Wednesday, January 8, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 380

இறைவனின் அழகு மிக்க திருமேனியை ஒரு முறை மனத்தில் நினைப்பவர்க்கே ஸாலோக்ய முக்தி கிட்டும். என்றால் இறைவனே அசுரனின் உடலினுள் நுழைந்தார் என்றால் அவனுக்கு முக்தி கிட்டாமல் இருக்குமா?

பரீக்ஷித் கேட்டான். மஹரிஷீ, ஐந்து வயதில் நடந்த லீலையை சிறுவர்கள் ஒரு வருடம் கழித்து ஆறாம் வயதில் வீட்டில் சொல்வானேன்? இடைப்பட்ட  ஒரு வருடம் என்ன செய்தார்கள்? ஒரு வருடத்திற்கு முன்பாக நடந்த லீலையை எப்படி அன்று நடந்ததுபோல் கூறமுடியும்?
இது பெரும் விந்தையாக இருக்கிறதே. விளக்கிக் கூறுங்களேன் என்றான்.

இதைக் கேட்ட ஸ்ரீ சுகர் பரீக்ஷித் மிகவும் கவனமாகக் கதை கேட்பதை மிகவும் பாராட்டினார். பின்னர் அதை விளக்குவதற்காக கண்ணனின் லீலைகளை நினைத்தவர் அப்படியே தன்வயமாகிவிட்டார். வெகுநேரம் கழித்து சுதாரித்துக்கொண்டு தன்னிலை அடைந்து மீண்டும் கூறலானார்.

ஸாதுக்களின் வாய், காது, இதயம் மூன்றும் இறைவனின் புகழைப் பாடுவதிலும், கேட்பதிலும், நினைப்பதிலுமே ஈடுபடுகின்றன. அவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் புத்தம் புதிதாகத் தெரியும்.
இவ்விஷயம் தேவ ரகசியமாகும். இருப்பினும் நீ கேட்டதால் கூறுகிறேன். குருவானவர்  தன் பிரிய சிஷ்யனிடம் எதையும் மறைப்பதில்லை அல்லவா?

என்றார்.

அகாசுரன் வாயிலிருந்து வெளியில் வந்த குழந்தைகளைப் பார்த்து கண்ணன் கூறினான். 

தோழர்களே. அந்த மணல் திட்டைப்‌ பாருங்கள். தூய்மையான மணல், சுற்றி நிறைய பூக்களும், வண்டுகளும், பறவைகளுமாக மிகவும் அழகாக இருக்கிறது. நாம் அங்கு சென்று சற்று நேரம் விளையாடலாம். பின்னர் அங்கேயே உண்ணலாம். கன்றுகளும் ஆற்று நீரைப் பருகிவிட்டு அங்கேயே புல் மேயட்டும்.

கண்ணன் ஒரு விஷயம்  சொன்னால் மறுப்பேது?

அப்படியே செய்யலாம் என்று கூக்குரலிட்டுக்கொண்டு குதித்துக் கொண்டு கிளம்பினர் சிறுவர்கள்.

அங்கே சென்றதும், கன்றுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, நடுவில் வந்து வட்டமாக உட்கார்ந்துகொண்டார்கள்.

கண்ணன் எங்கே அமர்ந்தாலும், மற்ற சிறுவர்களின் முகம் வாடியது. எல்லாருமே கண்ணன் பக்கத்தில் அமர ஆசைப்பட்டனர்.

கண்ணன் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. எனவே, நடுவில் வந்து அமர்ந்து கொண்டான்.

அவரவர் உறியைத் திறந்தனர். கையில் வைத்துக்கொண்டு சாப்பிட முடியவில்லை. எனவே அவரவர் ஓடிச்சென்று, இலை, மரப்பட்டை முதலியவற்றைக் கொண்டுவந்து பாத்திரமாக வைத்துக்கொண்டனர்.

தினமும் பழைய சோறு கொண்டுவருகிறார்கள் என்பதால் கண்ணனுக்கு அவர்கள் மீது அதீத பரிவு இருந்தது. ஒருநாளாவது விதம் விதமாக உணவு கொண்டுவரட்டும் என்று நினைத்து முதல்நாளே சொல்லிவிட்டான்.

நாளைக்கு யார் யாருக்கு என்னென்ன வகையான உணவு கொண்டுவரமுடியுமோ கொண்டுவரலாம்.

ஆளாளுக்கு புளியோதரை, சப்பாத்தி, கதம்ப சாதம், தேங்காய் சாதம், எலுமிச்ச சாதம், அப்பம், வடை, சர்க்கரை பொங்கல், லட்டு, பால் பேடா, பாயசம், அப்பளம், ஊறுகாய் என்று விதம் விதமாக கொண்டு வந்திருந்தனர்.
கண்ணனும் அம்மாவிடம் சொல்லி நிறைய வகை உணவுகளைத் தயார் செய்து கொண்டுவந்திருந்தான். 

சோற்று மூட்டையைத் திறந்ததும் அத்தனை குழந்தைகளும் ஒரு சேரச் செய்த காரியம் என்ன தெரியுமா?

அதிலிருந்து ஒரு கவளம் எடுத்து, கண்ணா நீ சாப்பிடு என்று நீட்டியதுதான்.
பசி வேளையில் உணவைப் பார்த்ததும் அள்ளி வாயில் போட்டுக்கொள்ளாமல் எல்லாக் குழந்தைகளும் முதலில் கண்ணனுக்கு என்று கொடுத்ததும் நெகிழ்ந்துபோனான் கண்ணன். 
இவர்களுக்காக நான் என்னதான் செய்துவிட முடியும்? என்று எண்ணினான்.

தன்னைச் சுற்றி 
கண்ணா லட்டு சாப்பிடு, கண்ணா, சர்க்கரைப் பொங்கல், என்று நீட்டிய கரங்கள் எல்லாவற்றிலிருந்தும் ஒரு வாய் வாங்கிக் கொண்டான். அவனும் தான் கொண்டு வந்தது எல்லாவற்றையும் கொடுத்தான்.

உணவின் சுவை பற்றிப்‌ பேசிக்கொண்டே உண்டார்கள். சிரிப்பும் கும்மாளமுமாக அதிர்ந்தது. 

நண்பர்களுடன் சேர்ந்து உண்பது எத்தனை சுகமான தருணம்! அதிலும் இறைவனுடன் உண்பது? சொல்வதற்கு வார்த்தைகள் ஏது?

கடைசியாக இருந்த ஒரு லட்டை ஒரு சிறுவன் வாயில் போட்டுக் கொண்டு விட, ‌அதற்குள்‌ கண்ணன் எனக்கு? என்று கேட்டுவிட்டான்.

உனக்குதான் கண்ணா எடுத்துக்கோ என்று ஆவென்று காட்டினான் சிறுவன். அவன் வாயிலிருந்து எடுத்து உண்டான் கண்ணன். எனக்கு? என்று இன்னொருவன் கேட்க இந்தா எடுத்துக்கோ ‌என்று கண்ணன் ஆ காட்ட, கண்ணன் வாயிலிருந்து எடுத்து அவன் உண்ண, 

அக்காட்சியை வானிலிருந்து பார்த்த தேவர்கள் மலைத்துப் போயினர்.
இத்தனை சௌலப்யமா? தாங்களும் பூமியில் பிறக்காமல் போனோமே என்று வருந்தினர்.

அனைத்துலகையும் படைத்த இறைவன் சாதாரண ஜீவன்களுடன் இப்படிக் கலந்து பழகுவானா?

ப்ரும்மாவிற்கு இதை ஜீரணிக்கவே முடியவில்லை. இவனா யக்ஞ நாராயணன்? எச்சில் நாராயணாக அல்லவா இருக்கிறான்?

தலையை உதறிக்கொண்டார். பகவானை அப்படி நினைக்கக்கூடாது. எப்படி நினைத்தாலும் சமாதானம் ஆகவில்லை. புன்முறுவலுடன் கண்ணன் அவர் மீது மாயையை வீசினான். 

இவன் பகவானா இல்லையா என்று சோதித்துப் பார்த்துவிடுவோம்.
ஒரு‌ முடிவுக்கு வந்தார்  ப்ரும்மா.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment