Thursday, January 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 379

கானகத்தில் கண்ணனுடன் இடைச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கே சற்று தொலைவில் அவர்களது வழியில்  கண்ணனைக் கொல்வதற்காக அகாசுரன் மலைப்பாம்பு வடிவம் எடுத்துப் படுத்துக் கிடந்தான்.

கீழுதடு பூமியைத் தொட, மேலுதடு மேகத்தைத் தொட, குகை போன்ற வாயுடன், மலைமுகடு போன்ற தெற்றிப் பற்களுடன், பெரிய பாதையைப் போன்ற நாக்குடன் வாயைப் பிளந்துகொண்டு படுத்திருந்தான்‌. விஷத்தினால் அவனது மூச்சுக் காற்று வறண்டுபோயிருந்தது.

 கண்ணன் ஒரு மரக்கிளையில் சென்று அமர்ந்தான். மற்ற சிறுவர்கள் அகாசுரன் இருக்குமிடம் வரை சென்றுவிட்டனர். கன்றுகள்‌ முன்னே ஓட, அவற்றைத் துரத்திக்கொண்டு ஓடியவர்கள் சற்றே நின்றனர்

டேய்.. இதப்பாருடா...

நாம இந்த வழியாதான வந்தோம்.
வரும்போது இப்படி இல்லையே..

இதென்னடா மலைப்பாம்பு மாதிரி இருக்கு. 

பாம்பு எங்கயாவது இவ்ளோ பெரிசு இருக்குமாடா

இது மலைடா..
வானம் வரைக்கும் இருக்கு பார். அப்பன்னா பாம்பு மலையா?

இருக்கும் இருக்கும்..

இதப்பாரேன். பாம்போட பல்லு மாதிரியே இருக்கு. 

இது ஏதோ குகைடா
உள்ள ஏதோ பளபளங்குது பார்.

மெத்து மெத்துன்னு இருக்குடா. தரை இப்படியா இருக்கும்?

சில பாறையெல்லாம் இப்படித்தாண்டா..

இந்த ப்ருந்தாவனத்தில் இன்னும் எத்தனை அதிசயம் இருக்கோ?

பயமா இருக்குடா. ஒருவேளை பாம்பா இருந்தா என்ன பண்றது? நம்மளை முழுங்கிடுச்சின்னா?

முழுங்கினா என்னடா.. நம்ம கூட கண்ணன் இருக்கானே. அவன் பாத்துப்பாண்டா..

எப்டியும் கன்னுக்குட்டியெல்லாம் உள்ள போயிடுச்சு. நாமளும் போவோம்.

கண்ணன் வரலியே.

வருவாண்டா. கொஞ்சம் ஓய்வெடுப்பான். நம்மை விட்டுட்டு எங்க போவான். நம்மை ரொம்ப பிடிக்கும் அவனுக்கு. நமக்கு ஏதாவது கஷ்டம்னா ஓடியே வந்துடுவான். பயப்படாம நட.

இருட்டா இருக்கு..
கையைத் தட்டிண்டே நடங்கடா..

குழந்தைகள் இருளில் கையைத் தட்டிக்கொண்டு ஹரி ஹரி என்று கூவிக்கொண்டே அகாசுரனின் வயிற்றுக்குள் சென்றுகொண்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் உள்ளே சென்று பாம்பின் வயிற்றினுள் வழுக்கி விழுந்து, விஷத்தின் வீரியத்தால் மாண்டனர். 

கண்ணன் இன்னும் வராததால் அகாசுரன் வாயை மூடாமல் திறந்தே வைத்திருந்தான்.

கண்ணன் இருக்காண்டா. நமக்கொரு கஷ்டம்னா ஓடியே வந்துடுவாண்டா என்று ஒரு இடைச் சிறுவன் சொன்னபோது கண்ணனின் கண்களில் நீர் துளிர்த்தது.

எத்தனை நம்பிக்கை இவர்களுக்கு என்மேல். இவர்கள் பின்னால் நானும் போனால்தான் இவர்களைக் காப்பாற்றமுடியும்.

என்றெண்ணிய கண்ணன், எழுந்து அகாசுரனை நோக்கி ஓடிவந்தான்.

கண்ணன் அவனது நாக்கில் காலை வைத்தானோ இல்லையோ வாயை உடனே மூடிக்கொண்டான் அகன். வானிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த தேவர்கள் பயந்து போய் ஹா ஹா என்று கத்தினர். கண்ணன் அசுரனின் தொண்டையில்‌ நின்று வளரத் துவங்கினான்.

அவனது மூச்சுப்பாதை தடைபட்டது. சுவாசிக்க இயலாமல் விழிகள் பிதுங்க, இங்குமங்கும் புரண்ட மூச்சு அவனது மண்டையைப் பிளந்துகொண்டு வெளியேறியது.

பாம்பின் பிராணன் வெளியேறியபின்,  தன் நண்பர்களையும் கன்றுகளையும் யோக சக்தியால் வெளிக் கொணர்ந்து தன் அமுதப் பார்வையால் உயிர்ப்பித்தான் கண்ணன். 

அப்போது பாம்பின் உடலிலி்ருந்து ஒரு பெரிய ஜோதி வெளியில் வந்து காத்திருந்தது. கண்ணன் அகாசுரனின் உடலிலிருந்து வெளியே குதித்ததும், எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த ஜோதி கண்ணனின் திருமேனிக்குள் சென்று மறைந்தது.

வானிலிருந்த தேவர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள் அனைவரும் ஆடிப் பாடி, வாத்யங்கள் இசைத்து மலர் தூவினர். இவ்விஷயத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ப்ரும்மா மிகவும் வியந்துபோனார்.

கண்ணனின் ஐந்தாம் வயதில் நடந்த இந்த லீலையை இடைச்சிறுவர்கள் ஒரு வருடம் கழித்து ஆறாம் வயதில் தத்தம் வீட்டில் சென்று விவரித்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment