Thursday, September 26, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 336

எங்கும்‌நிறை இறை இவ்வளவு சுலபமாக ஓரிடத்தில் அடைந்து தன்னை எளிமைப்படுத்திக்கொள்ளுமாகில் வாய்ப்பை விடலாமா?

ப்ரும்மா முதலான அத்தனை தேவர்களும் தேவகியை வலம் வந்து துதிக்கலாயினர்.

ஐயனே! தாங்கள் தங்கள் அடியார்களைக் காப்பதொன்றே கொள்கையாய் உடையவர்.
உண்மை ஒன்றினாலேயே அடையத் தக்கவர். முக்காலத்திலும் நிலைத்திருக்கும்‌ உண்மைப் பொருள்.

ஐம்பெரும்பூதங்களுக்கும் காரண வஸ்து. அவற்றின் அந்தர்யாமியாக இருப்பவர்.
அவை அழிந்தாலும் தான் அழியாமல் நிற்பவர். நேர்மை, இன்சொல் ஆகியவற்றால் அடையத் தக்கவர். இவ்வாறு எல்லாவகையிலும் சத்யமாய் விளங்கும் தம்மைச் சரண் புகுந்தோம்.

இவ்வுலகத்தை ஒரு மரமாகக் கொண்டால், அது பிரக்ருதியை (இயற்கை) ஆதாரமாகக் கொண்டது.
இன்ப துன்பங்கள் எனும் இரு பழங்கள் கொண்டது.
ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களே வேர்கள்.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை அதன் சுவைகள்.

ஐந்து ஞானேந்திரியங்களும் அதன் விழுதுகள்.

சோகம், மோகம், ஜரை, ம்ருத்யு, பசி, தாகம் என ஆறு தன்மைகள் கொண்டது.

தோல், இரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து ஆகிய ஏழு போர்வைகள் உடையது.

ஐம்பூதங்கள், மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய எட்டு கிளைகளும், கண், காது, மூக்கு, வாய் என முகத்தில் ஏழும், கீழே இரண்டுமாய் ஒன்பது வாயில்களும் கொண்டது.

பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், க்ருகரன், தேவதத்தன், தனஞ்ஜயன் ஆகிய பத்து வாயுக்களும் அதன் இலைகள்.

இம்மரத்தில் ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரு பறவைகள்‌ உள்ளன.

இம்மரத்தின் தோற்றத்திற்கான காரணம் தாங்களே. அது ஒடுங்குமிடமும் தாங்களே. காப்பவரும் நீரே.அறிவிலிகள் இவற்றை வெவ்வேறாய்க் காண்கின்றனர்.

பேரறிவாகவும், ஆத்மாவாகவும் உள்ள தாங்கள் உலகின் நலனுக்காகப் பல வடிவங்களை ஏற்கிறீர்கள். அவை நல்லவர்க்கு இன்பம் அளிப்பவை. சத்வகுணம் பொருந்தியவை. தீயோர்க்கு நெருப்பைப் போன்றவை.

அடியார்க்கருள்பவரே! கருணை கொண்ட சாதுக்கள் எளிதில் கடக்க இயலாத சம்சாரக் கடலை தங்கள் திருவடியாகிய மரக்கலம் கொண்டு தாங்களும்‌ கடந்து, பிறருக்கும் உதவுவதற்காக இங்கேயே விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.

சிலர் தாங்கள்‌ முக்தி பெற்றுவிட்டோம் என்ற இறுமாப்பில் பக்தி செய்யாமல், கீழே விழுகின்றனர்.

தங்களிடம் அன்பு கொண்ட அடியவர்கள் எந்நிலையிலும் நல்வழியினின்று வழுவுவதில்லை. எவ்வித இடையூறுகள் வந்தாலும் அவற்றால் பயமின்றி எதிர்கொள்கின்றனர். ஏனெனில் அவர்களைக் காப்பவர் தாங்களே.

தாங்கள் ஸத்வ ஸ்வரூபமாக இருப்பதால், ஸத்வகுணத்தாலேயே தங்களைக் காண முடியும்.

மனத்தின் சாட்சியான தங்களை வாக்காலும், மனத்தாலும் அனுமானிக்க இயலுமே தவிர, தங்களது பெயரும் வடிவும் நிரூபிக்கத் தக்கவை அல்ல. ஆயினும் உபாசனைகளால் அடியவர்கள் தங்களை உணர்கிறார்கள்.

தங்களது திருநாமங்களை செவியால் கேட்டு, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்பவனுக்கு மீண்டும் பிறவி இல்லை.

தங்கள் திருவடிகளை பூமியில் வைப்பதாலேயே பூமியின் சுமை நீங்கும்.

மிக அழகிய, மெல்லிய, இலச்சினைகள் பொருந்திய தங்கள் திருவடிகளையும், தங்கள் கருணையையும் நாங்கள் நேரடியாகக் காணப்போகிறோம். இதைவிடப் பேறு ஒன்றுண்டா?

தங்கள் பிறப்பிற்குக் காரணம் தங்கள் திருவிளையாடலே.

தாயே! தேவகீ! தங்கள் பாக்யவசத்தால் பரம்பொருளான இறைவன், நமது நன்மைக்காக தனது பதினாறு பூரண கலைகளுடனும் தங்கள் திருவயிறு வாய்த்துள்ளார். கம்சனைக் கண்டு பயம்‌கொள்ளாதீர்கள். தங்கள் புதல்வன் அனைவரையும் காப்பார்.

இவ்வாறு துதித்துவிட்டு அனைத்து தேவர்களும் கிளம்பினர்.

அனைத்தையும் தேவகி கனவில் நடக்கிறது என்றும் திவ்ய சொப்பனம் என்றும் நினைத்தாள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment