Thursday, January 9, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 381

தாமரை மலரின் நடுவிலிருக்கும் மணியைச் சுற்றி இதழ்கள் அமைந்திருப்பதுபோலிருந்தது, கண்ணனைச் சுற்றி இடைச் சிறுவர்கள் அமர்ந்திருந்த காட்சி.

விளையாட்டுப் பேச்சுகள் பேசியபடியே உணவு உள்ளே போய்க்கொண்டிருந்தது.

கையில் தயிர்சாத உருண்டையை வைத்துக்கொண்டு, விரல்களின் இடுக்குகளில் விதம் விதமான ஊறுகாய்களை வைத்துக்கொண்டு நக்கி நக்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தான் கண்ணன். 

சிறுவர்கள் கண்ணனுடன் சேர்ந்து உணவு ஏற்பதில் தங்களை மறந்த நிலையிலிருந்தனர். 

மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த கன்றுகளை கவனிக்கவில்லை. திடீரென்று திரும்பிப்பார்த்த ஒரு சிறுவன், கன்றுகளைக் காணாமல் அலறினான்.

கண்ணா! கன்னுக்குட்டியெல்லாம் காணலியே. ரொம்ப தூரம் போயிடுச்சா.

எல்லாரும் திரும்பிப் பார்த்தனர். ஆயிரக் கணக்கான கன்றுகளில் ஒன்றைக்கூட காணவில்லை.

அனைவரும் பதறிப்போனார்கள்.

கண்ணன் உடனே அவர்களைப் பார்த்து, நீங்கல்லாம் நிம்மதியா சாப்பிடுங்க. நான் போய் கன்னுக்குட்டியெல்லாம் பாத்து ஓட்டிண்டு வரேன். என்று சொல்லிவிட்டு எழுந்தான். கையில் தயிர்சாதம், ஊறுகாய்கள், இடுப்பில் கொம்பு, குழல் முதலியவை, ஏற்றிக் கட்டிய கச்சம், தலையில் ஒரு முண்டாசு, கழுத்தில் வனமாலை ஆட, இன்னொரு கையில் கோலைப் பிடித்துக்கொண்டு கிளம்பினான் கண்ணன்.

மலைக் குகைகளிலும், புதர்களிலும், பள்ளத் தாக்குகளிலும் கன்றுகளைத் தேடினான்.

கன்றுகள் அனைத்தையும் யோகமாயையால் ஸத்யலோகத்திற்கு தூக்கிச்சென்று  ஒளித்துவைத்துவிட்டு, கண்ணன் என்ன செய்கிறான் என்று மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார் ப்ரும்மா. 

கண்ணன் கன்றுகளைத் தேடி வெகுதூரம் சென்றதும், ஆற்றின் நடுவிலிருந்த மணல்திட்டிற்கு வந்து அங்கிருந்த சிறுவர்களையும் மாயையால் மயக்கித் தூக்கிக்கொண்டுபோய் ஸத்யலோகத்தில் வைத்தார்.

மீண்டும் கீழே இறங்கி வந்தார்.

அதற்குள்  கண்ணன் திரும்பி வந்து சிறுவர்களையும் காணாமல் சற்று யோசித்தான். அனைத்தும் ப்ரும்மாவின் வேலை என்று அறிந்தான்.

திரும்பி வந்த ப்ரும்மா திகைத்துப் போனார்.

அங்கே அவர் கண்ட காட்சி...

முன்போலவே அத்தனை சிறுவர்களும் கண்ணனுடன் இருந்தனர். கன்றுகளும் மேய்ந்துகொண்டிருந்தன.

நான்கு தலைகளும் கிறுகிறுவென்று சுற்ற, நாம் தூக்கிக்கொண்டுபோனோமே. அதற்குள் எப்படி இங்கே வந்தார்கள் என்று குழம்பினார். மறுபடி ஸத்யலோகம் சென்று சிறுவர்களும் கன்றுகளும் இருக்கின்றனரா என்று பார்த்தார்.

அங்கே ஸரஸ்வதி தேவியைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தனர் அச்சிறுவர்கள்.

ஒருவன் வீணைக் கம்பியை அறுத்துவிட்டான். தாமரைப் பூவில் ஏறி குட்டிக்கரணம் போட்டனர். தேவியின் ஓலைகளை எடுத்துக் கிழித்துப் போட்டனர்.

கன்றுகள் ஆங்காங்கே கோமியமும், சாணி போட்டுவைக்க, ஸத்யலோக வாசிகளுக்குப் போதும் போதுமென்றிருந்தது.

ஸத்யலோகம் அல்லோலகல்லோலப் பட்டது. ப்ரும்மாவின் மீது பயங்கர கோபத்துடன் அவர் வரவை எதிர்பார்த்திருந்தாள் தேவி.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment