஷ்பங்களை வாரி இறைத்தாற்போல் காட்சியளித்தது. 

மேலிருந்து தேவர்கள் கண்ணனின் நடனத்திற்கேற்ப வாத்யங்களை முழங்கினர். கந்தர்வர்கள் அதற்கு ஜதியும் கொன்னக்கோலும் சொல்லத் துவங்கினர். தேவமங்கையர் பூமாரி பொழிந்தனர்.

கண்ணனுக்கு ஆபத்தில்லை என்றுணர்ந்த கோப கோபியர்கள் ஆச்சரியத்துடன் இக்காட்சியைத் தொலைவிலிருந்து  கண்டு ஆனந்தம் கொண்டனர்.

ஒவ்வொரு தலையிலிருந்தும் குருதி வடிய காளியன் மூர்ச்சை அடைந்தான்.

சற்று மூர்ச்சை தெளிந்தால் கோபத்துடன் ஒரு படத்தைத் தூக்கினான். கண்ணன் அதை உடனே மிதித்துத் த்வம்சம் செய்தான்.

காளியனின் உயிர் ஆபத்திலிருப்பதைக் கண்ட அவனது மனைவிகள் ஓடிச்சென்று தங்களது குழந்தைகளைக் கொண்டுவந்து கண்ணனின் திருவடி முன்னால் போட்டு தாங்களும் விழுந்து சரணாகதி செய்தனர்.

இறைவா! தாங்கள் தீயோரை அடக்கவே பிறவி எடுத்திருக்கிறீர்கள். பிழை செய்த இவருக்கு இந்த தண்டனை ஏற்றதே. தாங்கள் தமது அனைத்துக் குழந்தைகளிடமும் சமநோக்குடையவர். புருஷார்த்தங்களை அடையத் தடையாக இருக்கும் பாவ வினைகளை ஒழிக்கவே தண்டனை தருகிறீர்கள். இந்த பாம்புப் பிறவி எங்கள் பாவத்தால் வந்தது. உங்களது கோபமும் தண்டனையும் எங்கள் பாவத்தை நீக்கி அருள் செய்யவே ஆகும்.

இவர் முற்பிறவுகளில் என்ன தவம் செய்தாரோ. என்ன தர்மங்கள்‌ செய்தாரோ. அன்னை மஹாலக்ஷ்மி விரும்பும் தங்கள் திருவடி இவருக்குக் கிடைத்துவிட்டதே. 

தங்கள் திருவடிக் கமலங்களை அடைந்தவர்கள் உலகனைத்திற்கும் ஒரே அரசனாகும் நிலை கிடைத்தாலும் விரும்புவதில்லையே. தமோ குணத்தால் ஆட்பட்ட பாம்பு அரசருக்குத் தங்கள் கருணையால் திருவடி கிடைத்துவிட்டது.

நமஸ்துப்யம் பகவதே புருஷாய மஹாத்மநே|
பூதாவாஸாய பூதாய பராய பரமாத்மநே||

எண்ண எண்ணக் குறையாத செல்வமே! எல்லோர் மனத்திலும் விளங்குபவரே! உங்களுக்கு நமஸ்காரம். எல்லா உயிர்களின் இருப்பிடமும், பரமாத்மாவுமான தங்களை வணங்குகிறோம்.

மேலும் பலவாறு மிக அழகான ஸ்லோகங்களால் துதித்தனர் காளியனின் மனைவிகள்.

பின்னர், தாங்கள் இரக்கத்திற்குரிய எங்களுக்கு எங்கள் கணவர்தான் உயிர். அவரை எங்களுக்குத் தந்தருளுங்கள். நாங்கள் தங்கள் ஏவலுக்கு அடிபணிகிறவர்கள். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கட்டளையிடுங்கள். தங்கள் கட்டளையை சிரமேற்கொண்டு முழுமனத்தோடு செய்பவனுக்கு எந்தத் துன்பமும் இல்லை.

இவ்வாறு அவர்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டதும், காளியன் மீதிருந்த திருவடியைக் கண்ணன் எடுத்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment